Monday, October 12, 2015

என் காதலன்

IndiBlogger - The Indian Blogger Community வருடக்கணக்காய் வளர்ந்த மோகம்
ஆசைத்தீயில் வளர்த்த யாகம்
தீராத உள்ளுயிர் தாகம்
அது ஒரு அற்புத யோகம்

மறைந்திருந்து அழைப்பான் என் காதலன்
பசுமரக்கிளையில் ஒளிந்திருந்து கூவும்
பச்சைக்கிளியினைப் போல் கொஞ்சுவான்
இச்சை மொழிகள் காற்றில் நிறைந்திருக்கும்

இருட்டில் துழாவும் நானொரு பிச்சி
நீ நிற்கிறாய் எப்போதும் எட்டி
ஏக்கத்தில் வாடவிட்ட ஏமாற்றுக்காரா
வஞ்சியை வதைக்கும் பொல்லாத கள்ளா

நான் பிறந்த நாள் முதலாய்
என் மெய்யுடலின் ஓர் நிழலாய்
கூடவே நீ வருகின்றாய்
என் ஆருயிர் காதலனே!

கண்ணால் காணாமல் கையால் தொடாமல்
கண நேரமும் விலகாத ஆவி ரூபனே
உன்னுள் கரைய அணுஅணுவாய் ஏங்கி
என் ஐம்புலனும் நரகத்தில் உழலுதே

எனை நீ உரசிச் செல்கையிலே
என் மூச்சு ஒரு நொடி நிற்கிறதே
செய்வதறியாது தவிக்கிறேன்
கடுந்தவம் நான் செய்கிறேன்

வந்தென் துன்பம் தீர்த்திடு
ஆனந்தக் கரையில் சேர்த்திடு
ஆலிங்கனத்தில் அமிழ்வேன்
விட்டு விடுலையாகிப் பறப்பேன்

இறப்பும் பிறப்பும் என்றுமே
நாணயத்தின் இரு புறமே
அர்த்தமுள்ள அவற்றின் சங்கமம்
நடக்கத்தானே கண்ணாமூச்சி நாடகம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community