Friday, March 12, 2010

அவர்கள் அவல் மெல்கிறார்கள்

அவர்கள் அவல் மெல்கிறார்கள்- முதல் பாகம்

மேடையில் 4 நாற்காலிகள். ஒன்றில் ஒரு பெண் உட்கார்ந்திருக்க இன்னொரு பெண் வருகிறாள்.

ரமா: என்னக்கா, தனியா உக்காந்து என்ன யோசிச்சிகிட்டு இருக்கீங்க?
(அதை கேட்டுக் கொண்டே மேலும் இரண்டு பெண்கள் வந்து அமர்கிறார்கள்)
பூமா: சொல்லுங்கக்கா! நாங்களுந்தான் தெரிஞ்சிக்கிறோமே!
பாமா: சாயங்காலம் பள்ளிக்கூடத்துலேர்ந்து பிள்ளைகள் பசியோட வருவாங்களே, என்ன டிபன் செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.
உமா: நான் இப்பத்தான் முறுக்கு சுட்டு தூக்குல அடுக்கிட்டு வர்றேன்.
ரமா: நான் எப்பவும் 2,3 தினுசு பிஸ்கட் பாக்கெட்டை டப்பாவுல வச்சிருப்பேன்.
பூமா: நான் ஸ்டாக் தீர தீர பெரிய பாக்கெட் 2-minutes noodles வாங்கி வச்சிருவேன்.
பாமா: ஆமா. அதுவெல்லாம் போக பொரிகடலை, கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் போல ஏதாவது அவசர பசிக்கு வீட்டுல எந்நேரமும் இருக்கணும். ஏன்னா நம்ம இயற்கை உந்துதல்கள்லயே முதல் இடம் பசிக்குத்தானே?
உமா: பசி வந்திட பத்தும் பறந்துபோம்னு பழமொழி கூட இருக்கே!
ரமா: ஆமா, பசி வந்துட்டா 10 நல்ல குணங்களும் பறந்து போயிடுமாம்.
பாமா: இன்னொரு அர்த்தமும் இருக்கு அந்த பழமொழிக்கு: பத்தும்கிறத பற்றும்னு மாத்திச் சொல்லும் போது பாசம்ங்கிற பற்றும் பறந்து போயிரும்னு அர்த்தம் இருக்கு.
பூமா: ஓகோ! அதனாலதான் தாயும் சேயுமானாலும் வாயும் வயிறும் வேறுன்னு சொல்றாங்களோ?
உமா: பசியை உணர்த்துற வயிறு படுத்துற பாட்டைப் பற்றி ஔவையார் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? 'ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இரு நாள் உணவை ஏலென்றால் ஏலாய், இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தலரிது'
ரமா: ரொம்ப சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஒரு நா சாப்பிடாம இருக்கிறதும் கஷ்டம், 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டுக்கவும் முடியாது- ஒட்டகம் மாதிரி stock பண்ணிக்க முடியாதே! இப்படி தகராறு பண்ற வயிறோட வாழ்றது சிரமந்தானே?
பாமா: அவங்க கோணத்துல பாத்தா வயிறால தொந்தரவுதான். ஆனா, ஒரு மனுசனோட மனசுக்குள்ள நுழையறதுக்கு வயிறுதான் சரியான பாதைன்னு ஒரு ஆங்கில பழமொழி சொல்லுது: 'The way to a man's heart is through his stomach' அப்படின்னு.
பூமா: அது என்னவோ வாஸ்தவந்தான். வீட்டுக்காரருக்கும், பிள்ளைங்களுக்கும் வயிறார சாப்பாடு போடுற பொம்பளைங்க ரொம்ப மகிழ்ச்சியாத்தான் இருக்காங்க.
உமா: இவ்வளவு சர்வ வல்லமை படைச்ச வயிறு வீணா கர்வப்பட்ட ஒரு சமயத்துல மத்த உறுப்புகளெல்லாம் சேந்து வேலை நிறுத்தம் செஞ்சி அதுக்கு புத்தி புகட்டின நீதிக்கதைதான் நமக்கெல்லாம் தெரியுமே!
ரமா: ஆனா வயிற்றுப் பசிங்கிறது ரொம்ப கொடுமையானது. அத உணர்ந்ததுனாலதான் பாரதியார் 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,' அப்படின்னு பாடினாரு.
பாமா: பசிப்பிணியால அவதிப்பட்ட காயசண்டிகைக்கு மணிமேகலை கையிலிருந்த அமுதசுரபியால விமோசனம் கிடைச்சதுன்னு நம்ம தமிழ் காவியம் சொல்லுது.
