Thursday, November 30, 2023

ப்ராப்தம்

IndiBlogger - The Indian Blogger Community
அமெரிக்காவின் பரபரப்பான பாஸ்டன் ஏர்போர்ட்டில் குனிந்து கைபேசியில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்த ரகுவின் நாசியில் பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் மெல்லிய ஓடிகொலோன் வாசனை வீசியதும் திடுக்கிட்டு தலை நிமிர்ந்து பார்த்தான். அதே வினாடி அவனைத் தாண்டிச் சென்ற புடவை அணிந்த பெண்ணும் அதிர்ச்சி அடைந்தது போல் நின்று அவன் முகத்தை பார்த்தாள்.
ரகுவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கனவு மாதிரியே இருந்தது. இந்த பாஸ்டன் ஏர்போர்ட்டில் முப்பது வருடத்துக்குப் பிறகு சுமதியை பார்ப்போம் என்று அவன் எண்ணவேயில்லை.
சுமதிதானா இவள் என்று உற்றுப் பார்த்தான். அவளேதான். சந்தேகமேயில்லை. அதே நேர் கொண்ட பார்வை. தலை முடி பாதி நரைத்திருந்தது. டை அடிப்பதை அறவே வெறுப்பவள் என்று அவனுக்கு அப்போதே தெரியும்.
அவளுக்குப் பிடித்த அதே ஓடிகொலோன் வாசனை அவளிடமிருந்து வந்ததுதான் அவனை உலுக்கி எழுப்பியது. அவள் கண்களிலும் நம்ப முடியாத அதிர்ச்சியும் ஆவலும் தெரிந்தது. அவள்தான் முதலில் மௌனத்தை கலைத்தாள்.
“ரகு, நீயா? நீ எப்படி இங்கே?”
“சுமதி, நான் கேட்க வேண்டியதை நீ கேட்கிறாய்!”
இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. நேற்றுத்தான் பிரிந்தவர்கள் போல் பேசத் துவங்கினார்கள்.
“என் நண்பனை இந்தியாவுக்கு வழியனுப்ப வந்தேன், சுமதி!”
“நான் இங்கே கல்லூரி பேராசிரியர் வேலையில் சேர வந்திருக்கிறேன், ரகு!”
“அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு, சுமதி! வா, அங்கே காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்!”
கொசுவத்திச் சுருள் போல் கடந்த காலத்து காட்சியாக இருபது வயதை தாண்டிய காதலர்கள் இருவர் பிரிய நேர்ந்தது கண் முன் விரிகிறது.
வெளியூரிலிருந்து ரகுவின் பக்கத்து வீட்டிற்கு குடி வந்த குடும்பத்தில் சுமதி என்று ஒரு சூட்டிக்கையான பெண் இருந்தாள். அவளும் ரகு படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்தாள். துருதுருவென்றிருந்த அந்த பெண்ணுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். நிமிர்ந்த நடையும், தைரியமான பேச்சும், புத்திசாலித்தனமும் கொண்ட சுமதியை எல்லோருக்கும் பிடிக்கும்.
நாளாக நாளாக ரகு சுமதிக்கிடையேயான நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும் இருவரும் வெளியூரில் ஒரே கல்லூரியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி வேறு வேறு பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து படிக்கத் துவங்கினார்கள். நட்பில் துவங்கிய அவர்கள் காதல் அழகாக வளர்ந்தது. படிப்பு முடியும் காலமும் நெருங்கியது.
ஒரு நாள் மதிய இடைவேளையில் சுமதி முகம் நிறைய சந்தோஷத்துடன் ரகுவை தேடி வந்தாள்.
“என்ன விஷயம், சுமதி? இவ்வளவு சந்தோஷமா இருக்கே?” என்று கேட்டான் ரகு.
‘இப்போதான் அப்பாகிட்டேர்ந்து போன் வந்துச்சி. நாளைக்கு அப்பா ஊர்லேர்ந்து வர்றார். கூட அத்தை மகன் முரளியும் வர்றான்..
“ஓ!” என்றான் ரகு. அந்த ஒற்றை எழுத்தின் உச்சரிப்பிலிருந்த ஏற்ற இறக்கத்தில் ஓராயிரம் அர்த்தங்கள் தொனித்தது. அதை கவனிக்காமல் அவள்
“முரளியை மாலுக்குக் கூட்டிட்டு போகணும். ஷாப்பிங் பண்ணிட்டு, சாப்பிட்டுட்டு ஒரு மூவி பார்த்துட்டு வரணும்.” என்றாள் உற்சாகம் பொங்க.
அவனிடமிருந்து மீண்டும் ஒரு “ஓ!” இம்முறை மேலும் அழுத்தமான எள்ளலுடன். கொஞ்சம் குழப்பத்துடன் அவனை பார்த்தாள் சுமதி.
“முரளியுடன் நாளை பொழுதை எப்படி கழிப்பது என்று ரொம்ப மெனக்கெட்டு திட்டமெல்லாம் போட்டிருக்கிறாய்!”
“ஆமா. அவன் ரொம்ப கலகலப்பானவன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அவனுடன் இருக்கும்போது பொழுது போவதே தெரியாது.”
“அப்படியா? அவர் என்ன படித்திருக்கிறார்? இப்போது என்ன வேலை செய்கிறார்?”
“என்ன ரகு இது? அவர் என்கிறாய் முரளியை! அவன் பத்தாம் வகுப்பு படிக்கும் சின்னப் பையன்!” ரகுமிடமிருந்து இதற்கும் “ஓ!” இந்தத் தடவை காற்றுப்போன பலூன் மாதிரி ஒரு பாவத்தில்.
சுமதியின் பெண்மன உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. ரகுவின் விபரீத கற்பனையையும், அர்த்தமில்லாத பொறாமையையும் தெளிவாக புரிந்து கொண்டாள். மனசுக்குள் கசந்தது.
ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அப்ப நான் வரட்டுமா, ரகு?” என்று கேட்டபடியே அவள் வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
அடுத்து வந்த வாரங்களில் ஒரு நாள் காலேஜ் லைப்ரரியை தாண்டி இருவரும் சென்று கொண்டிருக்கையில் உள்ளேயிருந்து லைப்ரேரியன் “சுமதி, ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்தியே அந்த புத்தகம் இன்று சாயந்திரம் ரிடர்ன் ஆகுது. ஹாஸ்டலுக்கு போகும் முன்னால வந்து வாங்கிக்கோம்மா, நான் காத்திருக்கிறேன்.”
“சரி ஸார்! அப்படியே செய்றேன்.” என்று சுமதி மகிழ்ச்சியாக பதிலளித்துவிட்டு நடந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் ரகு,”கிழத்துக்கு ஜொள்ளு ஜாஸ்தி! என்ன தைரியமா உன்னை தனியா வரச்சொல்லுது? நீ காலையில் போய் வாங்கிக்கோ” என்று கடுகடுத்தான்.
கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருந்த சுமதிக்கு அவன் எச்சரிக்கை அநாவசியமாகப்பட்டது. எரிச்சலாகவும் இருந்தது.
அடுத்தடுத்து இதே மாதிரி அவனிடமிருந்து அதிக கட்டுப்பாடுகள் வந்தது. இறுதியாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் பிரிவுபச்சார விழாவில் அவள் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அனைவரும் பாராட்டியபோது அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
முக்கியமான இறுதியாண்டு தேர்விற்கு படிக்க உட்கார்ந்தால் அவள் மனதில் நடந்த பிரளயத்தால் அவள் கவனம் சிதறியது. கவலை அதிகரித்தது.
இவனோடு சேர்ந்து வாழப்போகும் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே மிரட்சியாக இருந்தது. அமைதியாக உட்கார்ந்து ஆழமாக சிந்தித்து ரகுவின் போக்கை தெளிவாய் உணர்ந்து ஒரு நல்ல முடிவை எடுத்த பிறகே அவளால் நிம்மதியாய் பரிட்சைக்கு படிக்க முடிந்தது.
பரிட்சை முடிந்த பிறகு ஹாஸ்டலை விட்டு வெளியேறும் நாளும் வந்தது. ரகு சுமதியின் அருகில் வந்து அமர்ந்தான்.
“சுமதி, நாம் நமது வருங்காலத்தைப் பற்றி, நம் திருமணத்தைப் பற்றி திட்டமிட வேண்டும். நம் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.
சுமதியோ, “நாம் இருவரும் சந்தோஷமாய் சேர்ந்து வாழ முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, ரகு! என் சுதந்திரத்தையோ, சுயமரியாதையையோ என்னால் இழக்க முடியாது. நீ என் மீது அத்து மீறி அதிகாரம் செய்ய விரும்பும் ஆணின பிரதிநிதியாய் இருக்கிறாய். அதற்கு நான் உடன்பட முடியாது.”
ரகுவின் கலங்கிய முகத்தை பார்த்தபடியே சுமதி சொன்னாள் "ரோஜா இதழ்கள் தூவிய பாதையில் தான் பாதம் பதித்து நடக்க விரும்பும் பேராசைக்காரியில்லை நான். ஆனால் நெருஞ்சி முள் இரைந்து கிடக்கும் பாதையில் நடக்கத் துணியும் பைத்தியமுமில்லை. நாம் நல்ல நண்பர்களாய் பிரிவோம்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டாள்.
அதற்குப் பிறகு இருவரும் சந்திக்கவேயில்லை. அவள் டில்லி கல்லூரி ஒன்றில் பணி புரிய சென்றுவிட்டாள். அவன் சென்னையிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டான்.
முப்பது வருடம் கழித்து பாஸ்டன் நகரில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டார்கள்.
"பத்து வருஷமாக இங்கேதான் வேலை பார்க்கிறேன், சுமதி!" என்றான் ரகு.
"உங்கள் குடும்பத்தையும் அழைத்து வந்துவிட்டீர்களா, ரகு?" என்று வினவினாள் சுமதி.
