Monday, February 21, 2022
பந்தம்
Thursday, February 10, 2022
நவீன சுயம்வரம்
(கடந்த ஞாயிறன்று எங்கள் குடியிருப்பின் நற்பணி மன்றத்தின் துவக்க விழா கொண்டாட்டத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் இரு மகள்கள் - சுரேகா, விபுலா, கல்லூரி மாணவிகள்- எழுதி, இயக்கி, நடித்த நாடகம்)
Narrator: ராஜா காலத்திலெல்லாம் பொண்ணுங்கதான் அவங்களுக்கு ஏற்ற மாப்பிள்ளையை select பண்ணினார்கள் . ஆனால் இப்ப காலம் மாறி பையன்கள் தான் பெண் பார்க்க வர்றாங்க. அந்தக் காலத்து சுயம்வரம் திரும்பவும் இந்தக் காலகட்டத்துக்கு வந்துச்சுன்னா எப்படி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை இது உங்களுக்காக.
மாப்பிள்ளை வீட்டில் இப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
காட்சி 1
மாப்பிள்ளையின் அம்மா: டேய், கல்யாணம், இன்னைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கப்பா. இன்னைக்கு கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இரு.
கல்யாணசுந்தரம்(மாப்பிள்ளை): இதையே எத்தனை தடவை சொல்வீங்கம்மா? ஏற்கனவே பத்து பொண்ணுங்க பார்த்துட்டுப் போய்ட்டாங்க. பழகிப் போச்சும்மா.
அம்மா: உனக்கு கல்யாணசுந்தரம்னு பேரு வச்சாலும் வச்சேன் கல்யாணமே ஆகமாட்டேங்குது!
மாப்பிள்ளை: ஏம்மா புலம்பிக்கிட்டே இருக்கீங்க?
மா.அம்மா: அப்புறம் என்னப்பா செய்ய? இனியாவது நல்ல காலம் வருதான்னு பார்க்கலாம்.
சகாதேவன்(மாப்பிள்ளையின் தம்பி): அண்ணா, இந்த மோதிரத்தை எடுத்து போட்டுக்கோ.
மாப்பிள்ளை: சரிடா.
மகாதேவன்(மற்றொரு தம்பி): அண்ணா, உன் chain-ஐ எடுத்து வெளியே போடு. அப்பத்தான் அழகா இருப்பே.
மாப்பிள்ளை: சரிடா. (தன் செயினை வெளியே எடுத்து சரி செய்து கொள்கிறார்)
அம்மா (மாப்பிள்ளையின் தம்பிகளைப் பார்த்து): வாசலில் நின்னு பொண்ணு வீட்டுக்காரங்க வராங்களான்னு பாருங்க.
காட்சி 2
(பெண் வீட்டார் காரில் வந்து இறங்குகின்றனர்)
மா.தம்பி: அம்மா, அவங்க வந்துட்டாங்கம்மா.
அம்மா: சரிடா, வர்றேன். அவங்கள உள்ளே வரச் சொல். கல்யாணம், ரெடியாயிட்டியா? அவங்க வந்துட்டாங்க.
மாப்பிள்ளை: ரெடி ஆயிட்டே இருக்கேம்மா.
அம்மா: (பெண் வீட்டார்களை பார்த்து) வாங்க, வாங்க. உட்காருங்க. fanஐ- போடு.
நிம்மி(மணப்பெண்): ஒரு AC கூட இல்லையா? It is too hot, mummy!
பெண்ணின் அம்மா: நாங்கள் எப்போதும் AC-யில் தான் இருப்போம்.
மா. அம்மா: இந்த சம்பந்தம் முடிஞ்சா AC-யை மாட்டிவிடுவோம்.
(அம்மாவும், மகளும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)
பெ. அம்மா: சீக்கிரம் பையனைக் கூட்டிட்டு வாங்க. நாங்க நிறைய appointments வச்சிருக்கோம்.
மா.அம்மா: சரிங்க. சகாதேவன்! போய் அண்ணனைக் கூட்டிட்டு வா.
(காப்பியை பையனிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்கச் சொல்கிறாள். கல்யாணம் தலைக் குனிந்து கொண்டே காபியை நீட்டுகிறார்).
பெ.அம்மா: பையனோட அப்பா எங்கே?
மா.அம்மா: அவருக்கு கூச்ச சுபாவம். உள்ளே பஜ்ஜி போட்டுக்கிட்டு இருக்காரு.
பெ.அம்மா: சரி, நிம்மி, பையன்கிட்ட என்னமும் கேட்கணும்னா கேளு.
பெண்: சரிம்மா. (மாப்பிள்ளையை பார்த்து) என்ன பண்ணறீங்க?
மாப்பிள்ளை: degree முடிச்சிட்டு இரண்டு வருசமா training எடுத்திக்கிட்டு இருக்கேன்.
பெ. அம்மா: என்ன training?
மாப்பிள்ளை: என் அப்பாகிட்டேர்ந்து வீட்டு வேலை, சமையல் இவற்றைதாங்க படிக்கிறேன்.
பெ. அம்மா:Very good!
பெண்: பாட்டு பாடத் தெரியுமா?
மாப்பிள்ளை: சுமாரா பாடுவேங்க.
மாப்பிள்ளை: (Mirinda advertisement போல) அம்மாடி, ஆத்தாடி, உன்னை எனக்கு தர்றீயாடி, நீ பாதி, நான் பாதி சொல்லிப்புட்டா.. அரச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா(என்று பாடியபடியே ஆட ஆரம்பிக்க, பெண், மாப்பிள்ளையின் தம்பிகள் எல்லோருமாய் ஆட ரம்பிக்கிறார்கள்)
பெ.அம்மா: Stop it!
சகாதேவன்: எவ அவ?
பெண்: I like this chap, mom!
பெ.அம்மா: சரி. உன் conditions-ஐ சொல்லு. சரி வருதான்னு பார்க்கலாம்.
பெண்: (கையை சொடுக்கியபடி) conditions எல்லாம் ஒழுங்கா கேட்டுக்கோங்க.
condition No1: காலை 5 மணிக்கு எழுந்திடணும்.
condition No2: என்னை 6 மணிக்கு எழுப்பும் போது தலைக்கு குளிச்சிட்டு bed coffeeயோடதான் முன்னாடி வந்து நிக்கணும். ஆமா, உங்களுக்கு filter coffee போடத் தெரியுமா?
மாப்பிள்ளை: பேஷ், பேஷ். ரொம்ப நன்னா போடுவேன்.
பெ.அம்மா: ரொம்ப முக்கியமான condition-ஐ விட்டுட்டியே!
பெண்: 3: நான் போடுற menu-க்கு ஏத்த மாதிரிதான் சமைக்கணும். சமையலெல்லாம் எப்படி?
மாப்பிள்ளை: நான் north Indian, chinese, south Indian எல்லாம் சமைப்பேன். எல்லாம் 2 வருசம் அப்பாகிட்ட training எடுத்ததுதான் . தெரியாததை படித்துக் கொள்கிறேன்.
பெ.அம்மா: இந்த conditions எல்லாம் சரி. எவ்வளவு போடுவீங்க? 50 பவுன் நகை போட்டு ஒரு கார் குடுத்துடணும்.
மா.அம்மா: எனக்கு கல்யாணத்துக்கு பிறகு ஏழு பசங்க இருக்காங்க. இவனக் கரை சேர்த்தாதான் மத்தவங்களுக்கும் செய்ய முடியும். கொஞ்சம் பாத்து சொல்லுங்க.
பெ.அம்மா: சரி, 30 பவுன் போட்டுருங்க.
மா.அம்மா: சரிங்க. நாங்க செய்து வைக்கிறோம்.
காட்சி 3
(திருமணத்திற்கு பிறகு)
கல்யாணம் அவனுடைய தாயின் பக்கம் நின்று கண்ணை கசக்கிக் கொண்டிருக்கிறார்.
மகாதேவன், சகாதேவன்: அண்ணா, எங்கள மறந்துடாத. எங்களை வந்து பாத்துட்டு போ.
மாப்பிள்ளை: சரிடா. நல்லா படிக்கணும். நல்ல பிள்ளைகளா இருங்க.
பெண்: உங்க பையனை கண் கலங்காம பாத்துக்கிறேன். நீங்க கவலப்படாதீங்க. உங்கள பாக்க வருசத்துக்கு ஒரு தடவ கூட்டிட்டு வர்றேன்.
(மணப்பெண் மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறாள்)
Friday, December 10, 2021
Princesses
Wednesday, June 2, 2021
அன்னை
Wednesday, May 19, 2021
தருவாயா இறைவா
Thursday, May 6, 2021
பஸ்மாசுரன்
பல கோடி வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றியதாம். எப்படி தோன்றியது என்ற அரத பழசான சர்ச்சைக்குள் போகாமல் தோன்றிய பிரபஞ்சத்தில் நாமிருக்கும் பூமிக்கோளத்தின் வரலாற்றை மட்டும் பார்ப்போம். உயிர்கள் எப்படி தோன்றின என்ற கதைகளையும் புனைசுருட்டுகளென ஒதுக்கிவிட்டு பிரதான ஆறறிவு ஜீவனான மனிதனை மட்டும் கவனிப்போம்.
ஆதிமனிதன் காட்டுமிராண்டியாய் விலங்குகளை வேட்டையாடி உண்டு மட்டும் உயிர் வாழத் தெரிந்தவனாய் குகைகளில் வாழ்ந்து வந்தான். பெண்களை, பிள்ளைகளை கட்டையால் அடித்து கட்டுக்குள் வைத்திருந்தவன், பொழுது போகாமல் குகை சுவற்றில் கோட்டோவியம் தீட்டியவன் மண்டை கபாலத்துக்குள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த ஆதி காலத்து சிறிய மூளை மெல்ல மெல்ல விழித்தெழுந்தது. தன் அளப்பரிய திறனை மெல்ல மெல்ல வெளிப்படுத்தியது.
வேட்டையாட மிகவும் தேவையான, வாழ்க்கைக்கு முக்கியமான கருவிகளை கல்லில் செதுக்கி உருவாக்கிநான். அதன் பிறகு மெல்ல மெல்ல பல பயன்பாட்டு கருவிகளை உருவாக்கக் கற்றான்.
விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பிள்ளையார்சுழி சக்கரமாம். அதன்பின் அவன் அபூர்வ மூளை அசுர வேகத்தில் வேலை செய்தது. யந்திர புரட்சி வாழ்க்கைமுறைகளை புரட்டிப்போட்டது.
வேட்டையாடி உண்டு பசி தீர்த்தவன் நாக்கு ருசி தேடியதில் விவசாயம் செய்ய பழகினான். விளைந்த பயிரை, தானியத்தை மாவாக்க, பக்குவமாய் சமைக்க ஏதுவாக்க கல்லால் உரல், அம்மி, திரிகல் செய்து பெண்களை அவற்றில் வேல செய்ய வைத்து மேல்லிடையாள்களாக வைத்திருந்தான்.
அம்மி அரைத்தும், மாவாட்டியும் ஆயுளை கழித்து மாளாமல் அவர்களை மீட்டன மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங்கள். தினம் தினமுமா சமைப்பது என்ற நல்லெண்ணத்துடன் உருவானது ரெப்ரிஜரேட்டர்.
வியர்த்த போது பனை ஓலை விசிறியில் வீசி களைத்த கைகளுக்கு ஒய்வு தந்தது மின்சார காற்றாடி. அந்த சுகமும் போதாமல் போகவே வந்துதித்தது ஏர்கண்டிஷனர். உண்ணும் பொது, உறங்கும் பொது, உழைக்கும் பொது, பயணிக்கும் போது என எந்நேரமும் அது தேவையானதாகிவிட்டது.
காட்டுமிராண்டி மனிதன் இயற்கையின் பேராற்றலை அதன் சீற்றங்களின் பொது நிதர்சனமாய் உணர்ந்து பயபக்தியுடன், வாலை சுருட்டிக்கொண்டு இயற்கை ரூபங்களை தெய்வ அம்சங்களாய் பார்க்கத் துவங்கி வழிபட்டுவரலானான்.
பின்னர் அவன் பகுத்தறிவு பயங்கரமாய் வளர்ந்தது. சுறுசுறுப்பாய் மூளை இயற்கையை கவனிக்க, ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது. பல்லாயிரக்கணக்கான வருட அவதானிப்பு பல்லாயிரக்கணக்கான பாடங்களை புகட்டியது. காட்டுக் குதிரைக்கு கடிவாளம் போட கற்றுக்கொண்டான். மேலே, கீழே, சுற்றிலும் தீர பொறுமையாய் ஆராய்ச்சி செய்தான். பூகோளம், சரித்திரம், இயற்பியல், வேதியியல், வானசாஸ்திரம், டைனாமிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ன பிற சங்கதிகளின் அறிவை படிப்படியாக வளர்த்தான்.
பூமிக்குள் புதைந்து கிடக்கும் கணிம வளங்களை எரிபொருளாய் மாற்றி விந்தைகள் செய்யத் துவங்கினான். மின்சாரம் என்றொரு மந்திர சாவியால் ஒரு மாய மாளிகையை திறந்து ராஜபோக வாழ்வினை வாழ கற்றுக் கொண்டான்.
சக்கரத்தை வடிவமைத்தவன் சைக்கிளோட்டியதோடு நில்லாமல் அனைத்து சொகுசு ஊர்திகளையும் உருவாக்கினான். அதோ அந்த பறவை போல வாழவேண்டுமென ஆசைப்பட்டவன் விமானத்தில் பறக்க பழகினான்.
அதோ பார் நிலா என்று குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டு மட்டுமில்லாமல், நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ என்று பாடிக் கொண்டு மட்டுமில்லாமல் நிலவில் கால் பதித்துவிட்டான். மற்ற கோளங்களையும் தீவிரமாய் ஆராய்கிறான். விண்ணிலிருந்து மண்ணை கண்காணிக்கும், வழிநடத்தும் சேட்டிலைட்டுகளை விண்வெளியில் நிறுத்தியிருக்கிறான்.
பூதாகர டைனாசர்களா, ஒரு செல் உயிரியா, பூமியின் வாழ்வினங்களின் முன்னோடிகள் யார் என விஞ்ஞானிகளும் மதபோதகர்களும் ஒருவர் மண்டையை ஒருவர் உடைத்துக்கொண்டார்கள்.
ஆப்பிரிக்க கண்டத்தின் பூர்வக்குடிகள்ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியதை கண்டுபிடித்தார்கள். ஆதிவாசிகளை அடித்து துரத்தி குடியேறிய வந்தேறிகள் வல்லரசானார்கள். என்சாமி என்சாமி என்று பூமி முழுக்க மதத்தின் பேரால் யுத்தங்கள் நடத்தி ரத்த ஆறு ஓடவிட்டு என்ஜாயி என்றார்கள். தொடரும் கதை இது.
மக்கட்தொகை இதற்கிடையில் கட்டுக்கடங்காமல் பெருகியது. அத்தனை வயிறுகளையும் நிரப்ப அபரிதமாய் விளையும் மலட்டு பயிரெல்லாம் ஆராச்சியில் உருவானது.
வாய்க்கால், வரப்பு தகராறு, கட்டை பஞ்சாயத்து பூமியெங்கும் பரவ அந்தந்த நாட்டு ராணுவமும் போஷாக்காய் வளர்க்கப்பட்டு தோள்தட்டி பலங்காட்டும் கிங்கர கிங்காங்களாக நிறைய நாடுகள் முன்னணியில் நிற்கின்றன.
ஆதிகாலத்து விஷ அம்பு, வேல் போன்ற போர்க்கருவிகளுக்குப் பிறகு பயங்கர போர்த் தந்திரங்களும், ரசாயன ஆயுதங்களும், அசுர இன பூச்சிக்கூட்ட தாக்குதல் நூதனமும் மிரட்டலாய் அணிவகுத்து நிற்கின்றன.
கற்காலத்தில் மனிதன் கபாலத்துக்குள் விழித்தெழுந்த சின்ன மூளையின் திறன் இன்று கண்டிருக்கும் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதன் கைவசமுள்ள தொழில்நுட்ப நுணுக்கங்கள் அதி நூதனமானவை.
மனிதனுக்குப் பதிலாக யந்திரமே எல்லா வேலையையும் செய்யும் காலத்தை நெருங்கிவிட்டோம். ஹோட்டலில் உணவு பரிமாற்ற மட்டுமில்லாமல் வாகனங்களை இயக்கம் யந்திரங்களும் வந்துவிட்டன. ஆளில்லாமல் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிக்கத் துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே ஏர் பிடித்து வயலை உழுதவனுக்கு வேலை இல்லாமல் டிராக்டர்களும் நவீன உபகரணங்களும் விவசாயத்தை கைப்பற்றிவிட்டன.
முழுக்க யந்திர கட்டுப்பாட்டில் மனித சக்திக்கு வேலையில்லாத கட்டத்திற்கு வந்துவிட்ட பூமியில் அதன் மாபெரும் ஜனத்தொகையை எப்படி பார்க்கிறது அருமையாய் வளர்ச்சியடைந்த அதிசய மனித மூளை? உடைத்தெறியப்பட வேண்டிய தடைக்கல்! குப்பைத்தொட்டியில் வீசப்பட வேண்டிய வேண்டாத பண்டம்!
பெயருக்கு ஆறறிவுடன் இருந்தாலும் கீழ்மட்ட ஜீவராசிகளைப் போல் உண்டு, உறங்கி, உயிர் பெருக்கி அர்த்தமில்லாத வாழ்க்கை வாழும் இவர்கள் தேவையில்லாத பாரம். பெருகி வரும் முதியோர் ஜனத்தொகை ஒரு பொருளாதார சுமை.
மறுமலர்ச்சி காலத்து பழைய வாழும் முறைகள், நன்னெறிகள், கற்பு, கட்டுப்பாடு போன்ற கொள்கைகள் எல்லாவற்றையும் எப்போதோ கடாசியாகிவிட்டது. சுயநலமாய் சுகம் தேடி அலையும் இந்த மனித கூட்டத்தை அழிப்பது எப்படி? அறிய திறன் உடைய சிறிய கூட்டம் போதும் இந்த பூமிக்கு.
ஆண்டாண்டு காலமாய் பல நாட்டு புராணங்களிலும், சரித்திரத்திலும் பார்த்ததுதான் பேரழிவை நிகழ்த்தும் வல்லமை கொண்ட கொடிய அசுரர்களும், நூதன துஷ்ட விலங்குகளும்.
இன்றைய யுகத்தில் உருவான அசுரனே கொரோனா. புராணத்திலும், சரித்திரத்திலும் அசுரர் ஜெயித்ததில்லையே? இந்த பஸ்மாசுரன் ஜெயிப்பானா? கருணைக்கடலான கடவுள் கைவிடமாட்டார்!