பூமா: மணிமேகலைக்கு பசிப்பிணியை போக்குறதுக்கு ஒரு அமுதசுரபி தேவைப்பட்டது. ஆனா, மகாபாரதத்து திரௌபதியால பாத்திரத்துல ஒட்டிக்கிட்டிடிருந்த ஒரு பருக்கையில பெரிய விருந்து குடுக்க முடிஞ்ச அதிசயமும் நடந்திருக்கு.
உமா: திரௌபதியோட ஒரு பருக்கை பெரிய விருந்தானது அதிசயந்தான். அதைவிட அதிசயம் பெரிய ராஜா வீட்டு மொத்த கல்யாண சாப்பாடும் கடோத்கஜன்ங்கற ஒத்தை ஆளுக்கு பத்தலையாங்கிற சங்கதி.
ரமா: அந்த கடோத்கஜனை மாதிரியே நம்ம மதுரை மீனாட்சிய கல்யாணம் பண்ண வந்த சுந்தரேஸ்வரரின் பக்தனான குண்டோதரனும் மலையத்வராஜாவோட கல்யாண சாப்பாடு முழுசையும் சாப்பிட்டு முடிச்சானாம்.
பாமா: இப்படிப்பட்ட பெருந்தீனியர்கள் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் கோபெருஞ்சோழன், பிசிராந்தையார், கபிலர் மாதிரி நிறையப் பேர் வடக்கிருந்து - அதாவது உணவருந்தாம- உயிரை விட்டுருக்காங்க.
பூமா: பிற்காலத்துல உண்ணாவிரதம் நம்ம மகாத்மா காந்தி கையில எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமா இருந்து நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் குடுத்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே!
உமா: ஒவ்வொரு வருசமும் இன்னின்ன மாசத்துல, இன்னின்ன கிழமைல இத்தனை இத்தனை வேளை உண்ணாம நோன்பிருக்கணும்கிற பழக்கம் எல்லா மதத்திலயும் ஒரு ஆன்மீக நெறியா பல நூற்றாண்டுகளா இருக்கு.
ரமா: ஆமாமா. இப்படி விரதமிருக்கிற பழக்கத்தால நல்ல சிந்தனைகள் வளந்து தர்மம் தழைக்கிறதோட 'லங்கனம் பரம ஔஷதம்'னு சொன்ன வாக்குப்படி ஒரு சிறப்பான வைத்திய சிகிச்சையாவுமில்ல இருக்கு!
பாமா: ரொம்ப சரியா சொன்னீங்க! விரதம் இருக்கிறது உடல் நலத்துக்கு மட்டுமில்ல நாட்டோட பொருளாதாரத்துக்குமில்லா உதவி செஞ்சிருக்கு! நம்ம பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 'miss-a meal-on-Monday' அப்படிங்கிற திட்டத்த அறிமுகப்படுத்தினது எனக்கு ஞாபகம் வருது.
பூமா: அவரு திங்கட்கிழமை ஒரு வேளை சாப்பாட்டை குறைக்கச் சொன்னாரு. ஆனா எப்பவுமே கொஞ்சமா சாப்பிட்டா போதுங்கிற அர்த்தத்துல வள்ளுவர் 'செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' அப்படின்னு சொல்லியிருக்காரு.
உமா: எவ்வளவு சாப்பிடணும், எத்தனை வேளை சாப்பிடணும்னு பாத்தோம். சாப்பிடுறதுக்கு இதுதான் முறைன்னு இருக்குமே?
ரமா: இருக்கே! 'மருந்தேயாயினும் விருந்தோடுண்' அப்படின்னும், 'அறுசுவை உணவேயானாலும் விருந்தில்லா உணவு பாழ்' அப்படின்னும் தமிழர்கள் விருந்தோம்பல் பழக்கத்த அழகா கடைபிடிச்சிருக்காங்க.
பாமா: அப்படி விருந்தினர்களோடதான் சாப்பிடணும்ங்கற பழக்கத்திலுள்ள முக்கியமான அனுகூலம் என்னனா 'விருந்து கண்டொழித்த ஊடல்'ன்னு புருசன் பொண்டாட்டிக்குள்ள வர்ற சின்ன சண்டைகள் கூட விருந்தினர்கள் முன்னால காணாமப்போயிரும்னு சொல்லியிருக்காங்க.
