Wednesday, March 17, 2010

இயக்கம்

சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
கோடை மழை வந்தது
கொட்டி முடித்து சென்றது

கனம் குறைந்து போனதில்
வானம் தெளிவானது
குளித்துவிட்ட களிப்பில்
குளிர்ந்து விட்டது பூமி
இறுக்கம் தளர்ந்த காற்று
இளைப்பாறிக் கொண்டது

பிரளயம் பார்த்த பிரமிப்பில்
சிறகை உதறியது குருவி
புழு பூச்சி தேடி
புறப்பட்டுச் சென்றது

சேறாக ஆறாக
பெருகி வந்த மழை நீர்
பாதையோரம் படுத்திருந்த
பழுத்த இலையை
பச்சை இலையை
சம்மதம் கேளாமல்
சுமந்து சென்று
சேர்த்தது வேறிடம்

பத்திரமாய் பதிந்திருந்த
சின்னப் புல்லோ
மெல்ல நிமிர்ந்து
பெருமூச்சு விட்டது
பிழைத்துக் கொண்டேனென்று
தெருவோடு போகிற
ஒரு பசுமாடதன்
நுனி மேய்ந்து பசியாற
பெரிய வலியோடு
புரிந்து கொண்டது
கண்ணிகளை கோர்த்தவனின்
சாமர்த்திய கணக்கினை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community