ஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே
கரையருகே அலையடித்து ஆரவாரமா
காணா ஆழத்தில் கனமான அமைதியா
அகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும்
வாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும்
ஓடித்திரிய இடம் இன்னும் மிச்சமிருக்கு
நாடி அணியும் முத்தும் பவளமும் விளைஞ்சிருக்கு
உன் கரிக்கும் நீரையோ குடித்திட முடியாது
ஆயின் நீ தந்த உப்பின்றி உணவில் சுவையேது
உன் சாரம் நீராவியாய் மேகத்தை சூலாக்கி
வரமாக வந்து கொட்டிய மழையமுதாலே
தழைத்து செழித்து பிழைக்குது வையகம்
கண்டங்களை அணைக்கும் உன் கரங்கள்
காதங்களை அளக்கும் நகரொத்த கலங்கள்
வெப்பக்கரையில் நிற்கும் தென்னை மரங்கள்
வெள்ளிப்பனி மூடிய கடுங்குளிர் துருவங்கள்
மாலுமிகளை ஈர்க்கின்றதோர் தீராக்காதல் வலை
மொழிகளை இனங்களை இணைப்பதுன் வேலை
தாலாட்டி ஓடத்தை ஏந்துகின்ற தாயே
தள்ளாடி தடம் புரண்டும் கூட போவாயே
சித்தம் பித்தாகி புரட்டியும் போடுவாயே
ஊரை உருட்டி உலையில் போட்டு முடித்து
கரை தாண்டி கண்டம் விழுங்கி பசியாறி
ஊறு பல செய்து ஊழித்தாண்டவம் ஆடுவாயே
மறைந்திருக்கும் மர்மங்களுக்கு குறைவில்லை
மாண்டுபோனவர் எண்ணிக்கை தெரிவதில்லை
புதையுண்ட செல்வங்களுக்கோர் அளவில்லை
பிறக்கின்ற கற்பனை ஊற்றுக்கோ நிகரில்லை
செம்புலப்பெயநீராம் எம்குலப் பெண்களொத்து
காடு மலை கடந்து வந்த தீஞ்சுவை நதி நீரும்
உன்னில் உவப்பாக கலந்து உவர்ப்பானதுவே
நுரையோடு எழும்பி சளைக்காது தவழ்ந்து வந்து
கரையோடு உடைந்து போவது களிப்பான காட்சியே
எல்லா இனமும் எல்லா தினமும் உன் கரையை நாடுது
உலகே உன்னோடு விளையாடி இளைப்பாறக் கூடுது
ஆழியே எமை மயக்க மந்திரம் என்ன போட்டாயோ
மடியிலே கிடக்க வைக்க தந்திரந்தான் செய்தாயோ
புயலும் மழையும் உன் பொலிவை மாற்றவில்லையே
வள்ளலாய் உனைப் போல் மாற யாம் கற்கவில்லையே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment