Sunday, March 14, 2010

கற்பனை

மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்து
கொட்டாவி விட்ட நித்திரை வராத
நிச்சலனமான சுகமான கணங்களிலே
வெட்டவெளியில் விதைத்த வைரங்களை
விரும்பி வெறித்தேன் விழிக்கு வலிக்காமலே
மெய்யதைக் கிடத்திவிட்டு மனதை கடத்திச் சென்று
பொய் வழி நடத்தி பரவசமூட்டியதே என் கற்பனையே

பாட்டியை தன்னோடு கொண்டு சென்ற நிலவின்
மங்கிய ஒளியில் நானும் கண்டேன் பாரதியின்
பதினாறு வயது பருவ மங்கையை
கனவோடு கேட்டேன் கனிவான ஆரூடம்

கொட்டிக் கிடந்த நட்சத்திரங்களில்
துருவனும் தவமுனிவர் பத்தினியரும்
அமரரான என் குல மூதாதையரும்
மின்னிக் கிடந்து வாழ்த்தினரே

கட்டம் கட்டி குடியிருந்து
வீடு மாறி காலம் மாற்றி
காலங்காலமாய் ஆட்டி வரும் கிரகங்களுக்கும்
சோதனையும் கரைந்து போகும் கட்டமும்
கண்ணால் நானும் கண்டேனே

சலனமில்லா ககன வெளியில்
கற்பனை சிறகில் பறந்து வருகையிலே
இந்திரனின் தேவலோக தேனிசையும்
தெளிவாக கேட்டுன்புற்றேனே

உல்லாச உலா முடிந்த பின்னும்
உறங்க நான் துவங்கும் முன்னும்
வானத்துக்கு மேலே நீண்டிழுக்கும்
முடிவில்லா ஆழக்கருமையிலே
என்னவளின் கருவிழி கண்டேனே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community