Saturday, March 13, 2010

சித்திரை

சித்திரையிலா தையிலா
வருடம் பிறப்பதெப்போ
மேதைகளிடை விவாதம்
பேதைக்கில்லை சந்தேகம்

காற்றிலே வேப்பம்பூ வாசம்
கட்டியம் கூறும் வரவேற்பு
காணும் திசையெங்கும் சிரிக்கும்
மயங்க வைக்கும் மல்லியப்பூ

சங்கம் வளர்த்த கட்டிலிலே
தமிழ் வளர்ந்த தொட்டிலிலே
பாண்டி மாநகரத்திலே
தினந்தோறும் திருவிழா

அழகு மீனாளின் மணவிழா
அனைவர் வீட்டிலும் பாயாசம்
மாசி வீதியிலே தேரோட்டம்
வைகையிலே அழகர் தரிசனம்

பால் போல் பெளர்ணமி காயும்
உல்லாசமான காலகட்டம்
சிற்பமாய் செதுக்கிய காட்சி
சித்திரமாய் மின்னும் கோலம்

சிங்கார கனவுகள் ஊற்றெடுக்க
சிருங்கார நினைவுகள் பொங்கிவர
மங்களமாய் மனைகள் துலங்கும்
மதுரமான மாதமே சித்திரை

உவப்பான திங்களிதிலே
உன்னதமாய் சிறந்திருக்க
தீந்தமிழர் இல்லங்களில்
பிறக்கும் புதிய ஓராண்டு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community