Wednesday, May 19, 2021

தருவாயா இறைவா

IndiBlogger - The Indian Blogger Community தருவாயா இறைவா தினமும் இதே நிழலை
காலையில் கொஞ்ச நேரம் கொஞ்சல்
தோட்டத்து மஞ்சள், சிகப்பு, வெள்ளை, ரோஸ்
மலர்கள், பல வித பச்சை நிறத்து இலைகள்
கைபேசியில் உலகை சுற்றி பறந்து வர
சுற்றமும் நட்பும் நலமென நிம்மதியாய்
காயும் கனியும் பருப்புகளும் கொறித்து
குட்டி தூக்கம் வாசிப்பு பந்தங்களின் விசாரிப்பு
கோபப்பறவை விளையாட்டில் குழந்தையாகி
பள்ளித்தோழிகளுடன் ஜுமில் கலந்துரையாடி
மலையாய் பாக்கியங்கள் ஓங்கி நின்றிட
மன உடல் வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொள்ள
வாடவோ தேடவோ தேவையில்லாத மோனம்
ஒளியில் குளிக்கும் ஆவி பாடாதோ கானம்

Thursday, May 6, 2021

                   பஸ்மாசுரன்

பல கோடி வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றியதாம். எப்படி தோன்றியது என்ற அரத பழசான சர்ச்சைக்குள் போகாமல் தோன்றிய பிரபஞ்சத்தில் நாமிருக்கும் பூமிக்கோளத்தின்  வரலாற்றை மட்டும் பார்ப்போம். உயிர்கள் எப்படி தோன்றின என்ற கதைகளையும் புனைசுருட்டுகளென ஒதுக்கிவிட்டு பிரதான ஆறறிவு ஜீவனான மனிதனை மட்டும் கவனிப்போம்.

ஆதிமனிதன் காட்டுமிராண்டியாய் விலங்குகளை வேட்டையாடி உண்டு மட்டும் உயிர் வாழத் தெரிந்தவனாய் குகைகளில் வாழ்ந்து வந்தான். பெண்களை, பிள்ளைகளை கட்டையால் அடித்து கட்டுக்குள் வைத்திருந்தவன், பொழுது போகாமல் குகை சுவற்றில் கோட்டோவியம் தீட்டியவன் மண்டை கபாலத்துக்குள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த ஆதி காலத்து சிறிய மூளை மெல்ல மெல்ல விழித்தெழுந்தது. தன் அளப்பரிய திறனை மெல்ல மெல்ல வெளிப்படுத்தியது.

வேட்டையாட மிகவும் தேவையான, வாழ்க்கைக்கு முக்கியமான கருவிகளை கல்லில் செதுக்கி உருவாக்கிநான். அதன் பிறகு மெல்ல மெல்ல பல பயன்பாட்டு கருவிகளை உருவாக்கக் கற்றான்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பிள்ளையார்சுழி சக்கரமாம். அதன்பின் அவன் அபூர்வ மூளை அசுர வேகத்தில் வேலை செய்தது. யந்திர புரட்சி வாழ்க்கைமுறைகளை புரட்டிப்போட்டது.

வேட்டையாடி உண்டு பசி தீர்த்தவன் நாக்கு ருசி தேடியதில் விவசாயம் செய்ய பழகினான். விளைந்த பயிரை, தானியத்தை மாவாக்க, பக்குவமாய் சமைக்க ஏதுவாக்க கல்லால் உரல், அம்மி, திரிகல் செய்து பெண்களை அவற்றில் வேல செய்ய வைத்து மேல்லிடையாள்களாக வைத்திருந்தான்.

அம்மி அரைத்தும், மாவாட்டியும் ஆயுளை கழித்து மாளாமல் அவர்களை மீட்டன மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங்கள். தினம் தினமுமா சமைப்பது என்ற நல்லெண்ணத்துடன் உருவானது ரெப்ரிஜரேட்டர்.