பூமா: விருந்தினர்களப் பத்தி நிறைய கதைகள் இருக்கு. அதுல வேடிக்கையும் இருக்கு, விபரீதமுமிருக்கு. சபரி தன்னோட அதிதிகளான ராமலட்சுமணர்களுக்கு பழத்த கடிச்சி சுவைச்சிப் பாத்து பரிமாறுனதுல எச்சில் கூட புனிதமானதா மாறியிருக்கு. அதே மாதிரி சிவனடியார் ரூபத்துல வந்த ஈசன் பிள்ளைக்கறி கேட்ட சோதனையிலும் அந்த தம்பதியோட விருந்தோம்பல் பக்திதான் ஜெயிச்சது.
உமா: இதுலேர்ந்து என்ன புரியுது? எதை விருந்தா பரிமாறுகிறோம்கிறது முக்கியமில்ல. ஆத்மார்த்தமான அன்போட பரிமாறுகிற விருந்துக்கு தனி சிறப்புத்தான். இதுக்கு இன்னொரு உதாரணமும் இருக்கு. பாரி வள்ளலோட இரு மகள்களான அங்கவையும், சங்கவையும் ஏழ்மையான நிலையில இருந்தப்ப ஔவை பாட்டிக்கு எளிய கீரையை சமைச்சு பரிமாறினாங்களாம். அதுவே ஔவைக்கு சுவையான விருந்தாயிருந்துச்சாம்.
ரமா: எளிய உணவுன்னதும் குசேலர் கிருஷ்ணருக்கு அன்போட கொண்டு போன அவல் ஞாபகத்துக்கு வருது. ஒரு பிடி அவலுக்குள்ள ஒளிஞ்சிருந்த குசேலரோட அன்பு அவருக்கு குபேர செல்வத்தையில்லையா குடுத்துச்சி?
பாமா: அன்போட குடுத்த அவல் சுபிட்சத்த குடுத்ததென்னவோ நிசந்தான். ஆனா கலகக்கார நாரதர்கொண்டு வந்து குடுத்த மாம்பழத்தால பரமசிவன் குடும்பத்தில பிரிவினையில்லியா உண்டாச்சி?
பூமா: அருமையான மாம்பழம் அண்ணன் தம்பிக்குள்ள சண்டைய உண்டாக்கிச்சி. ஆனா ஔவைக்கு அதியமான் குடுத்த அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு பெருமையை தந்துச்சி.
உமா: இந்த ஔவை பாட்டி இருக்காங்களே அவங்க லேசுப்பட்டவங்க இல்ல. இப்ப பார்ட்டி குடுத்து பெரிய புள்ளிகள் எல்லாம் காரியம் சாதிச்சிக்கிறாங்களே, அந்தப் பழக்கம் அந்தக் காலத்துலயும் இருந்திருக்கு. ஔவை பாட்டி பிள்ளையார்கிட்டப் போயி பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும் நான் தர்றேன், பதிலுக்கு சங்கத்தமிழ் மூணும் நீ எனக்குத் தான்னு பேரம் பேசியிருக்காங்க.
ரமா: சங்கத்தமிழை ஜெயிச்சது ஔவைன்னா சாதாரண குடிமக்களும் கூட பேச்சுத் தமிழ்ல அழகை கூட்டியிருக்காங்க. சாப்பாட்டை சம்பந்தப்படுத்தியே நிறைய நல்ல பழமொழிகளை உருவாக்கியிருக்காங்க. 'ஒரு பானை சோத்துக்கு ஒரு பருக்கை பதம்', 'ஒரு பிள்ளை பெத்தவனுக்கு உறியில சாப்பாடு, நாலு பிள்ளை பெத்தவனுக்கு நாய்சட்டியில சாப்பாடு', 'வெறும் வாயை மெல்றவனுக்கு அவல் கிடச்ச மாதிரி' அப்படின்னு சொல்லிகிட்டே போகலாம்.
பாமா: முக்கியமான இயற்கை உந்துதலான பசியைப் பத்தி பேச ஆரம்பிச்ச நமக்கு அத மைய்யமா வச்சி இத்தனை சுவையான சங்கதிகள் இருக்கிறத தெரிஞ்சிகிட முடிஞ்சிருச்சே!
பூமா: வாய் மணக்க, வயிறு நிறைய விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைச்சிருச்சி.
உமா: நாலு பெண்கள் கூடி பேசினா நாலு நல்ல விஷயங்கள தெரிஞ்சிக்க முடியும்ங்கிற உண்மையும் நிரூபணமாயிருச்சி.
ரமா: அடுத்த சந்திப்பு வரைக்கும் இந்த இனிய நினைவுகல அசை போடுறதும் ஒரு சந்தோஷந்தானே!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community