Sunday, March 14, 2010

யுகப் புரட்சி

ஆண்டாண்டு காலமாய்
ஆண்டு வந்த ஆடவனின்
ஆட்சி முடிந்ததே
கட்சி மாறியதே

கண்டனம் வலுத்தது
கொண்டவனை இழுத்தது
சட்டத்தின் இடுக்கியில்
கொட்டம் மாட்டியது

வெண்ணெய் எடுத்தது பாறை அவதாரம்
பெண்ணைக் கடைந்தவன் அறுக்கும் தன் வினை
மல்லுக்கு நிற்க வேண்டாம் மங்கையிடம்
சொல்லுக்குக் கூட கிள்ளுக்கீரை இங்கில்லை

கண்டிக்க துணிந்தது அரசாங்கம்
தண்டிக்க விதிகள் அமலாக்கம்
ரத்தத்தில் ஊறியது ஆணின் அதிகாரம்
சுத்திகரிக்க உதித்தது நல்ல நேரம்

பெண்ணுரிமை ஓங்கும் காலமிது
கண்ணெதிரே நிற்கும் நீதியின்று
செல்லாக்காசாகி செய்வான் சிறைவாசம்
பொல்லா இல்லற இலக்கணத்தின் நாசம்

தீண்டுமோ அவளை அவன் விரல் நுனி
மீண்டும் மலருமோ வாடிய பூ இனி
சுட்ட மண் தான் ஒட்டுமோ
சட்டத்தால் அது இயலுமோ

கண்ணை இமை காக்காமல்
புண்ணாய் உறுத்தும் தூசானால்
போற்றும் மணியை எறிவோமோ
மாற்று மருந்தை அறியோமோ

கண்ட வெற்றியிது இனிக்கும் கனிதானா
கண்டம் கடந்து விடுபட்டிட வழியிதுவா
உடலை விடுத்தால் உயிர் ஆகும் ஆவி
கடலை பிரியாத அலைதானே இயக்கம்

பண்புகள் புரண்டு படுத்தது
மண் கலம் உடைந்து போனது
மாயத் தூக்கமிதுவோ
ஓயாத ஏக்கந்தானோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community