Thursday, November 26, 2015

ஞானம்

IndiBlogger - The Indian Blogger Community இதுயெனவே அறியும் கணம்
பிறக்கும் போதிமர ஞானம்
மாறி மாறி வரும்
பகலும் இரவும் 
இன்பமும் துன்பமும்
நிலையாமை நிலையானது 

Tuesday, November 24, 2015

விதியா

IndiBlogger - The Indian Blogger Community பற்றி கொள்ளத்தானே
பஞ்சும் நெருப்பும்
விட்டிலும் விளக்கும்
கொம்பும் கொடியும்
இரும்பும் காந்தமும்
அழிவா ஆதரவா
இரண்டும் இயல்பா
வியப்பான விதியா

Monday, November 23, 2015

நம்பிக்கை

IndiBlogger - The Indian Blogger Community நீ தான் நீயே தான்
பொறுப்பு உன் விதிக்கு
அழ ஆசைப்பட்டால் அழு
ஆனந்தம் வேண்டுமா 
கொட்டிக்கிடக்கு அள்ளிக்கொள்
அலை ஓய்ந்து குளிக்கவோ
நாய் வாலை நிமிர்த்தவோ
வீண் முயற்சிகள் வேண்டாம்
சம்சார சாகரம் கடக்க இருக்கு
நம்பிக்கை என்னுமோர் துடுப்பு

Friday, November 13, 2015

குழந்தையை

IndiBlogger - The Indian Blogger Community குழந்தையைப் பார்த்துக்கொள் பத்திரமாய்
குறைந்துவிடும் உன் பாரங்கள் விசாரங்கள்
கண் விரிய பார்த்திடவேண்டும் அதிசயமாய்
கைகொட்டி ரசிக்கவேண்டும் ஒவ்வொன்றையும்
களித்திட வேண்டும் சின்ன சின்ன சாதனைக்கும்
உன் உள்மனமெனும் குழந்தையை காப்பாற்று

Thursday, November 12, 2015

இன்னுமொரு தீபாவளி

IndiBlogger - The Indian Blogger Community ஊரெங்கும் திருவிழா
வண்ண வண்ண ஒளிவிழா
கண்ணைக் கூசும் பட்டாசு
காதைக் கிளிக்கும் டப்பாசு
தெரு நிறைக்கும் ஒரு விழா
தீபாவளியென்றும் இனிய விழா
கொண்டாடிக் களித்துக் களைத்து
ஊர் உறங்கச் சென்ற பின்னே
விழித்தெழுந்தது சென்னை வானம்
இருள் பிரியா அதிகாலை வேளை
இன்னுமொரு தீபாவளி ஜனனம்
அந்தரத்தில் சுற்றின சக்கரங்கள்
ஒளி ஊற்றாய் சிதறின பூச்சட்டிகள்
தொடர்ந்தன கடகட லட்சுமி வெடிகள்
இடைவிடா தவுசண்ட்வாலாக்கள்
அரங்கேறியதோர் ஆனந்த தாண்டவம்
இயற்கையின் பரவச கூத்தாட்டம்
தாரை தாரையாய் மழையருவி
பறையாய் தரையில் கொட்டிட
நிற்காத நீர்க்கோடாய் நீண்டிட
கண்ணை மூடி லயிக்கவோர் கச்சேரி
என்றும் எனக்கது ஆகும் நீலாம்பரி
சுகமிதுவே சுபமிதுவே பூலோகத்திலே
குளிரட்டும் கொதித்த நெஞ்சங்களே
மலரட்டுமெங்கும் மனிதநேயங்களே

Thursday, November 5, 2015

Awesome!

IndiBlogger - The Indian Blogger Community It was my opinion that I had a fairly good English vocabulary. Alas! Listening to the interactions of my grandkids across the globe maintaining a happy, healthy bond playing internet games together and chatting heartily all along it dawned on me how badly my vocabulary needed updating. Diligently I garnered the newbies and tried to make use of them. The result of my efforts:
Awesome! Awesome! Awesome!
Are all we see, hear and do!
Don't question it!
We are fine!
Obviously!
Hearts dear
Feel near;
We have stuff,
That is enough.
What the heck!
Vast oceans and seas
Can they ever separate us?
That's what they all say;
Never mind what they say;
Break the brick walls!
Bake the potatoes!
And clear the wreckage!
Nubs are everywhere!
Jags they really are!
Who on earth can our road block?
We are connected round-the-clock!
World does shrink.
Dudes! We rock!
("Is this cool?"
"Yup"
"EEE..."
"Yes" mean both answers!)

Friday, October 30, 2015

பழமொழியில்

IndiBlogger - The Indian Blogger Community சொன்னேன் சுரக்காய்க்கு உப்பில்லை
விடிய விடிய கதை கேட்டு
விடிந்தபின் சீதைக்கு ராமன் சித்தப்பன்
பளிச்சென புரியும் பழமொழியில்
பாங்காய் உணர்த்தும் அவை
பொருளும் பொல்லாத கோபமும்
வாய் வழி வார்த்தைகள்
வாழ்வியலின் அழகிய வெளிப்பாடு

Thursday, October 29, 2015

வாழி

IndiBlogger - The Indian Blogger Community நம்பி வாழி
நன்னெறியை
நம்பிக்கையை
நலமே கிட்டும்

Wednesday, October 28, 2015

விடுமா

IndiBlogger - The Indian Blogger Community வேண்டாம் என்றால் விடுமா
வராதே என்றால் நிற்குமா
வெறுப்பும் விருப்பும் இல்லாத
காலப் பாம்பும் கற்பனையும்

நிலையா

IndiBlogger - The Indian Blogger Community நிலையா இங்கெதுவும்
இன்பமும் துன்பமும்
மெய்யும் பொய்யும்
இன்னும் பலவும்

இரு பக்கம்

IndiBlogger - The Indian Blogger Community பொழுது புலருது ஒரு பக்கம்
உறங்கச் செல்லுது மறு பக்கம்
பல மாதமாய் நான் இந்தப் பக்கம்
புது அனுபவம் இந்த இரு பக்கம்

பழுத்த இலைகள்

IndiBlogger - The Indian Blogger Community அழுகை எனக்கு வரத்தான் செய்கிறது
பழுத்த இலைகள் விழ பார்க்கையில்
பழைய பள்ளித் தோழி பறந்தாள்
காலையில் கடிதம் சொன்ன தகவல்

அனுபவம்

IndiBlogger - The Indian Blogger Community பாடம் படிப்பது பள்ளியறையில்
பட்டம் பெறுவது தாய்மைப்பேற்றில்
பெருமை கிடைப்பது பாட்டியாவதில்
பிறந்த பலனின் பூரண அனுபவம்

ஆண்டவன்

IndiBlogger - The Indian Blogger Community கண்ண தாசனின் கவிதை: வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்.கடைசியில் அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நானெனச் சொன்னான்

ஞானம்

IndiBlogger - The Indian Blogger Community நான்தானே ஏமாந்தது
கானல்நீர் பின் ஓடியது
நாய் வாலை நிமிர்த்த
கல்லில் நார் உரிக்க
சக்தி விரயம் ஆனதே
ஞானம் இன்று வந்ததே

கனவு

IndiBlogger - The Indian Blogger Community சொன்னதன்றோ அதிகாலை கனவு
அதிலே எத்தனை அழகு தெளிவு
கிட்டும் உன் மனம் போல் வாழ்வு
எழுந்து வா காப்பி ஆறப்போகுது

Thursday, October 15, 2015

தோழி

IndiBlogger - The Indian Blogger Community என் பிரியமான தோழியே
விபரம் தெரிந்த வயதிலே
அறிமுகம் னவளே
இன்று வரை என் முகம்
பார்த்து நேசிப்பவளே

மையிட்டு பொட்டு வைத்து
அணிமணிகள் பூட்டிக் கொண்டு
தலை நிறைய பூவை சூட்டிய 
அலங்காரம் ரசிப்பவளே
என் வளர்ச்சியை மலர்ச்சியை
பார்த்து பூரித்துப் போனவளே

என் கடைக்கண்ணில்
ஒளிந்திருக்கும் கள்ளச்சிரிப்பை
கண்டு மகிழ்ந்திடுவாயே
கண்ணுக்கடியில் கருவளையம்
கரிசனமாய் கவனிப்பாயே

சட்டென்று முகவாட்டத்தை
எண்ணங்களின் ஓட்டத்தை
கண்களில் எழும் கனவுகளை
இதழோரம் பூக்கும் முறுவலை
கோபத்தில் கன்றிப் போனதை
கண நேரத்தில் கணித்திடுவாயே

கனிவாய் துணையாய் நிற்பாயே
அந்தரங்கமாய் நான் கொட்டும்
குதூகலங்களை குமுறல்களை
குலுங்காமல் தாங்குவாயே

காதோரம் முதல் நரை கண்டு
நான் கலவரம் மிகக் கொண்டு
துக்கித்து நின்றபோது
துடுக்காக கேலி பேசி
தடுத்தாட்கொண்டவளே
தனை உணர வைத்தவளே
உனைப் போல் உண்மையான
நம்பகமான நட்பு நிறைந்த
உறுதுணை வேறறியேனே

சம்சார சலசலப்பை உன்னோடு
பகிர்ந்து கொண்டபோதும்
பாதித்த அத்தனை அனுபவமும்
பாடம் போல் ஒப்பித்தபோதும்
உலகம் அழகாய் தோன்றியபோதும்
ஊரும் உறவும் வெறுப்பேற்றியபோதும்
பருவத்தோடு பக்குவமாய் வளர்ந்து
நுரை அடங்கி நிதானம் வந்தபோதும்
நெஞ்சத்து எல்லைகள் “நானை” தாண்டி
வானத்துப் பறவையாய் எழும்பிய போதும்
வாய் திறவாது வாழ்த்தியவளே
தோள் கொடுக்கும் தோழியே
தாயே குருவே மனசாட்சியே
கண்கண்ட மெளன சாட்சியே
என் உள்ளக்கிடக்கையை உருவத்தை
உள்ளபடி பிரதிபலிக்கின்றாய்
பாதரசம் பூசிய பளிங்கே 
போற்றுவேன் உனை எப்போதுமே

