Tuesday, March 16, 2010

விளையாட்டு

எங்கெங்கோ உன்னைத் தேடினேன்
தேடித் தேடி அலைமோதினேன்
திகைத்து நின்றுவிட்ட கணத்திலே
தேனாய் உன் குரல் என் காதிலே
கால்கள் ஓசை வந்த திசையிலே
கண்ணால் காணும் காட்சியானாய்
கைக்கு எட்டாமலே ஏன் நின்றாய்?
எட்டெடுத்து வைத்து நெருங்கினேன்
சுகந்தம் முகர்ந்து சொக்கினேன்
கிட்டத்து தரிசனத்தில் கிறங்கினேன்
கண்களின் கருமைக்குள் கரைந்தேன்
என் பிம்பமாயன்றோ தெரிகின்றாய்
நானேதானா நீயும்? நீயேதானா என் ஒளி?
நிழலாய் நின்றேனா? நிதமும் தொடர்ந்தேனா?
நீ அணைத்தால் உன்னுள் அடங்கிடுவேனா?
எனைத் தொலைத்துன்னுள் தொலைவேனா?
தெறித்து விழுந்த சிறு பொறியென்னை
திரும்ப விழுங்கும் பெருந்தீ நீதானா?
ஐம்பொறியை எரியவிட்டு பார்த்தாயே
அத்தனை வழியிலும் வழிந்து நின்றாயே
ஓடவிட்டு ஆடவிட்டு ஓய்ந்த பின்னே
ஏந்திக் கொள்ள காத்திருந்தாய்தானே?
மையப் புள்ளியாயிருந்தெனை வட்டமாய்
ஆட்டியபின் புள்ளிக்குள் இழுக்கிறாயே
தீராநதியின் ஓயாச் சுழலில் நானாய் நீ
விளையாடும் விளையாட்டுக்கு முடிவேது?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community