வியர்த்த போது பனை ஓலை விசிறியில் வீசி களைத்த கைகளுக்கு ஒய்வு தந்தது மின்சார காற்றாடி. அந்த சுகமும் போதாமல் போகவே வந்துதித்தது ஏர்கண்டிஷனர். உண்ணும் பொது, உறங்கும் பொது, உழைக்கும் பொது, பயணிக்கும் போது என எந்நேரமும் அது தேவையானதாகிவிட்டது.

காட்டுமிராண்டி மனிதன் இயற்கையின் பேராற்றலை அதன் சீற்றங்களின் பொது நிதர்சனமாய் உணர்ந்து பயபக்தியுடன், வாலை சுருட்டிக்கொண்டு இயற்கை ரூபங்களை தெய்வ அம்சங்களாய் பார்க்கத் துவங்கி வழிபட்டுவரலானான்.

பின்னர் அவன் பகுத்தறிவு பயங்கரமாய் வளர்ந்தது. சுறுசுறுப்பாய் மூளை இயற்கையை கவனிக்க, ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது. பல்லாயிரக்கணக்கான வருட அவதானிப்பு பல்லாயிரக்கணக்கான பாடங்களை புகட்டியது. காட்டுக் குதிரைக்கு கடிவாளம் போட கற்றுக்கொண்டான். மேலே, கீழே, சுற்றிலும் தீர பொறுமையாய் ஆராய்ச்சி செய்தான். பூகோளம், சரித்திரம், இயற்பியல், வேதியியல், வானசாஸ்திரம், டைனாமிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ன பிற சங்கதிகளின் அறிவை படிப்படியாக வளர்த்தான்.

பூமிக்குள் புதைந்து கிடக்கும் கணிம வளங்களை எரிபொருளாய் மாற்றி விந்தைகள் செய்யத் துவங்கினான். மின்சாரம் என்றொரு மந்திர சாவியால் ஒரு மாய மாளிகையை திறந்து ராஜபோக வாழ்வினை வாழ கற்றுக் கொண்டான்.

சக்கரத்தை வடிவமைத்தவன் சைக்கிளோட்டியதோடு நில்லாமல் அனைத்து சொகுசு ஊர்திகளையும் உருவாக்கினான். அதோ அந்த பறவை போல வாழவேண்டுமென ஆசைப்பட்டவன் விமானத்தில் பறக்க பழகினான்.

அதோ பார் நிலா என்று குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டு மட்டுமில்லாமல், நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ என்று பாடிக் கொண்டு மட்டுமில்லாமல் நிலவில் கால் பதித்துவிட்டான். மற்ற கோளங்களையும் தீவிரமாய் ஆராய்கிறான். விண்ணிலிருந்து மண்ணை கண்காணிக்கும், வழிநடத்தும் சேட்டிலைட்டுகளை விண்வெளியில் நிறுத்தியிருக்கிறான்.

பூதாகர டைனாசர்களா, ஒரு செல் உயிரியா, பூமியின் வாழ்வினங்களின் முன்னோடிகள் யார் என விஞ்ஞானிகளும் மதபோதகர்களும் ஒருவர் மண்டையை ஒருவர் உடைத்துக்கொண்டார்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தின் பூர்வக்குடிகள்ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியதை கண்டுபிடித்தார்கள். ஆதிவாசிகளை அடித்து துரத்தி குடியேறிய வந்தேறிகள் வல்லரசானார்கள். என்சாமி என்சாமி என்று பூமி முழுக்க மதத்தின் பேரால் யுத்தங்கள் நடத்தி ரத்த ஆறு ஓடவிட்டு என்ஜாயி என்றார்கள். தொடரும் கதை இது.

மக்கட்தொகை இதற்கிடையில் கட்டுக்கடங்காமல் பெருகியது. அத்தனை வயிறுகளையும் நிரப்ப அபரிதமாய் விளையும் மலட்டு பயிரெல்லாம் ஆராச்சியில் உருவானது.

