Monday, October 12, 2015

என் ஒருத்தியே

IndiBlogger - The Indian Blogger Community கருப்பட்டி வட்டுப் போல 
கல்கண்டு கட்டி போல 
கரும்புச்சாறு போல 
கண்ணாட்டி நீயிருக்க 
கழுநீர் தேடிப்போவேனோ 

கொடிமுல்லை பூப்போல 
கொய்யாத பிச்சி போல 
கொழுந்து வெத்தலை போல 
கனகமணி நீயிருக்க 
கத்தாழை மேல் வீழ்வேனோ 

கயல்மீனைப் போல 
கடல் ஆழம் போல 
கருவைரமணி போல 
கண்மணி நீயிருக்க 
கசடு எனை இழுக்குமோ 

குத்துவிளக்குப் போல 
குளிர்நிலவு போல 
குன்றாத செல்வம் போல 
குலமகள் நீயிருக்க 
குப்பைமேட்டை பார்ப்பேனோ 

காக்கும் தெய்வம் போல 
கலங்கரை விளக்கம் போல 
கலையாத கனவு போல 
காதல்மனை நீயிருக்க 
கண்டவளை நினைப்பேனோ 

கானக்குயில் போல 
கானக மயில் போல 
கஸ்தூரி மான் போல 
கட்டழகி நீயிருக்க 
கால் தவறி நடப்பேனோ 

கரைக்குள் ஓடும் ஆறு போல 
களிப்பூட்டும் காற்று போல 
கவிந்து மூடிய வானம் போல 
காரிகையே நீயிருக்க 
கயமை எண்ணம் தோன்றுமோ 

கற்காத மொழி போல 
கேளாத கதை போல 
காணாத மாயம் போல 
கவிதையே நீயிருக்க 
கதி மாறிப்போவேனோ 

என் ஒருத்தியே 
எனை நிறுத்தியே 
ஏற்றம் தந்தவளே 
ஏழ்பிறவி இணைந்தவளே 
இன்பம் இதுவல்லவோ 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community