Monday, March 15, 2010

ஒப்பீடு

எண்ணங்களை வண்ணங்களாக்கி
வார்த்தைகளால் வரைந்த ஓவியம்
ஒலியும் ஒயிலும் மிளிரும் காவியம்
கனிவான காதலின் அரங்கேற்றம்
கூடவே நடந்து வரும் கண்ணியம்
ஒப்பிலா வையமாகும் இன்பமயம்

தீட்டுவது காமத்தின் கைகளெனில்
நீக்கமற நிறைந்திருக்கும் விகாரம்
கண்ணும் கருத்தும் சேர்ந்து கூசும்
நாராசமாய் விரசம் மட்டும் பேசும்
களங்கமில்லா கற்பனையே பரவசம்
கொச்சை மொழியோர் பொய் வேசம்

செம்மையாய் செதுக்கிய நல்வைரம்
எப்பக்கம் திருப்பினும் ஒளி வீசும்
செப்பனிடா மனங்களின் வரிகளில்
அசிங்கம்தானே தளும்பி நிற்கும்
ஆழத்து முத்தென அமர காவியம்
ஆற்றில் மிதக்கும் சக்கை மீதம்

சாரமுள்ள வாழ்வில் நிலைக்கும் ருசி
அவசரமான காலம் தீர்த்திடாது பசி
ஆழ்ந்த அனுபவமோ செதுக்கும் உளி
பகுத்தறியா இச்சைகள் வெறும் வெறி
உள்ளத்து உணர்வோ உற்சாக ஊற்று
கட்டாத காமமோ அழிக்கும் காற்று

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community