மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்து
கொட்டாவி விட்ட நித்திரை வராத
நிச்சலனமான சுகமான கணங்களிலே
வெட்டவெளியில் விதைத்த வைரங்களை
விரும்பி வெறித்தேன் விழிக்கு வலிக்காமலே
மெய்யதைக் கிடத்திவிட்டு மனதை கடத்திச் சென்று
பொய் வழி நடத்தி பரவசமூட்டியதே என் கற்பனையே
பாட்டியை தன்னோடு கொண்டு சென்ற நிலவின்
மங்கிய ஒளியில் நானும் கண்டேன் பாரதியின்
பதினாறு வயது பருவ மங்கையை
கனவோடு கேட்டேன் கனிவான ஆரூடம்
கொட்டிக் கிடந்த நட்சத்திரங்களில்
துருவனும் தவமுனிவர் பத்தினியரும்
அமரரான என் குல மூதாதையரும்
மின்னிக் கிடந்து வாழ்த்தினரே
கட்டம் கட்டி குடியிருந்து
வீடு மாறி காலம் மாற்றி
காலங்காலமாய் ஆட்டி வரும் கிரகங்களுக்கும்
சோதனையும் கரைந்து போகும் கட்டமும்
கண்ணால் நானும் கண்டேனே
சலனமில்லா ககன வெளியில்
கற்பனை சிறகில் பறந்து வருகையிலே
இந்திரனின் தேவலோக தேனிசையும்
தெளிவாக கேட்டுன்புற்றேனே
உல்லாச உலா முடிந்த பின்னும்
உறங்க நான் துவங்கும் முன்னும்
வானத்துக்கு மேலே நீண்டிழுக்கும்
முடிவில்லா ஆழக்கருமையிலே
என்னவளின் கருவிழி கண்டேனே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment