ஆரிய உதடும் திராவிட உதடும்
ஆர்வமாய் உறவாடியிருக்க
அவனியதில் களிப்பேறியிருக்க
என்னவளின் சின்ன உதடுகள்
சிறு சிரிப்பும் சிந்தாததேன்
என் சிந்தை மிக நொந்ததேன்
முல்லைப்பூ இதழலளவேனும்
சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ
பெண்ணே புகையிலையல்ல நீ
வாசமிழந்து போய்விடுவதற்கு
காசா பணமா சிரிப்பதற்கு
செலவில்லா செயலல்லவோ
கருமி போல் காரிகையே
காத்து என்ன செய்வாயோ
காத்து நான் நிற்கின்றேன்
சொர்க்கவாசல் திறக்குமென
மாதுளை இதழ்களிடையே
பச்சரிசி பல்வரிசை பார்த்திடவே
கண நேர மின்னலில்
கண் கூசிப் போவதுபோல்
இருண்ட மன வானிலே
ஒளிவெள்ளம் பாயுமென
தவமான தவமிருந்து
தவித்துக் கிடந்த பின்னே
தடாகத்துத் தாமரை போல்
குவிந்த மொட்டு திறந்தது
குமிழ் சிரிப்பும் பிறந்தது
அந்தோ!விரிந்த மலரும் மூடுமோ
மீண்டும் மொட்டாய் மாறுமோ
விந்தையென்ன விந்தையோ
விளங்காத மர்மமோ
மறுபடியும் மெளனமோ
கொத்தாய் சிரிக்கும் கொடிமலராய்
நீ சிரித்திருக்கக் கூடாதோ
விரிந்திருக்கும் புது மலராய்
பூத்தே இருக்கக் கூடாதோ
பூட்டிப் பூட்டி வைப்பதேன்
புன்னகைதான் பொன்னகையோ
பொல்லாத கள்ளியே
கொள்ளையடித்தவளே
முள்ளால் மூடியவளே
சுலபமாய் உதட்டில் ஒட்டிய சிரிப்புடனே
சுதந்திரமாய் சுந்தரிகள் சுற்றிவர
அரிதாய் சிரிப்பவளே
அரிதாய் இருப்பவளே
அரிதாய் இருப்பதே
ஆர்வம் தருவதே
அரிதான கருத்தினை
அறிந்தேன் அரிவையே
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment