Monday, October 12, 2015

புரட்சி

IndiBlogger - The Indian Blogger Community 

காலமும் ஓடுது புரவி கட்டிய ரதமாய் 
சகடங்கள் உருளுது கற்கள் பொடிபட 
சங்கடங்கள் புரளுது பூகம்பங்களாய் 
சந்ததிகள் மாறுது புரட்சிகரமாய் 

கொண்டையை சிலுப்பி கர்வமாய் 
கோழிகளை மேய்க்கும் சேவலே 
என் கொக்கரிப்பை கொஞ்சம் 
பாரடா என்றது பெட்டைக் கோழி 

பொல்லாத தோகையை விரித்து 
ஆணவமாய் ஆடும் ஆண்மயிலே 
அகங்காரம் எனக்குமுண்டு என் 
அகவலை கேளேனென்றது பேடை 

பிடரியை சிலிர்த்து வீரமாய் கர்சிப்பாய் 
வேட்டையாடி நான் கொடுக்க உண்பாய் 
வேடிக்கைப் பார்த்து நிற்பாய் நான் பேணிட 
நானும் சுகமாய் திரிவேனென்றது சிங்கராணி 

திமிலோடு திமிர் வளர்த்த பொலிகாளையே 
கொம்பையாட்டி குளம்பால் மண் உதைப்பாய் 
கட்டிய பசு நான் இன்று கட்டவிழ்த்தேன் 
என் எக்காளம் எப்படியென்று கேட்டுக்கொள் 

தொல்லையில்லா தூரத்தில் நிலவுப்பாட்டி 
தொலைநோக்காய் கீழே பார்க்கிறாள் 
தாடையிலே கை வைத்து வியக்கிறாள் 
கோராமையென்னயிது பூலோகத்திலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community