Saturday, September 18, 2010

மீண்டும்

IndiBlogger - The Indian Blogger Community

சின்னக்குழந்தையின் சிமிழ் வாய் சிரிப்பில்
சிக்கனமில்லை பாகுபடுத்தும் பாவமில்லை
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் விழியில்
கொஞ்சம் கூட வஞ்சமில்லை நஞ்சுமில்லை
சின்னத்தலையில் தீய சிந்தனையில்லை
சீண்டிப்பார்க்கும் சின்னத்தனமில்லை

சூதுவாது தெரியாத பருவம்
கள்ளம் கபடு அறியாத உள்ளம்
எவரையும் எதையும் நம்பும் எளிமை
அழகான அமுதான அஞ்ஞானம்
ஆவலை மறைக்கத் தேவையில்லை
அன்பை மறுக்கத் தோன்றுவதில்லை

எழுதாத வெள்ளைக் காகிதம்
பிசையக் காத்திருக்கும் களிமண்
உளியால் செதுக்கிடவோர் சிற்பம்
இறைவன் எழுதிய அற்புத நவீனம்
விதியின் மதியின் கையிலோர் விடுகதை
வினையும் விபரமும் கலக்கும் தொடர்கதை

வளர வளரத் தேயும் அதிசய நிலவு
பழகப் பழக மாசுறும் அனுபவ உலகு
சறுக்கல்கள் சமரசங்கள் பல கண்டு
சர்க்கரையோ உப்போவென மயக்கம் கொண்டு
கருப்போ வெள்ளையோ எதுவென கலங்கி
சம்மதமில்லாப் பல கரைகளில் தங்கி

ஏன் வளர்ந்தோம்? எப்படி திரிந்த பாலானோம்?
இழந்த பரிசுத்தம் நிரந்தரமானதோர் இழப்போ?
இறைவன் கருணைக்கு எல்லையில்லை
இயற்கையில் எதுவும் இறப்பதில்லை
துவக்கத்தைத் தொட்டு முடியும் வட்டம்
மீண்டும் குழந்தையாகும் முதிய கட்டம்

பொக்கை வாயிலே வெள்ளை சிரிப்பு
பிரம்மானந்தத்தின் வழி வந்த களிப்பு
நினைவில் எதுவும் நிற்பதில்லை
நிலையாய் எதிலும் நாட்டமில்லை
நேற்றும் நாளையும் பொருட்டில்லை
நின்று போயிருக்கும் காலக்கடிகாரம்

2 comments:

  1. Wonderful.

    'வளர வளரத் தேயும் அதிசய நிலவு' என்றது அழகான ஒரு தொடர்.

    'கருப்போ வெள்ளையோ எதுவென கலங்கி' என்பது 'கறுப்போ வெள்ளையோ எதுவென கலங்கி' என்று இருக்கவேண்டும் ஐல்லையா?

    கருப்பு என்றால் Famine, dearth, scarcity என்று அகராதி சொல்லுகிறது.

    ReplyDelete
  2. Thank you! Sorry for the spelling mistake.

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community