பல்லடுக்கு மாளிகை
புதிரான என் மனம்
பல்லாயிரம் அறையிலே
உறையும் நினைவுகள்
பலவித நிலையிலே
பரந்து கிடக்குதே
பயந்து பதுங்கி
ஒளிந்து ஒதுங்கி
உயர்ந்து ஓங்கி
விரட்டித் துரத்தி
வாட்டி வதைத்து
வருடித் தடவி
கடையும் மத்தாய்
குடையும் வண்டாய்
கொட்டும் குழவியாய்
குற்றால அருவியாய்
குளம்பிய குட்டையாய்
செதுக்கும் உளியாய்
சிதைக்கும் கழியாய்
புதைத்த விதையாய்
பறக்கும் சிறகாய்
எம்பும் பந்தாய்
எரிக்கும் நெருப்பாய்
இதமாய் நிலவாய்
ஆறா ரணமாய்
ஆறிய வடுவாய்
ஆழியுள் துரும்பாய்
ஆலைக் கரும்பாய்
உருகும் பாகாய்
இளகா பாறையாய்
மௌனங்கள் மெதுவாய்
கால் பொத்தி நடக்கும்
சப்தங்கள் அங்கு
சதிராடிக் குதிக்கும்
சகல சாகசமும்
சட்டங்களாகும்
மோனங்கள் தவங்கள்
சமர்கள் விவாதங்கள்
வேள்விகள் கேள்விகள்
வேதங்கள் மந்திரங்கள்
தன்னிலை விளக்கங்கள்
தேடுகின்ற தகவல்கள்
ஆழ்கடல் அமைதியாய்
அமிழ்ந்து கிடந்தும்
அலையோர இரைச்சலாய்
பொங்கியும் நுரைத்தும்
நிலையில்லா காற்றாய்
நெருங்கியும் நகர்ந்தும்
வினைகள் பலவாய்
ஆரவார எண்ணங்கள்
செய்கின்ற ஆட்சி
தெரியாத காட்சி
திரை மூடிய மேடை
அரங்கேற்றும் நாடகம்
கடைந்து முடியுமோ
அமிர்தம் திரளுமோ
மோதி முடிந்த பின்
மோட்சம் கிட்டுமோ
சிறுதுளி கரைந்து
பெருவெளி எட்டுமோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment