Saturday, March 6, 2010

மரமோற்சவம்

மாறுகின்ற பருவங்கள்
மாற்றுகின்ற வண்ணங்கள்
மரங்களில் வசியங்கள்
மயக்குகின்ற கோலங்கள்
மாற்றமில்லா நியதிகள்
மந்திரக்கோலின் நிகழ்வுகள்
முடியாத வசந்தங்கள்

மணக்கின்ற கற்பனைகள்
மலருகின்ற உவமைகள்:

மருதாணி சிகப்புகள்
மகரந்த மஞ்சள்கள்
மண்மகளின் ஒப்பனைகள்
மின்னுகின்ற செந்தழல்கள்
மணியான நவரத்தினங்கள்
மாணிக்க வைடூரியங்கள்
மரகதத்தின் மறுபக்கங்கள்

மங்கையரின் கனவுகள்
மந்தகாச நினைவுகள்
மாருதமாகும் சாமரங்கள்
மாலை வான காட்சிகள்
மாயாலோக தரிசனங்கள்
மனம் வருடும் மயிலிறகுகள்
மெல்லத் தொடும் தளிர் விரல்கள்

மழைக் கால சாரல்கள்
மோகனமான ராகங்கள்
மெளன நாடகங்கள்
மொழியில்லா காவியங்கள்
மங்காத ஓவியங்கள்
மரபின் அதிசயங்கள்
மண்ணில் தேவதருக்கள்

மகிழ்ச்சியின் ரகசியங்கள்
மொட்டவிழும் கவர்ச்சிகள்
மடை திறந்த வெள்ளங்கள்
மாசில்லா களிப்புகள்
மட்டற்ற பரவசங்கள்
மனசுக்குள் பேரின்பங்கள்
மருந்தாகும் விருந்துகள்

மீண்டும் ஒரு இலையுதிர் காலம்
மீட்டிட காத்திருக்கும் நரம்புகள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community