Wednesday, October 14, 2015

புது அனுபவம்

IndiBlogger - The Indian Blogger Community பொழுது புலருது ஒரு பக்கம்
உறங்கச் செல்லுது மறு பக்கம்
பல மாதமாய் நான் இந்தப் பக்கம்
புது அனுபவம் இந்த இரு பக்கம்

Tuesday, October 13, 2015

காத்திருக்க வேண்டுமன்றோ

IndiBlogger - The Indian Blogger Community

காத்திருக்க வேண்டுமன்றோ
விதை வெடித்து முளைப்பதற்கும்
குவிந்த மொட்டு மலர்வதற்கும்
குறித்து வைத்த நேரமுண்டு, கணக்குத் தவறாது-
காத்திருக்க வேண்டுமன்றோ!

புதிதாய் பொரித்த குஞ்சதுவும்
கண் திறக்க காலமுண்டு,
பூஞ்சிறகு வளர்ந்திடவும், நீலவானில் பறந்திடவும்
காத்திருக்க வேண்டுமன்றோ!

கல்லூரியாம் வாலிபச்சோலையிலே
எழுத்தில் வடிக்காத பாடமும் உண்டு,
என்றாலும் ஏட்டில் படித்ததற்கு பட்டம் பெற
காத்திருக்க வேண்டுமன்றோ!

பெற்ற பட்டம், தகுதி, திறனுடனே
பொருளீட்டி பயணம் துவங்க
பொருத்தமான வேலையொன்று கிடைத்திடவே
காத்திருக்க வேண்டுமன்றோ!

கன்னியரும், காளையரும் கண்ணால்
காதல் மொழி பேசி, கற்பனை
சிறகினிலே பறந்தாலும், தாலி தரும் காவலுக்கு
காத்திருக்க வேண்டுமன்றோ!

உயிருக்குள் உயிர் வளர்த்து
கரு தாங்கி கண் விழிக்கும் அன்னையும்
தன் மகவின் தங்க முகம் பார்க்க
காத்திருக்க வேண்டுமன்றோ!

பாலுக்கு, பேப்பருக்கு, பஸ்ஸுக்கு,
ரேஷனுக்கு, பென்ஷனுக்கு, காஸுக்கு-
வாழ்கின்ற நாளெல்லாம் வருந்தி வருந்தி
காத்திருக்க வேண்டுமன்றோ!

மேற்கே அடைவான் சூரியன்;
நீண்டு நெடிதாய் மாறிடும் நிழல்கள்.
கடமை முடித்த நிம்மதிக்கும், காலனுக்கும்
காத்திருக்க வேண்டுமன்றோ!

களம் வேறு பெண்ணே

IndiBlogger - The Indian Blogger Community 

அங்கம் மறைத்து அழகை குறைத்து, 
ஆணைப் போலே ஆடை அணிந்து, 
ஒசிந்த நடையை ஒரங்கட்டி, 
தயங்கும் பாவனை தனையும் மாற்றி, 
மென்மை களைந்து விறைப்பை புனைந்து, 
சுயமாய் நின்று முனைப்புடன் முயன்று, 
அறிவுத்திறன் அனைத்தும் காட்டி, 
உயர்ந்த ஊதியம் தனையே ஈட்டி, 
சாதனை சிகரம் சடுதியில் எட்டி- 
உன்மத்த போட்டியின் முடிவிலே 
ஆணுக்கு இணையாய் ஆகிவிட்டாயா, 
இருமாந்து நிற்கும் புதிய பெண்ணே? 
அச்சம், நாணம் போன்றவை மறந்து, 
ஈவு, இரக்கம், நளினம் குறைந்து, 
கடின இனமாய்-ஆணாய்- மாறி, 
பெண்மை தகைமை இழந்ததன்றி 
பேறென பெரிதாய் பெற்றதென்ன? 
வேறென உன் களமென்றறியாமல் 
வீம்பில் வீணாய் விரயமானாய். 
வீரமுண்டு, வெற்றியுண்டு, 
தாயே உனக்கு தனியிடமுண்டு. 
தன்மை இழந்து போகாதே, 
தனை மறந்து தணலில் வெந்து 
தப்பான இலக்கை தேடாதே,

வெறும் இனிமை

IndiBlogger - The Indian Blogger Community அமிர்தம் உண்டவர் தேவர் 
கால் பாவாது 
கண் இமைக்காது 
பசி எடுக்காது 
நித்திரை வராது 
காதில் கானம் 
கண்ணில் காட்சி 
காலம் நிற்கும் 
யுகங்கள் ஆனாலும் 
மிதக்கும் உலகம் 
சொர்க்க லோகம் 
சொக்கும் யோகம் 
வெறும் இனிமை 
நினைப்பே அலுக்கிறது

உன்னோடு

IndiBlogger - The Indian Blogger Community அமுதத்தை அறிந்தபின்னே 
அருந்துவேனோ அமிலத்தை 
பித்தம் பிடித்தது எனக்கு 
பிடித்தம் இருக்கு உனக்கு 
சித்தம் சிலிர்த்துத் போகுது 
சிதறாமல் உண்ணச் சொல்லுது 
அடங்காத ஆர்ப்பரிப்பிது 
அடக்காத ஆவேசமிது 
விலங்காய் மாறாமல் 
விலங்கை மாட்டாமல் 
விருந்தை முடிக்காமல் 
வருவேன் நான் உன்னோடு 
தருவேன் மீதி பிறவிகளை 
தருவாய் உன் ஆயுட்களை

சுமை

IndiBlogger - The Indian Blogger Community ஆர்ப்பரிக்கும் அலையில்லா கடலில்லை 
கரிக்காத கடல்நீரில்லை இவ்வையத்தில் 
மலராத பூவில்லை மணம் மாறுவதில்லை 
பூவை முழுதாய் பூக்க யோசிக்கிறாள் 
பாலைத்தீவாய் தனிமை யாசிக்கிறாள் 
கனியாத பெண்மை கலியுகத்தின் சுமை

துணுக்கு

IndiBlogger - The Indian Blogger Community தூறலாய் சாரலாய் இதுவும் 
மண்வாசனையாய் இதமாய் 
மனசுக்கு சுகமாய் இருக்கும் 
நகைச்சுவை என்ற பெயரிலே 
தீங்கில்லா ஒரு சுவை அது 
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு 
எடுத்துச் சென்ற புத்தகத்தை 
நூலகத்தில் கொடுக்க வந்தான் 
கோபம் கொண்டு கத்தினான் 
எத்தனை கதாபாத்திரங்கள் 
இல்லை கதையென்று ஒன்று 
வெறும் பெயர்களே முழுதுமே 
அமைதியாக வினவினார் 
நூலக அலுவலர் கிறுக்கனிடம் 
டெலிஃபோன் டைரக்டரியை 
எடுத்துச் சென்றது நீதானா

புலன் வென்று

IndiBlogger - The Indian Blogger Community பங்கேற்க பொது நியமங்கள் 
பல மதங்களில் உண்டிங்கு 
விரதமிருப்பது அதிலொன்று 
வயிறு நிறைய விருந்துண்டு 
வருந்துகின்ற உடலுறுப்புகள் 
ஓய்வெடுக்க வாய்ப்பல்லவோ 
ஊனுக்குள் உய்யும் உயிர் 
புதுப்பிக்கும் யுக்தியல்லவோ 
சிலிர்த்தெழும் தருணமல்லவோ 
முக்கடல் சூழ் குமரிமுனையில் 
பாறையொன்றின் மீதமர்ந்து 
முழுதாய் மூன்று நாட்கள் 
நீரும் ஆகாரமுமின்றி 
விவேகானந்தர் விரதமிருந்து 
சிகாகோ சென்றடைந்து 
சிங்கமென கர்சித்த உரை 
உலகெலாம் கேட்டதுவே 
புலன் வழி சென்று வீழ்வதும் 
புலன் வென்று சாதிப்பதும் 
சரித்திரம் புகட்டும் பாடந்தானே

பாரதம்

IndiBlogger - The Indian Blogger Community கதம்பம் நம் பாரதம் 
நீண்டதோர் பூச்சரம் 
வடக்கேயிருந்து தெற்கே 
வருவாரே யாத்திரையாக 
குமரிமுனை அடைந்து 
கும்மாளமாய் முக்கடல் 
கூடி ஆரவாரம் செய்யும் 
கோலகல காட்சியை கண்டு 
பாரத தேசம் முடியும் இடம் 
இது என்பார் தீர்மானமாய் 
இல்லை என்பார் எமதருமை 
தீந்தமிழர் திரும்பி நின்று பார் 
தேசம் துவங்குகிறதிங்கென்று 
என்னே எம் இறும்பூது இது

விடலாமோ

IndiBlogger - The Indian Blogger Community கிடைத்தால் விடலாமோ 
வெள்ளத்தோடு நீந்தி வரும் 
வெள்ளி மீன்களைப் போல 
வாழ்வில் வரும் வாய்ப்புகளை 
நழுவிச் செல்ல விடலாமோ 
தக்க தருணத்தில் செயல்படு 
சந்தர்ப்பம் திரும்ப வாராது 
சிக்கென பிடித்திடு சிக்கியதை 
மண்ணை குழைத்தால் பானை 
கல்லை செதுக்கினால் சிலை 
சிரமம் பாராத உழைப்பில் 
சிந்திய வேர்வையில் 
சிந்தனைச் சிறப்பினில் 
சமைத்திட்ட விதியினில் 
சிங்காரம் துலங்குமே 
அலங்காரம் ஆகுமே

சொல்வேன்

IndiBlogger - The Indian Blogger Community சொல்வேன் நான் நடந்து வந்த பாதையில் 
புல்லுக்குள் சிரித்திருக்கும் சின்னப் பூக்கள் 
பரவசப்படுத்திய சிறு பறவை குரல்கள் 
காதுக்குள்ளே ரீங்கரிக்கும் மூதுரைகள் 
அதிசயமான அசாதாரண நிகழ்வுகள் 
அன்றாட வாழ்வின் சாதாரண அழகுகள் 
முள் தோலுக்குள் இனிய பலாச்சுளைகள் 
கருங்கல்லுக்குள் ஊறிடும் ஈரச்சுனைகள் 
முன்னோர் பதித்துச் சென்ற சுவடுகள் 
மூத்தோர் சொல்லிச் சென்ற முறைகள் 
என்னை நானாக்கிய ஆயிரம் சிற்பிகள் 
கொஞ்சம் கொஞ்சமாய் சொல்வேன் 
இதுவரை சொல்லிவந்தது போலவே 
கேட்க இத்தனை பேர் இருப்பதனால்

எதுவோ

IndiBlogger - The Indian Blogger Community தானோ அதுவோ எதுவோ 
பொதுவோ தேடவோ 
பாலுக்குள் பதுங்குகிறது 
தயிருக்குள் தடமில்லை 
வெண்ணெயாய் வெளிப்படும் 
நெய்யாய் உருகி மணக்கும் 
கண்ணாமூச்சி ஆடிடும் 
அனலில் தங்கமெனை இடும் 
பனியாய் மலரெனை தொடும் 
அடித்தால் நான் அழுவேன் 
அணைத்தால் சிரித்திடுவேன் 
பிள்ளையை கிள்ளிவிட்டு 
தொட்டிலை ஆட்டிவிடும் 
பொல்லாத திட்டமேனோ 
பிரபஞ்சமே பெரிய சக்தியே 
பேரன்பின் பெருவெளியே 
ஆக்கத்தின் பெருங்கடலே 
உன்னுள் துள்ளும் மீன் நானே

ஆதாரங்கள்

IndiBlogger - The Indian Blogger Community ஆவோம் ஆதாரங்கள் 
பொருளுள்ள வாழ்விற்கு 
கற்போம் பொருளாதாரங்கள் 
புதிய வாழ்க்கைமுறைக்கு 
தவிர்ப்போம் சேதாரங்கள் 
தலைமுறை தழைப்பதற்கு 
காப்போம் சுகாதாரங்கள் 
அகம் புறம் மகிழ்வதற்கு 

நன்று

IndiBlogger - The Indian Blogger Community எல்லாம் வேகம் இன்று 
பிரதானம் தேகம் என்று 
மூடாத ரோகம் ஒன்று 
மேலை நளபாகம் தின்று 
காணாத கானகம் சென்று 
காசுக்கு சேவகம் நின்று 
நாமும் இச்சோகம் கொன்று 
ஒழிப்போம் பாதகம் நன்று

மனம் போன போக்கில்

IndiBlogger - The Indian Blogger Community மனம் போன போக்கில் போவது 
மனிதரின் அடையாளமாகுமோ 
அணை கட்டி நீர் தேக்கி 
வரப்பு கட்டி பயிர் வளர்க்க 
வெள்ளாமை கிடைக்குமே 
காட்டாற்றை ஓட விட்டு 
களை மண்ட காடு வளர்க்க 
கண்ட பலன் என்னவோ 
புலனெல்லாம் நெறிப்படுத்தி 
நடக்கையிலே பயணமினிது

இல்லை

IndiBlogger - The Indian Blogger Community இல்லை இனி எல்லைகள் இல்லை 
இருக்க இடம் இதுதானென்றில்லை 
திட்டமிடும் தொல்லைகள் இல்லை 
நாளை என்ற கவலை எனக்கில்லை 
சிறகை விரித்த சிறு பறவை போல் 
அந்தி வானில் பறந்து செல்கிறேன்

உடம்பு

IndiBlogger - The Indian Blogger Community சீராட தாய்வீடு வந்த மகளை
வழியனுப்ப விமான நிலையத்தில்
கண்ணாடித்தடுப்புக்கப்பால்
கையசைக்க காத்திருக்கையில்
தாண்டிச் சென்றனர் சீருடையில்
தளிர் மேனி தழுவிய சேலையில் 
ஒயிலான பொம்மைகள் போல்
விமானப் பணிப் பெண்கள் சிலர்
கண்ட நொடியில் வியந்தேன்
இயற்கையாய் வளர்ந்த வடிவிதுவா
செயற்கையாய் செதுக்கிய வடிவல்லவா
ஏனோ நினைவுக்கு வந்தது
என்றோ வள்ளுவன் வர்ணித்தது
"என்பு தோல் போர்த்திய உடம்பு"

