Thursday, May 2, 2019

குதிகால் வலி

IndiBlogger - The Indian Blogger Community ஐம்பது வயதை தொட்ட பெண்களில் பலருக்கு குதிகால் வலி என்ற அவஸ்தையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஒரு வருடமாக எனக்கும் அதே அவஸ்தைதான்.
மகளுக்கு திருமணம், அவளது பேறு காலம், மகனுக்குத் திருமணம் என அடுத்தடுத்து வேலைகளும், போதிய ஓய்வின்மையும், அதிக அலைச்சலும் கூடிய அந்த காலகட்டத்தில்தான் குதிகால்களின் மத்தியில் விண்ணெண்ற வலி தோன்ற ஆரம்பித்தது. அலைச்சல் முடிந்து, போதிய ஒய்வு எடுத்த பின்னும் வலி குறையவே இல்லை. ஆஸ்பத்திரிக்குச் செல்லவோ பயம்.
சுற்றிலும் விசாரித்ததில் மாதவிடாய் நின்ற பெண்களில் இதுபோல் குதிகால் வலி இல்லாத பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாமெனத் தோன்றியது. ஆளாளுக்கு விளக்கங்களும், வைத்தியங்களும் சொன்னார்கள். உடல் எடை கூடுவது ஒரு காரணமாகக் கருதப்பட்டது.
நம்மில் பலருக்கு நாற்பது வயதுக்கு மேல் உடல் எடை என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாகி விடுகிறதே! உடம்பில் ஈஸ்ட்ரோஜன் குறைந்ததால் இயற்கையாக ஏற்படும் வயோதிக மாற்றத்தால் குதிகாலில் வலி என்றார்கள்.
கால்களை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தாயிற்று. அளவு கொடுத்து விசேஷமாக செய்து வாங்கிய மைக்ரோசில் செருப்பை வீட்டிற்குள் அணிந்துகொண்டு நடக்கலானேன். வெளியே செல்லும் போது அணிவதற்கு அக்குபங்க்சர் செருப்பு.
மருந்துக்கடைகளில் பிரத்யேகமாக விற்கும் ஸ்டாக்கிங்க்ஸ் போன்ற ‘ஆங்க்லெட்ஸ்’ அணிந்து பார்த்தேன். விதம் விதமாய் தைலங்கள் – யூகலிப்டஸ், வேத கோடாரி, ஃபிராஞ்ச் ஆயில் – எல்லாம் தடவிப் பார்த்தும் பலனேயில்லை.
‘எலும்பு வளர்ந்திருக்கலாம், ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும்’ என்றும் சிலர் குண்டை தூக்கிப் போட்டார்கள். ‘இது எலும்பு தேய்மானம்தான். இதற்கு மருந்தேயில்லை’ என்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. பயந்து, பயந்து எப்போதாவது பொறுக்க முடியாமல் வலி மாத்திரைகளை சாப்பிட்டவளிடம்
‘ஸ்டீராய்ட் ஊசிதான் போட்டாக வேண்டும்’ என்று சிலர் பீதியைக் கிளப்பினார்கள்.
என் கால்வலி கலாட்டாவால் ரொம்ப நொந்துபோன என் குடும்பத்தினர், உருப்படியான வைத்தியம் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியபின், ஒரு எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுகினேன். என்னென்ன டெஸ்ட்டுகளோ, எவ்வளவு செலவோ என்றெல்லாம் கலக்கத்துடன் சென்ற என்னிடம் மிகவும் ஆறுதலாக பத்து வருடத்துக்கு இந்த குதிகால் வலியை தள்ளிப் போடுவது மிகவும் சுலபம் என்றார். அப்போதைய வலிக்கு ஐந்து நாளைக்கு மாத்திரைகள் தந்துவிட்டு வலி குறைந்ததும் எளிமையான பிஸியோதெரபி எக்ஸர்சைஸ்களைச் செய்து வரும்படி கூறி அனுப்பிவிட்டார்.
‘கொஞ்ச காலத்திற்கு அதிக பளுவை தூக்கக் கூடாது. அடிக்கடி மாடிப்படி ஏறக்கூடாது. காலை அதிக நேரம் தொங்கவிட்டபடி அமர்ந்து நீண்ட தூரம் ரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்றார்.. பொதுவான யோசனையாக உடல் எடை கூடாமலிருக்க உணவில் கிழங்குகளை குறைக்கச் சொன்னார்.
பயங்கரமான சிகிச்சைகளை, செலவை எண்ணி பயந்த எனக்கு இவ்வளவு ஈசியாக டாக்டர் சொல்லிவிட்டது பெரிய நிம்மதியாக இருந்தாலும், அவர் சொன்ன இந்த சின்னச் சின்ன எக்ஸர்சைஸால் குதிகால் வலி போகுமோ, போகாதோ என்ற அவநம்பிக்கை ஏற்பட்டது.
ஆனாலும் மிகுந்த கீழ்ப்படிதலுடன் செய்ய ஆரம்பித்தேன். முதலில் சில நாட்களுக்குப் பெரிதாக முன்னேற்றம் தெரியாமல் கவலையாகக் கூட இருந்தது. விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்த பயிற்சியால் சில வாரங்கள் கழித்து, முதலில் ஒரு காலில் வலி முற்றிலும் போய்விட்டது.அடுத்து மற்றொரு காலிலும் வலி கிட்டத்தட்ட போய்விட்டது. எனக்கே இது நம்பமுடியாத ஆச்சரியமாய் இருக்கிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை நன்றாக இயங்கச் செய்து எனது நீண்ட நாள் கால்வலியை விரட்டிய எளிய (மாஜிக்?!) எக்ஸர்சைஸ் இதுதான். கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள்பக்கமாய் மடக்கி பின் விரிக்கவும். அடுத்து இருபது முறை முன்னங்கால்களை உயர்த்தி தரையை தட்டவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிகால்களை இருபது முறை தரையைவிட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை மாலை இரு வேலையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.
இவ்வளவு எளிய வைத்தியம், பலனளிக்கும் வைத்தியம், பக்கவிளைவுகளில்லாத வைத்தியம் இருப்பதை குதிகால் வலியால் அவதிப்படும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்
IndiBlogger - The Indian Blogger Community