Tuesday, March 16, 2010

திரை விலகியது

அது ஒரு ரகசியம்
அனைவரும் அறிந்த விசயம்
ரகசியமாய் வைத்திருக்க
ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு
புரியாத சேதியில்லை
பூடகமாய் ஊமை மொழியில்
கண்களின் சந்திப்பில்
கைகளின் கோர்த்தலில்
பரிமாறும் பழைய செய்தி
வேறொன்றை நினைப்பதில்லை
கூடிக்கூடி கூட்டமாய்
கிசுகிசுப்பாய் பேசவும்
தலையை மட்டும் ஆட்டவும்
கதகதப்பாய் உணரவும்
எதிர்பார்த்து ஏங்கவும்
கனவு கண்டு தூங்கவும்
முன்னாளின் சக்கரத்தை
அசைபோட்டு மகிழவும்
மூச்சடக்கி காத்திருந்து
பல நாளாய் பொறுத்திருந்து
பக்கம் வரும் பருவத்தை
அரவணைக்க ஆவலாய்
அத்தனை பேரும் பார்த்திருக்க
மந்திரக்கோல் பட்டது போல்
மன்னன் ஆணை கேட்டது போல்
மீட்டிவிட்ட வீணை போல்
எய்துவிட்ட அம்பை போல்
வெள்ளைத் திரை விலகியதே
புல்லும் வெடித்து முளைத்ததே
குப்பென்று பூக்கள் மலர்ந்திட
பட்ட மரம் துளிர்த்திட
சலசலக்கும் ஆறுகளும்
சங்கீதக் குயில்களும்
நிறுத்தி வைத்த இயக்கத்தை
ஆழ்ந்து கிடந்த உறக்கத்தை
நொடியில் உதறி எழுந்திட
பூலோகம் புதுக் கோலம் பூண்டதே
பாரெங்கும் புதுக்கவிதை கேட்டதே
வருடந்தோறும் இப்பருவ நாடகம்
தருகின்ற தனியான ஒரு சுகம்
செவிக்கு எட்டாத சங்கீதம்
கேட்டு சிலிர்க்குது உயிரினம்
தாளம் போடுது உள்மனம்
பொத்திவைக்க முடியாமல்
பூத்து மணக்கும் பருவமிது
கட்டிப் போட முடியாமல்
சதிராடும் வசந்த காலமிது
கொட்டி வைக்க இடமின்றி
பொங்கின்ற பேரெழில்
வழிந்தோடும் வழியெல்லாம்
விழி விரிய விருந்துண்போம்
கலி தீர்ந்து போனதென்று
களிப்போடு நகைத்திருப்போம்
கைகொட்டி மழலை போல்
சத்தமாக மகிழ்ந்திடுவோம்
பேருவகை பிறக்கிறது
புதிதாய் இன்று பூமி பூத்ததிலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community