Sunday, March 14, 2010

பந்தம்

காட்டுக்குள்ளே திருவிழா
கதம்ப மணங்களின் ஓருலா
தென்பட்டது தேவலோகம்
உள்ளேயது கொலைக்களம்
அழைத்தது அரியணை
அடைந்தது தண்டனை

புலன்களின் பெருவிழா
புவிக்கது புனர் வாழ்வு
புதுப்புனலின் வேகம்
புரியாது நீளும் தடம்
திக்குத் தெரியாத காடிது
திகைப்பும் திகிலும் கூடுது

மானின் விழிகள் அவளுக்கு
மருண்டு போனதோ நானே
மீன்கள் போடுமோ தூண்டில்
மீனாய் பிடித்தாள் என்னை
தாலி நான் கட்டினேன்
தறியில் எனை கட்டினாள்

முள்ளாய் குத்துவாள்
மலராய் வருடுவாள்
முழுதான முரண்பாடு
முடியாத ஒரு விருந்து
கட்டெறும்பா கனிமரமா
கால்விலங்கா இரு சிறகா

குறுக்கும் நெடுக்கும் ஓட்டம்
தோற்றுப்போகும் ஆட்டம்
அடுத்து நகர்த்தும் காயெது
அவள் ஆயுதங்கள் பல நூறு
மன்னன் நகர்வது மெல்லவே
மகராணி பாய்வது பல திசை

கண்ணி வைத்து காத்திருக்கும்
கருணையில்லா வேட்டைக்காரி
விழுந்த இரையுடன் விளையாடி
விருந்துண்ணும் வினைகாரி
புலன்களில் கரைந்திடும் புதிர்
புதைந்திருக்கும் பல விடை

முறைத்து எனைப் பார்ப்பாளா
முத்தாய் கண்ணீர் உகுப்பாளா
கேள்விக்கணை தொடுப்பாளா
மௌனத்தால் கொல்வாளா
அடித்தால் அடங்குவாளா
அணைத்தால் குளிர்வாளா

ஒட்டி நடப்பதில்லை
ஒதுங்க விடுவதில்லை
யுத்தம் நிற்கவில்லை
எளிய விதிகளில்லை
புத்திக்கு புரியவில்லை
யுத்தியும் பலிப்பதில்லை

திங்களும் ஞாயிறும் அவளே
தினமும் மாறும் வானிலையே
கைகட்டி வாய்மூடி நின்றாலும்
பெட்டிப் பாம்பாய் ஆனாலும்
புயல் மழை நிற்பதில்லை
புழுக்கமும் தீர்வதில்லை

மெய்யெது பொய்யெது
காட்சியும் கருத்தும் வேறா
பின்னிப் பிணைந்த நெஞ்சிலே
பிள்ளைக் கோபம் எழுவதேன்
ஒன்று கலந்த உயிரிலே
வாட்டி வதைக்கும் ஊடலேன்

இல்லற வன்முறைகள்
ஈர்க்கின்ற இம்சைகள்
ஏடறியா இலக்கணங்கள்
மனம் மகிழும் சுகந்தங்கள்
விடுதலையில்லா ஒரு சிறை
விருப்பமானதே இத்தளை

விந்தையோ விசித்திரமோ
வேதாந்த அரிச்சுவடியோ
மாயச் சுழலிதுவோ
மீளும் வழியெதுவோ
மிச்சமுள்ளதே ஆசை
உழல்வதும் சுகமானதே

துருவங்களின் காந்தம்
இரு மனங்களின் பந்தம்
கவிதை பாடும் சந்தம்
காவியமாகும் சொந்தம்
தழைக்கின்றது நித்தம்
மானிடமெனும் விருட்சம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community