Monday, March 15, 2010

பெண்ணே

ஆதி சிவன் அன்றே தந்தான்
பாதி உடம்பை பாரியாளுக்கு
மீதியையும் அவளே ஆண்டாள்
நீதி கேட்ட ஆண்களில்லை

வாடிக்கை மறந்த நாட்களிலே
வேடிக்கை நடக்குது நாட்டிலே
கொடி பிடிக்கும் காட்சியின்று
பிடித்திட மூன்றிலொரு பங்கை

தோள் கொடுக்க வேண்டுந்தான்
தோளுக்கு மாற்றிட வேண்டுமோ
தானும் வலியவள் ஆனவள்தான்
தான் மட்டுமாய் நின்றிடலாமோ

மனைவியாய் நடந்து பழக நாளாகுமாம்
தாயாகிட ஆலோசனை செய்யணுமாம்
தானாய் மொட்டு மலரும் தயங்காமல்
பெண்ணாய் வாழக் கல்வி இருக்குதோ

மீன் குஞ்சு நீந்தக் கற்பதில்லை
பெண்மை குணங்கள் இயல்பாகுமே
சொன்ன மொழியில் ஐயம் பிறக்குது
என்ன நடக்குதின்று உலகினிலே

அடையாளம் தொலைத்த அகதிகளாய்
இடை சிறுத்தவர் இன்றிருக்கும் நிலை
நடை உடை பாவனை மாறியது கண்கூடு
கிடைத்த வெற்றியோ ஒரு வெறுங்கூடு

எதை எண்ணி எழுச்சி கொண்டாய் பெண்ணே
அதை அடைய எத்தனை இழந்தாய் கண்ணே
கதை இல்லை நீ இல்லாது மாசறு பொன்னே
இதை நீ உணராவிடில் மடிந்திடும் மண்ணே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community