வாய்க்கால், வரப்பு தகராறு, கட்டை பஞ்சாயத்து பூமியெங்கும் பரவ அந்தந்த நாட்டு ராணுவமும் போஷாக்காய் வளர்க்கப்பட்டு தோள்தட்டி பலங்காட்டும் கிங்கர கிங்காங்களாக நிறைய நாடுகள் முன்னணியில் நிற்கின்றன.

ஆதிகாலத்து விஷ அம்பு, வேல் போன்ற போர்க்கருவிகளுக்குப் பிறகு பயங்கர போர்த் தந்திரங்களும், ரசாயன ஆயுதங்களும், அசுர இன பூச்சிக்கூட்ட தாக்குதல் நூதனமும் மிரட்டலாய் அணிவகுத்து நிற்கின்றன.

கற்காலத்தில் மனிதன் கபாலத்துக்குள் விழித்தெழுந்த சின்ன மூளையின் திறன் இன்று கண்டிருக்கும் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதன் கைவசமுள்ள தொழில்நுட்ப நுணுக்கங்கள் அதி நூதனமானவை.

மனிதனுக்குப் பதிலாக யந்திரமே எல்லா வேலையையும் செய்யும் காலத்தை நெருங்கிவிட்டோம். ஹோட்டலில் உணவு பரிமாற்ற மட்டுமில்லாமல் வாகனங்களை இயக்கம் யந்திரங்களும் வந்துவிட்டன. ஆளில்லாமல் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிக்கத் துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே ஏர் பிடித்து வயலை உழுதவனுக்கு வேலை இல்லாமல் டிராக்டர்களும் நவீன உபகரணங்களும் விவசாயத்தை கைப்பற்றிவிட்டன.

முழுக்க யந்திர கட்டுப்பாட்டில் மனித சக்திக்கு வேலையில்லாத கட்டத்திற்கு வந்துவிட்ட பூமியில் அதன் மாபெரும் ஜனத்தொகையை எப்படி பார்க்கிறது அருமையாய் வளர்ச்சியடைந்த அதிசய மனித மூளை? உடைத்தெறியப்பட வேண்டிய தடைக்கல்! குப்பைத்தொட்டியில் வீசப்பட வேண்டிய வேண்டாத பண்டம்!

பெயருக்கு ஆறறிவுடன் இருந்தாலும் கீழ்மட்ட ஜீவராசிகளைப் போல் உண்டு, உறங்கி, உயிர் பெருக்கி அர்த்தமில்லாத வாழ்க்கை வாழும் இவர்கள் தேவையில்லாத பாரம். பெருகி வரும் முதியோர் ஜனத்தொகை ஒரு பொருளாதார சுமை.

மறுமலர்ச்சி காலத்து பழைய வாழும் முறைகள், நன்னெறிகள், கற்பு, கட்டுப்பாடு போன்ற கொள்கைகள் எல்லாவற்றையும் எப்போதோ கடாசியாகிவிட்டது. சுயநலமாய் சுகம் தேடி அலையும் இந்த மனித கூட்டத்தை அழிப்பது எப்படி? அறிய திறன் உடைய சிறிய கூட்டம் போதும் இந்த பூமிக்கு.

ஆண்டாண்டு காலமாய் பல நாட்டு புராணங்களிலும், சரித்திரத்திலும் பார்த்ததுதான் பேரழிவை நிகழ்த்தும் வல்லமை கொண்ட கொடிய அசுரர்களும், நூதன துஷ்ட விலங்குகளும்.

இன்றைய யுகத்தில் உருவான அசுரனே கொரோனா. புராணத்திலும், சரித்திரத்திலும் அசுரர் ஜெயித்ததில்லையே? இந்த பஸ்மாசுரன் ஜெயிப்பானா? கருணைக்கடலான கடவுள் கைவிடமாட்டார்! IndiBlogger - The Indian Blogger Community
IndiBlogger - The Indian Blogger Community