ஒரு நாளை

IndiBlogger - The Indian Blogger Community வருடத்தில் ஒரு நாளை
கொண்டாடிக் கொள்வோமோ
மொத்தமாய் மீதி நாளை
தாரை வார்த்திடவோ
தரணியில் ஆடவர்க்கே
உரிமைக்குரல் உயர்த்தவும்
உயர்வை எண்ணி பூரிக்கவும்
கூட்டம் கூட்டி களிக்கவும்
பேட்டி அளித்து முழங்கவும்
சாதனை பட்டியல் வாசிக்கவும்
எட்டிய சிகரம் விளக்கவும்
இன்னும் கனவுகள் விரியவும்
ஒரு நாள் ஒதுக்குதல் அநீதி
வருடம் முழுதும் விழித்திரு
மணம் வீசி முகிழ்த்திரு
மறக்கவிடாதே மற்ற நாளில்
மாதர் தம் மகிமைகளை
மடமையில் மங்கிடாத 
மாபெரும் மாண்பினை
மறந்துவிடாதே தினமும் மலர
மங்கையே மாசறு மணியே
மணம் குன்றாத மகிழம்பூவே
மானிட சொர்க்கத்தின் மையமே

இல்லத்தரசன்

IndiBlogger - The Indian Blogger Community 

அடியே என் கண்ணாட்டி
கடியாரம் ஓடுதடி
நேரந்தான் ஆகுதடி
மெதுவாக எழுந்திரடி
இந்தா காப்பித் தண்ணி
சூடா குடிச்சிரு தாயி
குளிச்சிபுட்டு வந்துவிடு

முந்திரியும் மிளகும் மினுக்க
வெண்பொங்கலும் உனக்காக
மல்லியப்பூ இட்டிலியும்
கொத்தமல்லி சட்டினியும்
பூரியும் கிழங்கும் கூட
மேசையிலே வச்சிருக்கேன்
பரிமாற காத்திருக்கேன்

பிள்ளைகள குளிப்பாட்டி
உடுத்திவிட்டு உண்ணவச்சி
மத்தியான உணவு கட்டி
புத்தகப்பையோட பள்ளிக்கு
அனுப்பி வச்ச கையோட
கழுவிக் கவுத்தி முடிச்சிருவேன்
பெருக்கித் துடச்சி வச்சிருவேன்
துவச்சிக் காய போட்டுப்புட்டு
சின்னத் தூக்கம் போடுவேன்

சிற்றுண்டி செஞ்ச பின்னே
பள்ளி விட்டு வந்ததுகளுக்கு
மூக்கு சிந்தி முகம் கழுவி
பாடம் சொல்லிக் கொடுத்து
கூட விளையாடி கதை சொல்லி
படுக்க வச்சி போர்த்திப்புட்டு
கொட்டாவிகள விட்டபடி
தொலைகாட்சி பாத்துக்கிட்டு
நீ வரும் வழி மேல விழி வச்சி
காத்துத்தான் கிடப்பேனே

களச்சிப் போயி வருவாயே
உன் விரல் நீவி விட்டபடி
ஆசையா பேசி அசதி போக்கி
உணவூட்டி உறங்க வைப்பேன்
மாடா உழச்சி ஓடா தேஞ்சி நீ
கட்டு கட்டா கொண்டு வந்து
குடும்பத்தோட கும்பி குளிர
கஞ்சி ஊத்தி காப்பாத்துற
உன் கை பிடிச்ச பாக்கியசாலி
கரண்டி பிடிச்ச கணவன் நான்
நிழலில் வாடாம நானிருக்க
நிதமும் வதங்குற வனிதைய
வாதையின்றி வச்சிருப்பேனே
அந்நிம்மதியில் உறங்குவேன்
அதிகாலைல எந்திரிக்கணுங்கற 
ஒத்த நெனப்போடதானே

தூங்கா நகரம்

IndiBlogger - The Indian Blogger Community தூங்கா நகரம் இதுவே
நீங்கா இன்பம் தருவது
பகலோ இரவோ அறியாது
பாட்டு தொடர்ந்து கேட்டிட
பட்டி மன்றங்கள் நடத்திட
பழங்கதைகள் பகிர்ந்திட
பதில்கள் பலவும் பெற்றிட
பொழுதை நன்கு போக்கிட
சொற்சிலம்பம் ரசித்திட
கருத்து வாட்கள் உரசிட
பொறிகள் பறந்து சிதறிட
மத்தாப்பூ மழை சிந்திட
தினமும் தீபாவளியிங்கு
ஏறிச் செல்லுமிப் படிக்கல்
கூராக்கும் சாணைக்கல்
கனவுகள் ஆடும் மேடை
குப்பைகள் குவியும் கூடை
உறக்கம் மறந்த நாட்களும்
உற்சாகம் மிகும் ஆட்களும்
வளர்பிறை போல் காணுதே
தொடர்கதையாய் ஆனதே
தூண்டில் இதிலே சிக்கியே
துடிக்கும் மீன்கள் கோடியே
ஒட்டிக்கொண்ட தொல்லையோ
விடுதலைதான் இல்லையோ
தொடர்புகளின் எல்லையோ
மணக்கும் பூக்கொல்லையோ
மதுவுண்ணும் வண்டானோம்
மயங்கிக் கிடக்கின்றோம்

ஒப்பீடு

IndiBlogger - The Indian Blogger Community 

எண்ணங்களை வண்ணங்களாக்கி
வார்த்தைகளால் வரைந்த ஓவியம்
ஒலியும் ஒயிலும் மிளிரும் காவியம்
கனிவான காதலின் அரங்கேற்றம்
கூடவே நடந்து வரும் கண்ணியம்
ஒப்பிலா வையமாகும் இன்பமயம்

தீட்டுவது காமத்தின் கைகளெனில்
நீக்கமற நிறைந்திருக்கும் விகாரம்
கண்ணும் கருத்தும் சேர்ந்து கூசும்
நாராசமாய் விரசம் மட்டும் பேசும்
களங்கமில்லா கற்பனையே பரவசம்
கொச்சை மொழியோர் பொய் வேசம்

செம்மையாய் செதுக்கிய நல்வைரம்
எப்பக்கம் திருப்பினும் ஒளி வீசும்
செப்பனிடா மனங்களின் வரிகளில்
அசிங்கம்தானே தளும்பி நிற்கும்
ஆழத்து முத்தென அமர காவியம்
ஆற்றில் மிதக்கும் சக்கை மீதம்

சாரமுள்ள வாழ்வில் நிலைக்கும் ருசி
அவசரமான காலம் தீர்த்திடாது பசி
ஆழ்ந்த அனுபவமோ செதுக்கும் உளி
பகுத்தறியா இச்சைகள் வெறும் வெறி
உள்ளத்து உணர்வோ உற்சாக ஊற்று
கட்டாத காமமோ அழிக்கும் காற்று

சித்திரம்

IndiBlogger - The Indian Blogger Community

இனிய மாலை வேளையிலே
அருகிலிருக்கும் பூங்காவிலே
காலாற நடந்துவிட்டு
ஆங்கமர்ந்து காற்று வாங்கி
அமைதியில் திளைக்கையில்
கண்ணெதிரே ஓர் காட்சி
வரைந்த வண்ணச்சித்திரமாய்
விரிந்த விசித்திரமென்னே

ஆவலாய் கருத்தை இழுத்து
ஆர்வமாய் கவனம் கவர
பிறந்தது ஓர் பிரமிப்பு
எனக்குள் பெரும் வியப்பு

அங்கே புல்வெளியில்
ஓர் நடுத்தர வயது தம்பதி
உட்கார்ந்திருந்தனரே
கைகளை பின்னால் ஊன்றி
இரு கால்களை நீட்டி
ஆடவன் அமர்ந்திருக்க
அவன் முகம் பார்த்தபடி
பக்கவாட்டில் திரும்பி
அமர்ந்தபடி அவள்
மிகையில்லா ஒப்பனை
பாங்கான பட்டுச்சேலை
பளிச்சென்ற தோற்றம்
முறுவல் பூத்த முகம்

ஏதோ கதைக்கிறாள்
கனிவாய் கேட்கிறான்
கலையாத கவனமும்
மாறாத புன்னகையுமாய்
தவம் போல் மௌனம்
முழுதான அங்கீகாரம்
பேசுகிறாள் பேசுகிறாள்
பேசிக்கொண்டேயிருக்கிறாள்
விழிகளை விரித்து
விரல்களை அசைத்து
அபிநயம் பிடித்து
அனுபவித்து பேசுகிறாள்

என்னதான் பெருங்கதையோ
சிறுமியாய் கன்னியாய்
வளர்ந்த நாட்களோ
கைப்பிடித்து வந்த பின்
கண்டுவிட்ட புதுமைகளோ
பக்கத்து வீட்டு சங்கதியோ
உள்வீட்டு விவகாரமோ
பிறந்த வீட்டு பெருமைகளோ
புக்ககத்து புகார்களோ
கற்பனை முத்துக்களோ
எதிர்காலத் திட்டங்களோ
உலகத்து நடப்புகளோ
தொலைக்காட்சி தொடர்கள்
தாக்கத்தில் விமர்சனங்களோ
என்னதான் பேசினாள்
எட்ட இருந்த என் காதுக்கு
எட்டவில்லை அவள் குரல்

இதமான காற்று வெளியிலே
அவன் அமைதி அழகு
ஆமோதிக்கும் ரசனையில்
அனுசரணை தெரிந்தது
இயல்பான இசைவிருந்தது
பஞ்சு போல் மனதையாக்கும்
இன்பமான தருணங்கள்
அரிய அன்னியோன்யங்கள்
அவசியமான பொழுதுகள்
தாம்பத்ய இலக்கணங்கள்
விளக்கும் அக்கணங்கள்

மௌனத்தால் ஊக்கியவன்
மனமறிந்த மணவாளன்
மனம் திறந்த மணவாட்டி
அவளா பாரதி கண்ணம்மா
ஆம் புதுமைப் பெண்ணம்மா
உயிர் கலந்த தோழியம்மா
தோளமர்ந்த கிளியம்மா
தொய்வில்லா வாழ்வம்மா
கண் நிறைந்த காட்சியம்மா

அற்பமாய் அடித்துக் கொண்டு
குரோதத்தில் குமைந்து
விரோதங்கள் வளர்த்து
உறவு நலன் சிதைத்து
உருக்குலையும் குடும்பங்கள்
சின்னத்திரையில் மட்டுமே
என்னைச் சுற்றிய உலகத்தில்
சிங்கார சங்கீதம் இசைக்கிறது
கேட்டு மகிழ்வதென் பாக்கியம்

நாடகம்

IndiBlogger - The Indian Blogger Community நுனிப்புல் அழுதது அழகாய்
இரவின் பிரிவில் வருந்தமாய்
ஆற்ற நினைத்தது ஆதவன்
கரம் நீட்டியது ஆதரவாய்
கண்ணீர் துடைத்திடவே
இரவிற்காக காத்திருக்க
வந்தது வேறொரு இரவு
எதிர்பாரா விரைவுடனே
பசு ஒன்று மேய்ந்ததிலே
பகல் கனவு முடிந்தது

ஆசைகள் தொடரும் பாரிலே
ஆண்டவன் விரும்பும் வரையிலே
இதை புரிந்தும் புரியாமலுமாய்
மீதமிருக்கும் புல் இரவிற்காக
அழுகிறது விடிகாலையிலே
ஒத்தை மாடு வந்திடலாம்
மந்தையாய் வந்தும் மேயலாம்
மேய்ப்பவன் மனம் போனபடி
திரையோ மூடி மூடி விலகும்
தினமும் நாடகம் தொடரும்

பெண்ணே

IndiBlogger - The Indian Blogger Community


ஆதி சிவன் அன்றே தந்தான்
பாதி உடம்பை பாரியாளுக்கு
மீதியையும் அவளே ஆண்டாள்
நீதி கேட்ட ஆண்களில்லை

வாடிக்கை மறந்த நாட்களிலே
வேடிக்கை நடக்குது நாட்டிலே
கொடி பிடிக்கும் காட்சியின்று
பிடித்திட மூன்றிலொரு பங்கை

தோள் கொடுக்க வேண்டுந்தான்
தோளுக்கு மாற்றிட வேண்டுமோ
தானும் வலியவள் ஆனவள்தான்
தான் மட்டுமாய் நின்றிடலாமோ

மனைவியாய் நடந்து பழக நாளாகுமாம்
தாயாகிட ஆலோசனை செய்யணுமாம்
தானாய் மொட்டு மலரும் தயங்காமல்
பெண்ணாய் வாழக் கல்வி இருக்குதோ

மீன் குஞ்சு நீந்தக் கற்பதில்லை
பெண்மை குணங்கள் இயல்பாகுமே
சொன்ன மொழியில் ஐயம் பிறக்குது
என்ன நடக்குதின்று உலகினிலே

அடையாளம் தொலைத்த அகதிகளாய்
இடை சிறுத்தவர் இன்றிருக்கும் நிலை
நடை உடை பாவனை மாறியது கண்கூடு
கிடைத்த வெற்றியோ ஒரு வெறுங்கூடு

எதை எண்ணி எழுச்சி கொண்டாய் பெண்ணே
அதை அடைய எத்தனை இழந்தாய் கண்ணே
கதை இல்லை நீ இல்லாது மாசறு பொன்னே
இதை நீ உணராவிடில் மடிந்திடும் மண்ணே

அதிகாரம்

IndiBlogger - The Indian Blogger Community கண்கள் சிவக்குதே
மார்பு துடிக்குதே 
ரத்தம் கொதிக்குதே
பொறுமை பறக்குதே
ஆண்மை சிலிர்க்குதே
ஆவேசம் எழும்புதே

என்னவளாம் சின்னவளின்
கார் கூந்தல் கலைத்திட
மூடிய மாராப்பில் ஆடிட
மெல்லிடை தழுவிட
பொல்லாத பூங்காற்றே
ஏதுனக்கு அதிகாரம்

கனவுகள்

IndiBlogger - The Indian Blogger Community 

கனவுடன் பரிச்சயம் பிறந்த உடனே
நரி விரட்டுதென்பார்கள் கிழவிகள்
கள்ளமில்லா வயதில் கண்கள் விரிய
கதை சொல்வர் கண்ட பீதி கனவுகளை
புரியத் துவங்கும் வயதில் விழிகளில்
ஏற்றுவர் கனவுகளை விழித்துக் கொண்டே
பருவ வயதில் பல வண்ணக் கனவுகள்
பட்ட பிறகு மிச்சம் கொஞ்சம் கனவுகள்
பளபளப்புக் குறைந்து திரும்பிப் பார்க்க
அசை போட்டு மகிழும் சங்கதிகள்
அப்பட்டமாய் தெளிந்த நனவுகள்
இன்னும் இருக்கு ஆசை நினைவுகள்
IndiBlogger - The Indian Blogger Community