Saturday, July 30, 2022

இனிய இம்சையே

IndiBlogger - The Indian Blogger Community இனிய இம்சையே
உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்க? என் மேல உனக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்கா? என் பேச்சுக்கு மதிப்பிருக்கா? நான் என்ன சொன்னாலும் நீ உன் இஷ்டத்துக்குத்தான் ஆடுற!
வீடு எப்படி கிடக்கு பாரு! யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க? கண்டபடி சாமான்கள் குப்பையா இரைஞ்சி கிடக்கு! கிளிஞ்ச பேப்பர், பிஞ்ச செருப்பு, ரப்பர் பொம்மைகள்!
ஒன்னும் தெரியாத மாதிரி முகத்த வச்சிகிட்டா நான் ஏமாந்துருவனா? பாவம் போல கண்ண தாழ்த்தி கீழ பாக்குறத பாத்து மன்னிச்சி விட்டுருவேன்னு நினைக்கிறியா? உன் அழகான மூஞ்சிக்கு அடிமையாத்தான் கிடக்கேன். உன் ராஜ கம்பீரத்திலும், உன் பெரிய கண்கள்ல வழியிற குழந்தைத்தனத்திலயும் சொக்கித்தான் கிடக்கிறேன். அதுக்காக ஒரு மனுசன் பொறுமைக்கு எல்லையே இல்லாம போகுமா?
பகல் பூரா ஜம்முனு சோபாவுல படுத்து தூங்குற. சாயங்காலமானா வெளியே கூட்டிட்டுப்போன்னு பாடாப் படுத்துற. என்னய ஆசுவாசப்படுத்திக்கவோ, என் வேலைகளை பாக்கவோ விடாம அவசரப்படுத்துறதே உன் வாடிக்கையா போச்சி.
வெளிய போனா போன சோலிய பாத்துட்டு வீட்டுக்குத் திரும்புனமாங்கிறது கிடையாது. யப்பா, உன்னோட தினமும் இதே பாடா போச்சி! எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் சுத்தினாலும் உனக்கு திருப்தியே வராது. உன் ரோதனை தாங்க முடியல.
அதுல பாரு, நாம ரெண்டு பேரும் ரோட்டுல இணைஞ்சி நடந்து போனா ஊர் கண்ணு பூரா நம்ம மேலதான் இருக்கு. அதுல எத்தன கண்ணு கொள்ளிக்கண்ணோன்னு நான் பயந்து போய் உனக்கு சூடம் சுத்திப் போட வேண்டியிருக்கு!
நான் என்ன புத்திமதி சொன்னாலும் கேக்குறதே இல்ல. தமிழும் தெரியாது இங்கிலீஷும் தெரியாதுங்கிற மாதிரி நிப்ப. உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்.
ராத்திரியாவது நிம்மதியா தூங்க விடுறியா? உனக்கென்ன பகல் பூரா தூங்கிடுவ. நான் அப்படியா? ஆபிஸுக்கு போயி அத்தனை நாய்கிட்டயும் பேச்சு வாங்கி மூச்சு விட நேரமில்லாம உழைச்சிட்டு வர்றேன்.
சும்மா என்னய அப்படி பாக்காத. என் மனச கரைச்சி வசியம் பண்ணி என்னய ஒரு தலையாட்டி பொம்மையா ஆக்கி வச்சிருக்கியே! நான் என்னதான் செய்வேன்? உன் இஷ்டப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்காகவே பிறந்தவன் நான்னு என்ன அதிகாரமா நடத்துற! மீற முடியாம, அடக்க முடியாம அடங்கிக் கிடக்கேன் நான்!
காச காசுன்னு பாக்காம தண்ணியா செலவழிச்சி உன்னய உசத்தியா பராமரிக்கிறேன். வேளா வேளைக்கு விதம் விதமா சாப்பிடுற. அப்புறமும் கோழிக் குழம்பு வாசம் வந்தாலே பட்டினி கிடந்த மாதிரி பறக்குற! இன்னும் கொஞ்சம் டீசன்டா நடந்துக்க முடியாதா உன்னால?
எனக்கு உன் அருமை தெரியுது, உன் வாசனை பிடிச்சிருக்கு. ஆனா நம்ம கார்ல ஏறுகிற என் நண்பர்கள்லாம் மூக்க பிடிச்சிகிட்டு நக்கலா சிரிக்கிறான்கள்!
உனக்கு இயற்கையாவே பாசம் அதிகந்தேன். அத வெறித்தனமா வெளிக்காட்டவும் செய்யுற. ஆனா வீட்டுக்கு வர்ற எல்லார்கிட்டயுமா அப்படி நடந்துக்கிறது? பாதிப் பேர் பயந்து போயிர்றாங்க. மீதிப் பேர் ஒதுங்கி ஓடுறாங்க. நீ உன் சுபாவத்த மாத்திக்கவே மாட்டேங்குற. என்னய தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறதுல உனக்கு என்ன சந்தோஷமோ?
உன்கிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட குணம் என்னன்னா உனக்கு அந்நியர்கள கண்டாலே ஆகுறதில்ல. அவங்கள நெருங்க விடாம கத்தி கூப்பாடு போடுற அநேக சமயங்கள்ல அநாவசியமா!
உனக்கு ரொம்பத்தான் அதிகமா இடம் கொடுத்திட்டேன் போல. நான் எவ்வளவு படிச்சி படிச்சி சொன்னாலும் நீ கொஞ்சங்கூட கீழ்படியிறதில்ல. நான் ஒன்னும் பெரிய மேதாவி இல்ல ஒத்துக்கிறேன். ஆனா நீ நினைக்கிற அளவு அடி முட்டாளும் இல்ல.
பண்ணுற சேட்டை எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத அப்பிராணி மாதிரி மூஞ்சிய வச்சீக்கிறதுல நீதான் படு கில்லாடியாச்சே! நீ பண்ணுற ஜாலம் போடுற வேஷம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? அதான் சொல்லிட்டேன்ல, எனக்கு உன் மேல கோபமே வரமாட்டேங்குது. ஆசையோட நீ நெருங்கும்போது அன்பு ஒன்னுதான் பெருக்கெடுக்குது!
இந்த தீபாவளி வந்துட்டாலே போச்சு. ஏன்டா இப்படி ஒரு பண்டிகை வருதுன்னு நினைக்க வச்சிர்ற. அதப் பத்தி எழுதி மாளாது! போதும்டா சாமி!
இப்படி இப்படி நடந்துக்கோன்னு நானும் ரொம்ப சீரியஸா பத்தி பத்தியா பேசுனா கேக்குற மாதிரி கேட்டுட்டு "போடா போ நீயும் உன் புத்திமதியும்! அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு"ங்கிற மாதிரி தலைய சொறிய ஆரம்பிச்சிருவ.
ஆனா இத்தனைக்கப்புறமும் எனக்கு உன் மேல இருக்கிற அன்பு இம்மியளவும் குறையிறதேயில்ல. நாளுக்கு நாள் வளந்துகிட்டே போகுது! அது என்ன மாயம்னே தெரியல!
நீ எனக்கு தாயா, ததாரமா, சேயா, தோழனா? அத்தனையும் கலந்த உறவா? அத்தனையையும் தாண்டிய அபூர்வ உணர்வா? ஜன்ம ஜன்மமாய் தொடர்ந்து வரும் பந்தமா? உனக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை!
நானும் நீயும் சேர்ந்திருக்கும் போது நம் சுற்றுப்புறமே மறந்து போகிறது. வானில் பறப்பது போல் இருக்கிறது. சொர்க்கத்தின் சுவை தெரிகிறது. அனுபவித்தால் மட்டுமே புரியும் இந்த யோகத்தைத் தான் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றார்களோ?
போட்டிக்கும் பொறாமைக்கும் இடமில்லாத புதுமையான உறவிது. கண்ணுக்குத் தெரியாத காற்றாய், காற்றில் கலந்த பூவின் வாசமாய் மனதை நிறைப்பது. நேற்றைய வலியை இன்றைய சுமையை நாளைய பயத்தைப் போக்கும் அதிசய மருந்து இது.
ஐயகோ! நெஞ்சு விம்ம நிறைகள் கிடக்க பேதை போல் குறைகளை சொல்லி புலம்பினேனே! நமது அற்புத உறவின் அழகை, அருமையை வர்ணிக்க யாரே வல்லார்? நமது அமரக் காதலைப் பாடிட கம்பனையையும் ஷெல்லியையுந்தான் அழைத்திட வேண்டும்! அவர்கள்தான் இதையெல்லாம் ரசித்து ரசிக்க வைத்து வர்ணிக்க முடியும்.
தேனா, தேவாமிர்தமா இனிக்கும் நம் உறவின் சுவையை நமையன்றி யாரறிவார்? அர்த்தமில்லா இச்சை மொழிகள் பேசி இன்ப வானில் சிறகடிக்கும் பச்சைக்கிளிகளல்லவோ நாமிருவரும்!
என் இதய.துடிப்பே! இனிய இம்சையே! சிப்பியில் பிறக்காத முத்தே! என் சொத்தே! செங்கரும்பின் சாறே! பேரின்ப ஊற்றே! அந்தி நேர வானமே! துயிலெழுப்பும் குயிலின் கானமே!
நான் சிக்கென பிடித்த சிவலிங்கமே! வயிரம் பதிக்க உகந்த தங்கமே! தென் பொதிகை தென்றலே! திருக்குற்றால சாரலே! தென்னை இளநீரே! பனைமரத்து நுங்கே!
ஜாடிக்கேத்த மூடியே! வலது இடது கால் செருப்பின் பொருத்தமே! வெள்ளை ஓட்டு முட்டைக்குள் உரையும் இரு கருவே! தேடக் கிடைக்காத செல்வமே! என் உயிரில் கலந்த செல்லமே!
இயம்பவியலா பேரின்பமே! பெறுதற்கரிய ஒரு ஞானமே! வானவில்லின் வண்ணமே! சிறகு முளைத்த எண்ணமே! வழி காட்டும் விடிவெள்ளியே! புதுப்பாடம் சொல்லும் பள்ளியே!
புல் சூடும் வைர மகுடமான பனித்துளியின் ஆயுள் சில மணித்துளியே. அது தந்த ஆனந்தம் மனசுக்குள் உறைந்திருக்கும் ஆயுளுக்கும்.
நிலையாத இவ்வுலகின் நிலையான நினைவுகளே மனதை வருடும் மயிலிறகுகளாம். பெட்டிக்குள் பூட்டி வைத்த பொக்கிஷங்களாம்.
மூச்சு நின்ற பிறகும் நமதுறவின் பெருமையின் அருமையின் பேச்சிருக்கும். கல்லில் செதுக்கிய காலச்சுவடுகளாய் சரித்திரம் உயிர்த்திருக்கும்.
உண்மைகள் ஒளிர்ந்திருக்கும். உன்மத்தம் அமரத்துவம் அடைந்திருக்கும். பிறவிப் பயன் கண்டார், பிரம்மத்தை தரிசித்தார் பித்தில் சிக்கியவர்.
தொடுவானம் நோக்கி பயணிக்கிறோம். தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவில்லா பயணம். கூட நடக்கும் துணையால்
இனிமையாக
ும் நடை. நீளும் நீளும் நீண்டு கொண்டே இருக்கும். மனமும் அதையே விரும்பும்.
தொடும் தூரத்திலா வானம்? பறந்து பிடிப்போமா பஞ்சு மேகங்களை? அண்டம் தாண்டி மிதப்போமா? கோள்களையெல்லாம் குசலம் விசாரிப்போமா? கூடை நிறைய வைர நட்சத்திரங்கள் அள்ளிக் கொள்வோமா?
அன்பை பருகியே அமுதம் உண்டு அமரரான தேவர்களானோம். எட்டாத சொர்க்கத்தை எட்டிப் பிடித்தோம். திட்டங்கள் என்றும் வளர்பிறை. எதுவும் சாத்தியமே. எட்டாத உயரமில்லை. கிட்டாத கனவுமில்லை.
அழகான அன்பு தந்த சிறகுகள் சுமந்து செல்லுமே தேவதைகளின் தேசத்துக்கு. துக்கமில்லா தூக்கமில்லா பரவச வெளிக்கு. பார்த்து வியந்தவர் நம் பாதச் சுவட்டில் நடக்க துணிந்தவர் ஆவார் பாக்கியவான். பெறுவார் யாம் பெற்ற இன்பம். நிறைவேறிற்று நம் நல்ல கனவு.
அத்தனையையும் அமைதியா கேட்டுட்டு சந்தோஷமா தன் வாலை ஆட்டி "வவ் வவ்"ன்னு குரைச்சி தன்னோட ஆமோதிப்பை அறிவிக்குது என் அன்பு செல்லம்.
(கதைப் போட்டியில் தேர்வாகாத நான் எழுதிய கதை).

0 Comments

Friday, March 18, 2022

பெண்ணே பெண்ணே


பசியாற்றி பசியாறிய அன்னபூரணிக்கு
வந்திருக்கு கடுஞ்சோதனை
பிரபஞ்சமாய் நிறைந்து நின்ற சக்திக்கு
புள்ளியாய் நிற்கச் சொல்லி போதனை
தன்னை இரண்டாமிடத்தில் நிறுத்தி
முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட சமர்த்தி
இனி ஆவாள் கூறுகெட்ட மடச்சி
இறக்குமதியாகுது புதியதோர் சதி
உப்பாய் சர்க்கரையாய் கரைந்து கலந்து
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பை ருசியில் உணர்த்தியவள்
கரையாமல் கலக்காமல் படைப்பாள்
வாய்க்கு விளங்காத விபரீத சமையல்
தனக்குள் உலகை அடக்கியவள்
தான் மட்டுமே உலகம் என்பாளாம்
தேர் சக்கரம் ஓட இன்றியமையாத அச்சாணி
தனியே கழன்று சென்று என்ன சாதிக்கும்
தேர் தான் எப்படி ஓடும்
அங்கமாய் இருந்து அனைத்துமாய் இயங்குபவள்
தனி அங்கமே உலகமென மயங்குவாளோ
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி
சுமுகமான சுகமான உறவுகளை உதறி
உன்னைப் பார் உன்னை மட்டும் முதலில் பார்
என்று உடுக்கடிக்கும் கூட்டத்தால் சிதறி
தொலைந்த கூட்டுக் குஞ்சுகள் பதறி
உருவாகும் தான்தோன்றி உலகில் இன்னும்
பார்க்கக் கொடுத்து வைத்தது என்னென்னவோ
Like
Comment

Wednesday, February 23, 2022

தருவாயா இறைவா

IndiBlogger - The Indian Blogger Community தருவாயா இறைவா தினமும் இதே நிழலை
காலையில் கொஞ்ச நேரம் கொஞ்சல்
தோட்டத்து மஞ்சள், சிகப்பு, வெள்ளை, ரோஸ்
மலர்கள், பல வித பச்சை நிறத்து இலைகள்
கைபேசியில் உலகை சுற்றி பறந்து வர
சுற்றமும் நட்பும் நலமென நிம்மதியாய்
காயும் கனியும் பருப்புகளும் கொறித்து
குட்டி தூக்கம் வாசிப்பு பந்தங்களின் விசாரிப்பு
கோபப்பறவை விளையாட்டில் குழந்தையாகி
பள்ளித்தோழிகளுடன் ஜுமில் கலந்துரையாடி
மலையாய் பாக்கியங்கள் ஓங்கி நின்றிட
மன உடல் வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொள்ள
வாடவோ தேடவோ தேவையில்லாத மோனம்
ஒளியில் குளிக்கும் ஆவி பாடாதோ கானம்