பெரிய நகைச்சுவையை கேட்டது போல் சிரித்துவிட்டு, "நான் கல்யாணமே செய்துகொள்ளவில்லை, சுமதி! உன்னுடன் மானசீகமாக வாழ்ந்த வாழ்கையை மறக்க முடியவில்லை, சுமதி!"
பிரமிப்புடன் பார்த்தவளிடம், "உன் குடும்பம் எப்போது இங்கே வரப்போகிறது, சுமதி?" என்று கேட்டான்.
சோகமான குரலில் "எனக்கும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள தோன்றவில்லை. பெற்றோர்கள் ரொம்ப நச்சரித்துப் பார்த்துத் தோற்றுப்போனார்கள்."
இருவர் கண்களும் நெடுநேரம் நேரூக்கு நேர் நோக்கிய போது நிறைய செய்திகளை பரிமாறிக் கொண்டன.
"ஒண்டிக்கட்டையாய், சுதந்திரமாய் வாழ்ந்தாலும் ஒரு இனம்புரியாத வெறுமை என்னை வாட்டுகிறது, சுமதி!"
"நானும் எவ்வளவோ சாதித்த பிறகும் ஏதோ குறைவதாக என் தனிமை என்னை சுட்டுக்கொண்டே இருக்கிறது, ரகு!"
சிறிது நேர கனத்த மௌனத்திற்குப் பிறகு சுமதி தொடர்ந்தாள்.
"உன் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்டு ஆயுளுக்கும் அவஸ்த்தைப்படக்கூடாது என்று நான் பயந்தது நிஜம். ஆனால் கரையிலேயே நின்று கொண்டு குளிப்பதெப்படி? சம்சார சாகரத்தில் இறங்க தைரியமில்லாமல் போய்விட்டதே!"
அளவிட முடியாத சோகத்துடன் ரகு சொன்னான், "வாலிப வேகத்தில், உன் மேலிருந்த அளவு கடந்த காதலில், நான் அத்துமீறி அதிகாரம் செய்தது தவறு என்று வயது கூட கூட புரிய ஆரம்பித்தது, சுமதி! விலை மதிப்பில்லாத என் பொக்கிஷத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் அரக்கனாக நடந்து கொண்டிருந்திருக்கிறேன்."
"நான் என் சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் உன்னை தவறாக புரிந்துகொண்டேன் என்று ரொம்ப காலம் கழித்துத்தான் எனக்கும் புரிந்தது, ரகு!"
மீண்டும் நான்கு கண்களின் நீண்ட சந்திப்பு. பிறகு இருவர் முகத்திலும் பிரகாசமான புன்சிரிப்பு. பகலவனின் வரவில் விலகும் பனிமூட்டம் போல் பல்லாண்டு கால சோகம் கரைந்தது.
அகங்காரம், அறியாமை இருள் அகல இத்தனை ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது. அவசரமாய் எடுத்த முடிவை சாவகாசமாய் ஆராய்ந்து பார்த்தாயிற்று. நல்ல துணையின் அத்தியாவசியத்தை உணர்ந்தாயிற்று. தனிமைத் தீயின் வெக்கையை போதுமான அளவு அனுபவித்தாயிற்று.
ஆண்டவன் கருணையால் இருவர் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. தாமதமானாலும் தடதடத்து ஓடிய நதி சமுத்திரத்தில் சங்கமிக்கும் தருணம் கலங்கிய குட்டை போலிருந்த மனதுடன் பிரிந்தவர்கள் தெளிந்த ஓடையாய் சேரும் ப்ராப்தம் இருந்திருக்கிறது. சூத்திரதாரியின் திட்டம் இதுவாக இருந்திருக்கிறது.
அலை அலையாய் எழும்பிய எண்ணங்களில் இருவரும் மூழ்கி கிடந்து விட்டு சுற்றுப்புற பிரக்ஞை வர அடுத்து ஆக வேண்டியதை பார்க்கும் முடிவோடு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இரண்டு இதயமும் ஒரே தாளகதியில் அடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
காட்டாற்று வெள்ளமாய் அடித்துச் சென்ற கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டு அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று சுதாரிக்கலானான் ரகு.
'என் இதயக்கதவோடு இப்போது என் இல்லக் கதவும் என் மகாராணிக்காக திறந்திருக்கிறது" என்றான் ரகு முகம் நிறைய மகிழ்ச்சியோடு.
சுமதி மனசுக்குள் பொங்கிய சந்தோஷத்தை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு, "குடியேற மகாராணிக்கு ஆட்சேபணை இல்லைதான். ஆனால் அதற்கு சட்டம், சம்பிரதாயம் எல்லாம் கிடையாதா?" என்று முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு கேட்டாள் சுமதி.
"இல்லாமலென்ன? முதல் வேலையே அதுதானே? உன்னை சட்டப்படி என்னவளாக்குவேன்..இன்று மட்டும் உன்னை என் விருந்தாளியாக நினைத்துக்கொள். ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க மாட்டோமா?" என்றான் ரகு பொறுப்பான ஆண்மகனாக.
லக்கேஜை பெற நடந்தவர்கள் மனம் நிறைய குதூகலம்.

Wednesday, March 22, 2023

Infinite is variety and beauty.


IndiBlogger - The Indian Blogger Community 
Nothing is new
Grumble a few
All truths are old
That are already told
Dreary poor souls
Drudgery's slaves
Each day that dawns
Every flower that blooms
Birdie's chirps in the morn
Swirling wave on the beach
Sparkling mountain falls
Incredible idiocy of high and low
Intelligent wisecracks of kids
Inventions galore zooming fast
Cranky ideas to make life comfy
Farces of celebrating filmy talents
Flout the mooted oldness theory
Infinite is variety and beauty.

Saturday, December 31, 2022

புதிய அத்தியாயம்

IndiBlogger - The Indian Blogger Community காலையில் கண்விழித்தேன்
நாட்காட்டியில் தாளை கிழித்தேன்
கடைசித்தாளை பார்த்து அதிர்ந்தேன்
முந்நூத்தி அறுபத்தி ஐந்நு நாளா முடிகிறது
எப்படி எப்படி என வியக்கிறேன்
அப்பாடி முடிகிறதே என்பேனா
அடடா முடிகிறதே என்பேனா
ஏறி இறங்கும் ரங்கராட்டின சவாரி
புயல்கள் பூசல்கள் பூரிப்புகள் புதுமைகள்
வானவில்லின் அத்தனை வண்ணங்களுமுண்டு
பிடித்ததும் பிடிக்காததுமாய் விநோத நிகழ்வுகள்
எதிர்பார்த்ததும் எதிர்பாராததுமாய் மர்மமான கலவை
நல்லதும் அல்லாததுமாய் அரங்கேறிய காட்சிகள்
நடந்தது நடக்காதது படைத்தவன் தீர்மானம்
கலைந்தும் கலையாமலும் கனவுகள் தொடர்கதை
நம்பி நம்பி நாளை நகர்த்தும் நித்திய வாடிக்கை
ஆண்டவன் ரசிக்கும் ரகசிய வாணவேடிக்கை
கொண்டாட்டமும் திண்டாட்டமும் தராசு தட்டிலே
படையாளியின் விளையாட்டில் பகடையாய்
உதைபடும் பந்தாய் இயக்கிய எந்திரமாய்
ஆண்டாண்டு காலமாய் இருப்பதறிந்த பின்னே
பரிபூரண சரணாகதியில் புதிய அத்தியாயம்
போற்றி போற்றி போற்றி

Thursday, November 17, 2022

Lori/Lullaby

IndiBlogger - The Indian Blogger Community Lori/Lullaby

 

Calm and cool is the night

Lie down, my little one!

It’s time for sweet slumber

And sweeter things to remember

Let me take you my darling

 To a land of dreams and daring

The cradle of arts and crafts

The charming realm of Kalidas

With Sakunthala and peacocks

To the seat of wisdom where

Vyasa and yogis wrote vedas and epics

See there, my little one

Kings and queens on stately stallions

Sivaji and Jhansi fighting for freedom

Look, my sweetheart,

Gloriuos civilisation unearthed

In Indus Valley, Keeladi

And even under the sea

Find ancient temples of grandeur

From the Himalayas to Kanyakumari

From Kasi to Kancheepuram;

Palaces of pomp and splendour

Places of awe and wonder

In Agra, Jaipur and Madurai

The royal homes they were

Of Moghuls, Nawabs and Nayaks.

To relax are the backwaters of Kerala

Or the beaches of Goa and Andaman.

Magnificent hills and valleys

Grand rivers and lakes do make

India a paradise on earth abounding in

Sweet sights and scents of gardens

Of Delhi, Bangalore and Ooty

Fragrant champak and jasmine,

Lovely lotus and lily;

Juicy fruits of Kashmir,

Maharashtra and Andhra Pradesh;

Graceful gazelles and tigers,

Majestic elephants and hippos

In wild jungles of Sundarbans

And the western ghats.

Look, my little one,

Flourishing factories making

Pins and watches

Guns and matchsticks

Cars, trains and planes

Kitchenware and rockets.

A country as big as a continent

With deep sea on three sides

And mighty Himalayan mountain

As the fourth natural boundary,

With people of varied culture,

History and background

Alike the diverse colurs

Of the spectacular rainbow

Living in serene hamlets

And staggering metro cities

Live in peace and harmony

Linked well with wide

Roads, railways and airports.

Be proud, my little one,

Of our motherland,

An emerging superpower,

A graceful blend of

Ancient glory and

Stunning modernity,

Culture and knowledge,

Tolerance and humanity.

Sleep in peace, my darling,

In its lap of love and luxury!

 

Wednesday, November 16, 2022

ஆஹா! பரவசமானேன்!

IndiBlogger - The Indian Blogger Community ஆஹா! பரவசமானேன்!
இளம் காலையிலே வேப்பமர இலைக்கு பின்னிருந்து
என்னை பார்க்கிறான்
கதகதப்பாய் அணைக்கிறான்
காணாது குளிரில் வாடியது உடல்
கார் காலமோ தனியொரு துயர்
உரிமையுடன் உரையாடினேன்
உள்ளத்தை கொள்ளை கொண்டவனுடன்
அடுக்காது இத்தனை நாள் விடுமுறை உனக்கு
படுத்தாதே ஒளிந்திருந்து
வையம் தாங்காது உன் பராமுகம்

Monday, October 10, 2022

தாய்மையின் இலக்கணமே

IndiBlogger - The Indian Blogger Community மாங்காய் சாம்பல் தேடி தின்னவில்லை
மசக்கை வாந்தி வாட்டி மயங்கவில்லை
மாசமாக ஆக வயிறு மேடாக வளரவில்லை
நடை தளர்ந்து இடை சோர்ந்து
துவளவில்லை
வயிற்றுக்குள் புரளும் சின்ன மேனியின்
சிறு அசைவும் உதையும் உணரவேயில்லை
கொல்லும் வலியில் துடித்து பெற்றெடுத்து
மீண்டும் மறுபிறவி எடுக்கவும் இல்லை
கனத்து கலசங்கள் அமுதினை சுரக்கவில்லை
அடி வயிற்றில் வரியாய் கோடுகள் விழவேயில்லை
அம்மா என்றழைக்க உயிரும் உலகமும் வந்ததே
அடடா அலங்கோல கலை உலகமே
தாறுமாறாகுதே தாய்மையின் இலக்கணமே

Saturday, July 30, 2022

இனிய இம்சையே

IndiBlogger - The Indian Blogger Community இனிய இம்சையே
உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்க? என் மேல உனக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்கா? என் பேச்சுக்கு மதிப்பிருக்கா? நான் என்ன சொன்னாலும் நீ உன் இஷ்டத்துக்குத்தான் ஆடுற!
வீடு எப்படி கிடக்கு பாரு! யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க? கண்டபடி சாமான்கள் குப்பையா இரைஞ்சி கிடக்கு! கிளிஞ்ச பேப்பர், பிஞ்ச செருப்பு, ரப்பர் பொம்மைகள்!
ஒன்னும் தெரியாத மாதிரி முகத்த வச்சிகிட்டா நான் ஏமாந்துருவனா? பாவம் போல கண்ண தாழ்த்தி கீழ பாக்குறத பாத்து மன்னிச்சி விட்டுருவேன்னு நினைக்கிறியா? உன் அழகான மூஞ்சிக்கு அடிமையாத்தான் கிடக்கேன். உன் ராஜ கம்பீரத்திலும், உன் பெரிய கண்கள்ல வழியிற குழந்தைத்தனத்திலயும் சொக்கித்தான் கிடக்கிறேன். அதுக்காக ஒரு மனுசன் பொறுமைக்கு எல்லையே இல்லாம போகுமா?
பகல் பூரா ஜம்முனு சோபாவுல படுத்து தூங்குற. சாயங்காலமானா வெளியே கூட்டிட்டுப்போன்னு பாடாப் படுத்துற. என்னய ஆசுவாசப்படுத்திக்கவோ, என் வேலைகளை பாக்கவோ விடாம அவசரப்படுத்துறதே உன் வாடிக்கையா போச்சி.
வெளிய போனா போன சோலிய பாத்துட்டு வீட்டுக்குத் திரும்புனமாங்கிறது கிடையாது. யப்பா, உன்னோட தினமும் இதே பாடா போச்சி! எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் சுத்தினாலும் உனக்கு திருப்தியே வராது. உன் ரோதனை தாங்க முடியல.
அதுல பாரு, நாம ரெண்டு பேரும் ரோட்டுல இணைஞ்சி நடந்து போனா ஊர் கண்ணு பூரா நம்ம மேலதான் இருக்கு. அதுல எத்தன கண்ணு கொள்ளிக்கண்ணோன்னு நான் பயந்து போய் உனக்கு சூடம் சுத்திப் போட வேண்டியிருக்கு!
நான் என்ன புத்திமதி சொன்னாலும் கேக்குறதே இல்ல. தமிழும் தெரியாது இங்கிலீஷும் தெரியாதுங்கிற மாதிரி நிப்ப. உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்.
ராத்திரியாவது நிம்மதியா தூங்க விடுறியா? உனக்கென்ன பகல் பூரா தூங்கிடுவ. நான் அப்படியா? ஆபிஸுக்கு போயி அத்தனை நாய்கிட்டயும் பேச்சு வாங்கி மூச்சு விட நேரமில்லாம உழைச்சிட்டு வர்றேன்.
சும்மா என்னய அப்படி பாக்காத. என் மனச கரைச்சி வசியம் பண்ணி என்னய ஒரு தலையாட்டி பொம்மையா ஆக்கி வச்சிருக்கியே! நான் என்னதான் செய்வேன்? உன் இஷ்டப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்காகவே பிறந்தவன் நான்னு என்ன அதிகாரமா நடத்துற! மீற முடியாம, அடக்க முடியாம அடங்கிக் கிடக்கேன் நான்!
காச காசுன்னு பாக்காம தண்ணியா செலவழிச்சி உன்னய உசத்தியா பராமரிக்கிறேன். வேளா வேளைக்கு விதம் விதமா சாப்பிடுற. அப்புறமும் கோழிக் குழம்பு வாசம் வந்தாலே பட்டினி கிடந்த மாதிரி பறக்குற! இன்னும் கொஞ்சம் டீசன்டா நடந்துக்க முடியாதா உன்னால?
எனக்கு உன் அருமை தெரியுது, உன் வாசனை பிடிச்சிருக்கு. ஆனா நம்ம கார்ல ஏறுகிற என் நண்பர்கள்லாம் மூக்க பிடிச்சிகிட்டு நக்கலா சிரிக்கிறான்கள்!
உனக்கு இயற்கையாவே பாசம் அதிகந்தேன். அத வெறித்தனமா வெளிக்காட்டவும் செய்யுற. ஆனா வீட்டுக்கு வர்ற எல்லார்கிட்டயுமா அப்படி நடந்துக்கிறது? பாதிப் பேர் பயந்து போயிர்றாங்க. மீதிப் பேர் ஒதுங்கி ஓடுறாங்க. நீ உன் சுபாவத்த மாத்திக்கவே மாட்டேங்குற. என்னய தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறதுல உனக்கு என்ன சந்தோஷமோ?
உன்கிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட குணம் என்னன்னா உனக்கு அந்நியர்கள கண்டாலே ஆகுறதில்ல. அவங்கள நெருங்க விடாம கத்தி கூப்பாடு போடுற அநேக சமயங்கள்ல அநாவசியமா!
உனக்கு ரொம்பத்தான் அதிகமா இடம் கொடுத்திட்டேன் போல. நான் எவ்வளவு படிச்சி படிச்சி சொன்னாலும் நீ கொஞ்சங்கூட கீழ்படியிறதில்ல. நான் ஒன்னும் பெரிய மேதாவி இல்ல ஒத்துக்கிறேன். ஆனா நீ நினைக்கிற அளவு அடி முட்டாளும் இல்ல.
பண்ணுற சேட்டை எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத அப்பிராணி மாதிரி மூஞ்சிய வச்சீக்கிறதுல நீதான் படு கில்லாடியாச்சே! நீ பண்ணுற ஜாலம் போடுற வேஷம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? அதான் சொல்லிட்டேன்ல, எனக்கு உன் மேல கோபமே வரமாட்டேங்குது. ஆசையோட நீ நெருங்கும்போது அன்பு ஒன்னுதான் பெருக்கெடுக்குது!
இந்த தீபாவளி வந்துட்டாலே போச்சு. ஏன்டா இப்படி ஒரு பண்டிகை வருதுன்னு நினைக்க வச்சிர்ற. அதப் பத்தி எழுதி மாளாது! போதும்டா சாமி!
இப்படி இப்படி நடந்துக்கோன்னு நானும் ரொம்ப சீரியஸா பத்தி பத்தியா பேசுனா கேக்குற மாதிரி கேட்டுட்டு "போடா போ நீயும் உன் புத்திமதியும்! அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு"ங்கிற மாதிரி தலைய சொறிய ஆரம்பிச்சிருவ.
ஆனா இத்தனைக்கப்புறமும் எனக்கு உன் மேல இருக்கிற அன்பு இம்மியளவும் குறையிறதேயில்ல. நாளுக்கு நாள் வளந்துகிட்டே போகுது! அது என்ன மாயம்னே தெரியல!
நீ எனக்கு தாயா, ததாரமா, சேயா, தோழனா? அத்தனையும் கலந்த உறவா? அத்தனையையும் தாண்டிய அபூர்வ உணர்வா? ஜன்ம ஜன்மமாய் தொடர்ந்து வரும் பந்தமா? உனக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை!
நானும் நீயும் சேர்ந்திருக்கும் போது நம் சுற்றுப்புறமே மறந்து போகிறது. வானில் பறப்பது போல் இருக்கிறது. சொர்க்கத்தின் சுவை தெரிகிறது. அனுபவித்தால் மட்டுமே புரியும் இந்த யோகத்தைத் தான் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றார்களோ?
போட்டிக்கும் பொறாமைக்கும் இடமில்லாத புதுமையான உறவிது. கண்ணுக்குத் தெரியாத காற்றாய், காற்றில் கலந்த பூவின் வாசமாய் மனதை நிறைப்பது. நேற்றைய வலியை இன்றைய சுமையை நாளைய பயத்தைப் போக்கும் அதிசய மருந்து இது.
ஐயகோ! நெஞ்சு விம்ம நிறைகள் கிடக்க பேதை போல் குறைகளை சொல்லி புலம்பினேனே! நமது அற்புத உறவின் அழகை, அருமையை வர்ணிக்க யாரே வல்லார்? நமது அமரக் காதலைப் பாடிட கம்பனையையும் ஷெல்லியையுந்தான் அழைத்திட வேண்டும்! அவர்கள்தான் இதையெல்லாம் ரசித்து ரசிக்க வைத்து வர்ணிக்க முடியும்.
தேனா, தேவாமிர்தமா இனிக்கும் நம் உறவின் சுவையை நமையன்றி யாரறிவார்? அர்த்தமில்லா இச்சை மொழிகள் பேசி இன்ப வானில் சிறகடிக்கும் பச்சைக்கிளிகளல்லவோ நாமிருவரும்!
என் இதய.துடிப்பே! இனிய இம்சையே! சிப்பியில் பிறக்காத முத்தே! என் சொத்தே! செங்கரும்பின் சாறே! பேரின்ப ஊற்றே! அந்தி நேர வானமே! துயிலெழுப்பும் குயிலின் கானமே!
நான் சிக்கென பிடித்த சிவலிங்கமே! வயிரம் பதிக்க உகந்த தங்கமே! தென் பொதிகை தென்றலே! திருக்குற்றால சாரலே! தென்னை இளநீரே! பனைமரத்து நுங்கே!
ஜாடிக்கேத்த மூடியே! வலது இடது கால் செருப்பின் பொருத்தமே! வெள்ளை ஓட்டு முட்டைக்குள் உரையும் இரு கருவே! தேடக் கிடைக்காத செல்வமே! என் உயிரில் கலந்த செல்லமே!
இயம்பவியலா பேரின்பமே! பெறுதற்கரிய ஒரு ஞானமே! வானவில்லின் வண்ணமே! சிறகு முளைத்த எண்ணமே! வழி காட்டும் விடிவெள்ளியே! புதுப்பாடம் சொல்லும் பள்ளியே!
புல் சூடும் வைர மகுடமான பனித்துளியின் ஆயுள் சில மணித்துளியே. அது தந்த ஆனந்தம் மனசுக்குள் உறைந்திருக்கும் ஆயுளுக்கும்.
நிலையாத இவ்வுலகின் நிலையான நினைவுகளே மனதை வருடும் மயிலிறகுகளாம். பெட்டிக்குள் பூட்டி வைத்த பொக்கிஷங்களாம்.
மூச்சு நின்ற பிறகும் நமதுறவின் பெருமையின் அருமையின் பேச்சிருக்கும். கல்லில் செதுக்கிய காலச்சுவடுகளாய் சரித்திரம் உயிர்த்திருக்கும்.
உண்மைகள் ஒளிர்ந்திருக்கும். உன்மத்தம் அமரத்துவம் அடைந்திருக்கும். பிறவிப் பயன் கண்டார், பிரம்மத்தை தரிசித்தார் பித்தில் சிக்கியவர்.
தொடுவானம் நோக்கி பயணிக்கிறோம். தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவில்லா பயணம். கூட நடக்கும் துணையால்
இனிமையாக
ும் நடை. நீளும் நீளும் நீண்டு கொண்டே இருக்கும். மனமும் அதையே விரும்பும்.
தொடும் தூரத்திலா வானம்? பறந்து பிடிப்போமா பஞ்சு மேகங்களை? அண்டம் தாண்டி மிதப்போமா? கோள்களையெல்லாம் குசலம் விசாரிப்போமா? கூடை நிறைய வைர நட்சத்திரங்கள் அள்ளிக் கொள்வோமா?
அன்பை பருகியே அமுதம் உண்டு அமரரான தேவர்களானோம். எட்டாத சொர்க்கத்தை எட்டிப் பிடித்தோம். திட்டங்கள் என்றும் வளர்பிறை. எதுவும் சாத்தியமே. எட்டாத உயரமில்லை. கிட்டாத கனவுமில்லை.
அழகான அன்பு தந்த சிறகுகள் சுமந்து செல்லுமே தேவதைகளின் தேசத்துக்கு. துக்கமில்லா தூக்கமில்லா பரவச வெளிக்கு. பார்த்து வியந்தவர் நம் பாதச் சுவட்டில் நடக்க துணிந்தவர் ஆவார் பாக்கியவான். பெறுவார் யாம் பெற்ற இன்பம். நிறைவேறிற்று நம் நல்ல கனவு.
அத்தனையையும் அமைதியா கேட்டுட்டு சந்தோஷமா தன் வாலை ஆட்டி "வவ் வவ்"ன்னு குரைச்சி தன்னோட ஆமோதிப்பை அறிவிக்குது என் அன்பு செல்லம்.
(கதைப் போட்டியில் தேர்வாகாத நான் எழுதிய கதை).

0 Comments

IndiBlogger - The Indian Blogger Community