Thursday, March 11, 2010

விசாரம்

வெள்ளித்திரை வெளிச்சத்தில்
வெகுஜன ஊடகத்தில்
மரபுகள் இல்லா
புதுக் கவிதைகள்
மதுரமில்லா
வெறும் ஓசைகள்
நல்ல பயிரிடை
நலிந்த களைகள்

சுத்தமில்லா மொழி
சத்தமான ஒலி
பாதி புரியவில்லை
புரிந்தது பிடிக்கவில்லை
சிதைந்த உச்சரிப்பு
புதைந்த புலனின்பம்
கலப்பட சந்தங்கள்
உலகமய சங்கங்கள்
அந்தரங்க தனிமை
அவையேறும் புதுமை
கூட்டத்தோடு காதலர்
கூத்தாடும் கலாசாரம்
விரசத்தில் விஞ்சி
வித்தியாசம் நாடி
விதவிதமாய் ரோதனை
விந்தையான சாதனை

குடியோடு பாட்டு
குட்டியோடு ஆட்டம்
குத்துகிற கும்மியாட்டம்
காசின் மேலே நாட்டம்
காதில் பாய்வது
இன்பத் தேனா
காய்ச்சிய ஈயமா
இசையின் பெயரில்
இம்சை திரையில்
இணையாய் அசைவுகள்
சாமியாடும் உடல்கள்
ஒட்டி உரசி
பின்னி பிசைந்து
முக்கி முனகி
தொட்டுத் தடவி
உருண்டு புரண்டு
கவ்வி கவுந்து
பொருள் பச்சை
பதிவும் கொச்சை
காதும் கண்ணும்
ஒன்றாய் நோகுது
இதுவோர் வன்முறை
இக்கட்டில் ரசனை
கற்பனை வறுமை
அழகின் வெறுமை

வரவும் செலவும்
கோடிகள் என்பர்
வர்த்தகமாகும் கலை
விலை மாதின் நிலை
வக்கிரத்தின் எல்லை
வெட்கமே இல்லை
அபத்தமா ஆபாசமா
அதிகமெது அறியோம்
அதிர்ச்சியா ஆயாசமா
அருவருப்பா எரிச்சலா
எதுவோவா எல்லாமேவா
எவரே கூற வல்லார்

சின்னத்திரையில் இதை
சித்தரிக்கவோர் போட்டி
சின்னத்தனமாய் இளமை
சீரழிகின்ற கொடுமை
கனவுகள் துரத்தி
திறமைகள் ஏற்றி
வளரும் வயதில்
வீணாகும் வாழ்வு
சிற்றின்ப சேற்றில்
சிக்குது தலைமுறைகள்
துய்க்கவும் விதிமுறைகள்
வகுத்த நம் கரைகள்
காப்பாற்றி போற்றிட
கட்ட வேண்டும் அணைகள்
காட்டாற்றை தணித்து
பாசனம் செய்திட்டால்
பயிர் செழித்திடாதோ
தாய் தலை நிமிராதோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community