Monday, February 21, 2022

பந்தம்

IndiBlogger - The Indian Blogger Community பந்தம்
இணைந்தே இருக்கும் இனியவளே
நிழலாய் நடக்கும் நல்லவளே
காப்பியில் சீனியாய் கலந்தவளே
குழம்பில் உப்பாய் கரைந்தவளே
வெயிலும் மழையும் பொருட்டில்லை
குடையாய் நீ கூடவே இருக்கையிலே
பேசியே கழிந்த பொழுதுகள்
பேசாமல் களித்த மௌனங்கள்
கடந்தோம் நாம் நெடுந்தூரம்
அடைவோம் அந்த தொடுவானம்
படித்தோம் புதிய இலக்கியம்
படைத்தோம் நீண்ட காவியம்
சேர்ந்தே சிந்திக்கிறோம்
சோர்வின்றி விவாதிக்கிறோம்
விளக்கவியலா சுகந்தானோ
விளங்காத வரம் இதுவன்றோ
சாத்திரமில்லா ஓர் உறவு
சாத்தியமானது பல கனவு
பிரிவே இல்லாத பந்தம்
பிரியம் மிகுந்த சொந்தம்
குழந்தையாய் தவழ்ந்த போதிருந்து
கூனுடன் கோலுடன் தள்ளாடும் வரை
கூடவே இருக்கும் துணையே
தனிமையெனும் தோழியே
கவிஞர் பாடிய நானும்
ஞானியர் தேடிய நானும்
சாமியார் உரைக்கும் நானும்
சாமான்யர் அறியாத நானும்
முகத்தின் இரண்டு கண்களாய்
முட்டையின் மஞ்சள் வெள்ளை கருவாய்
உறைகின்றோம் ஒன்றாய் ஓருடலில்
திளைக்கின்றோம் பேரின்ப தேடலில்
களைப்பில்லை சலிப்பில்லை
நானும் நானும் போல் வேறில்லை

Thursday, February 10, 2022

நவீன சுயம்வரம்

IndiBlogger - The Indian Blogger Community நவீன சுயம்வரம்

(கடந்த ஞாயிறன்று எங்கள் குடியிருப்பின் நற்பணி மன்றத்தின் துவக்க விழா கொண்டாட்டத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் இரு மகள்கள் - சுரேகா, விபுலா, கல்லூரி மாணவிகள்- எழுதி, இயக்கி, நடித்த நாடகம்)

Narrator: ராஜா காலத்திலெல்லாம் பொண்ணுங்கதான் அவங்களுக்கு ஏற்ற மாப்பிள்ளையை select பண்ணினார்கள் . ஆனால் இப்ப காலம் மாறி பையன்கள் தான் பெண் பார்க்க வர்றாங்க. அந்தக் காலத்து சுயம்வரம் திரும்பவும் இந்தக் காலகட்டத்துக்கு வந்துச்சுன்னா எப்படி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை இது உங்களுக்காக.

மாப்பிள்ளை வீட்டில் இப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

காட்சி 1

மாப்பிள்ளையின் அம்மா: டேய், கல்யாணம், இன்னைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கப்பா. இன்னைக்கு கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இரு.

கல்யாணசுந்தரம்(மாப்பிள்ளை): இதையே எத்தனை தடவை சொல்வீங்கம்மா? ஏற்கனவே பத்து பொண்ணுங்க பார்த்துட்டுப் போய்ட்டாங்க. பழகிப் போச்சும்மா.

அம்மா: உனக்கு கல்யாணசுந்தரம்னு பேரு வச்சாலும் வச்சேன் கல்யாணமே ஆகமாட்டேங்குது!

மாப்பிள்ளை: ஏம்மா புலம்பிக்கிட்டே இருக்கீங்க?

மா.அம்மா: அப்புறம் என்னப்பா செய்ய? இனியாவது நல்ல காலம் வருதான்னு பார்க்கலாம்.

சகாதேவன்(மாப்பிள்ளையின் தம்பி): அண்ணா, இந்த மோதிரத்தை எடுத்து போட்டுக்கோ.

மாப்பிள்ளை: சரிடா.

மகாதேவன்(மற்றொரு தம்பி): அண்ணா, உன் chain-ஐ எடுத்து வெளியே போடு. அப்பத்தான் அழகா இருப்பே.

மாப்பிள்ளை: சரிடா. (தன் செயினை வெளியே எடுத்து சரி செய்து கொள்கிறார்)

அம்மா (மாப்பிள்ளையின் தம்பிகளைப் பார்த்து): வாசலில் நின்னு பொண்ணு வீட்டுக்காரங்க வராங்களான்னு பாருங்க.

காட்சி 2

(பெண் வீட்டார் காரில் வந்து இறங்குகின்றனர்)

மா.தம்பி: அம்மா, அவங்க வந்துட்டாங்கம்மா.

அம்மா: சரிடா, வர்றேன். அவங்கள உள்ளே வரச் சொல். கல்யாணம், ரெடியாயிட்டியா? அவங்க வந்துட்டாங்க.

மாப்பிள்ளை: ரெடி ஆயிட்டே இருக்கேம்மா.

அம்மா: (பெண் வீட்டார்களை பார்த்து) வாங்க, வாங்க. உட்காருங்க. fanஐ- போடு.

நிம்மி(மணப்பெண்): ஒரு AC கூட இல்லையா? It is too hot, mummy!

பெண்ணின் அம்மா: நாங்கள் எப்போதும் AC-யில் தான் இருப்போம்.

மா. அம்மா: இந்த சம்பந்தம் முடிஞ்சா AC-யை மாட்டிவிடுவோம்.

(அம்மாவும், மகளும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

பெ. அம்மா: சீக்கிரம் பையனைக் கூட்டிட்டு வாங்க. நாங்க நிறைய appointments வச்சிருக்கோம்.

மா.அம்மா: சரிங்க. சகாதேவன்! போய் அண்ணனைக் கூட்டிட்டு வா.

(காப்பியை பையனிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்கச் சொல்கிறாள். கல்யாணம் தலைக் குனிந்து கொண்டே காபியை நீட்டுகிறார்).

பெ.அம்மா: பையனோட அப்பா எங்கே?

மா.அம்மா: அவருக்கு கூச்ச சுபாவம். உள்ளே பஜ்ஜி போட்டுக்கிட்டு இருக்காரு.

பெ.அம்மா: சரி, நிம்மி, பையன்கிட்ட என்னமும் கேட்கணும்னா கேளு.

பெண்: சரிம்மா. (மாப்பிள்ளையை பார்த்து) என்ன பண்ணறீங்க?

மாப்பிள்ளை: degree முடிச்சிட்டு இரண்டு வருசமா training எடுத்திக்கிட்டு இருக்கேன்.

பெ. அம்மா: என்ன training?

மாப்பிள்ளை: என் அப்பாகிட்டேர்ந்து வீட்டு வேலை, சமையல் இவற்றைதாங்க படிக்கிறேன்.

பெ. அம்மா:Very good!

பெண்: பாட்டு பாடத் தெரியுமா?

மாப்பிள்ளை: சுமாரா பாடுவேங்க.

மாப்பிள்ளை: (Mirinda advertisement போல) அம்மாடி, ஆத்தாடி, உன்னை எனக்கு தர்றீயாடி, நீ பாதி, நான் பாதி சொல்லிப்புட்டா.. அரச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா(என்று பாடியபடியே ஆட ஆரம்பிக்க, பெண், மாப்பிள்ளையின் தம்பிகள் எல்லோருமாய் ஆட ரம்பிக்கிறார்கள்)

பெ.அம்மா: Stop it!

சகாதேவன்: எவ அவ?

பெண்: I like this chap, mom!

பெ.அம்மா: சரி. உன் conditions-ஐ சொல்லு. சரி வருதான்னு பார்க்கலாம்.

பெண்: (கையை சொடுக்கியபடி) conditions எல்லாம் ஒழுங்கா கேட்டுக்கோங்க.

condition No1: காலை 5 மணிக்கு எழுந்திடணும்.

condition No2: என்னை 6 மணிக்கு எழுப்பும் போது தலைக்கு குளிச்சிட்டு bed coffeeயோடதான் முன்னாடி வந்து நிக்கணும். ஆமா, உங்களுக்கு filter coffee போடத் தெரியுமா?

மாப்பிள்ளை: பேஷ், பேஷ். ரொம்ப நன்னா போடுவேன்.

பெ.அம்மா: ரொம்ப முக்கியமான condition-ஐ விட்டுட்டியே!

பெண்: 3: நான் போடுற menu-க்கு ஏத்த மாதிரிதான் சமைக்கணும். சமையலெல்லாம் எப்படி?

மாப்பிள்ளை: நான் north Indian, chinese, south Indian எல்லாம் சமைப்பேன். எல்லாம் 2 வருசம் அப்பாகிட்ட training எடுத்ததுதான் . தெரியாததை படித்துக் கொள்கிறேன்.

பெ.அம்மா: இந்த conditions எல்லாம் சரி. எவ்வளவு போடுவீங்க? 50 பவுன் நகை போட்டு ஒரு கார் குடுத்துடணும்.

மா.அம்மா: எனக்கு கல்யாணத்துக்கு பிறகு ஏழு பசங்க இருக்காங்க. இவனக் கரை சேர்த்தாதான் மத்தவங்களுக்கும் செய்ய முடியும். கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

பெ.அம்மா: சரி, 30 பவுன் போட்டுருங்க.

மா.அம்மா: சரிங்க. நாங்க செய்து வைக்கிறோம்.

காட்சி 3

(திருமணத்திற்கு பிறகு)

கல்யாணம் அவனுடைய தாயின் பக்கம் நின்று கண்ணை கசக்கிக் கொண்டிருக்கிறார்.

மகாதேவன், சகாதேவன்: அண்ணா, எங்கள மறந்துடாத. எங்களை வந்து பாத்துட்டு போ.

மாப்பிள்ளை: சரிடா. நல்லா படிக்கணும். நல்ல பிள்ளைகளா இருங்க.

பெண்: உங்க பையனை கண் கலங்காம பாத்துக்கிறேன். நீங்க கவலப்படாதீங்க. உங்கள பாக்க வருசத்துக்கு ஒரு தடவ கூட்டிட்டு வர்றேன்.

(மணப்பெண் மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறாள்)

Friday, December 10, 2021

Princesses

IndiBlogger - The Indian Blogger Community Princesses
Pretty maidens in pink and purple
Fairy princesses pampered darlings
Grow in palaces with dreams of princes
Full of valour and gallantry, power and prowess;
Build castles of gold and ivory in their minds
Charming beyond words, unsung by poets,
Perfect pictures of paradises on earth.
Alas! At last the castles like a pack of playing cards
Tumble at one breath of demon Destiny.
Pains and pangs are the pathetic reality
Bright paints blackened beyond recognition
Bleak prospects fill the thorny paths
Pathos beyond the scope of a Greek tragedy
Pride saves the poor soul leading to peace.
IndiBlogger - The Indian Blogger Community