அப்படி இப்படி
கோடு இழுத்தேன்
சித்திரம் ஆனது
அங்கே இங்கே
வண்ணம் தீட்ட
ஓவியம் பிறந்தது
புள்ளியை இணைக்க
கோலம் மலர்ந்தது
உயிரும் மெய்யும்
எழுத்தாய் கோர்த்து
எண்ணம் சேர்த்தேன்
எழுந்தது கவிதை
ஓரெட்டு ஈரெட்டு
எடுத்து வைத்தேன்
ஓடத் துவங்கினேன்
பந்தயம் வென்றேன்
அரிசியும் பருப்பும்
வேக வைத்தேன்
காயை அரிந்தேன்
உப்பும் காரமும்
சேர்த்து அவித்தேன்
கடுகும் உளுந்தும்
தாளித்து இறக்க
மணந்தது விருந்து
‘அ’னா ‘ஆ’வன்னா
சொல்லிக் கொடுத்தேன்
விரலைப் பிடித்து
நடக்க வைத்தேன்
வாமனன் வளர்ந்து
உலகை அளக்கிறான்
என் செல்ல மகன்
இனி செல்வ சீமான்
ஆசை ஆர்வம்
ஊற்றாய் கண்டேன்
என்னால் முடியும்
என்று நினைத்தேன்
எடுத்த காரியம்
நிறைவாய் முடித்தேன்
அஞ்சாமல் வாழ்ந்தேன்
அது போல் இறப்பேன்
நல்லது கெட்டது
யாவும் தெரிந்தது
நடந்த பாதையில்
நாலும் நடந்தது
உள்ளே வெளியே
முற்றும் புரிந்தது
பற்றும் துறவும்
பதமாய் கலந்தது
கனவே கருவாய்
கற்றது எருவாய்
துணிவே துணையாய்
தூய்மை அணியாய்
அதிராமல் நடந்திட
அயராமல் முயன்றிட
எங்கும் சத்தியம்
எல்லாம் சாத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment