Monday, February 21, 2022

பந்தம்

IndiBlogger - The Indian Blogger Community பந்தம்
இணைந்தே இருக்கும் இனியவளே
நிழலாய் நடக்கும் நல்லவளே
காப்பியில் சீனியாய் கலந்தவளே
குழம்பில் உப்பாய் கரைந்தவளே
வெயிலும் மழையும் பொருட்டில்லை
குடையாய் நீ கூடவே இருக்கையிலே
பேசியே கழிந்த பொழுதுகள்
பேசாமல் களித்த மௌனங்கள்
கடந்தோம் நாம் நெடுந்தூரம்
அடைவோம் அந்த தொடுவானம்
படித்தோம் புதிய இலக்கியம்
படைத்தோம் நீண்ட காவியம்
சேர்ந்தே சிந்திக்கிறோம்
சோர்வின்றி விவாதிக்கிறோம்
விளக்கவியலா சுகந்தானோ
விளங்காத வரம் இதுவன்றோ
சாத்திரமில்லா ஓர் உறவு
சாத்தியமானது பல கனவு
பிரிவே இல்லாத பந்தம்
பிரியம் மிகுந்த சொந்தம்
குழந்தையாய் தவழ்ந்த போதிருந்து
கூனுடன் கோலுடன் தள்ளாடும் வரை
கூடவே இருக்கும் துணையே
தனிமையெனும் தோழியே
கவிஞர் பாடிய நானும்
ஞானியர் தேடிய நானும்
சாமியார் உரைக்கும் நானும்
சாமான்யர் அறியாத நானும்
முகத்தின் இரண்டு கண்களாய்
முட்டையின் மஞ்சள் வெள்ளை கருவாய்
உறைகின்றோம் ஒன்றாய் ஓருடலில்
திளைக்கின்றோம் பேரின்ப தேடலில்
களைப்பில்லை சலிப்பில்லை
நானும் நானும் போல் வேறில்லை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community