அதிசயம்தானது
அனுதினம் பார்ப்பது
பருவத்தில் மலருது
பால் போல் பொங்குது
பாடாய் படுத்துது
பாட்டாய் பாடுது
தூக்கத்தை கெடுக்குது
துக்கத்தில் வாட்டுது
இமைகள் வழியாக
இதயம் நுழைந்தவளை
எண்ணியே வாடுது
புண்ணாய் மனமுமே
கடைக்கண் பார்வைக்கு
கடுந்தவம் நடக்குது
கம்பனும் காளிதாசனும்
காணாத கற்பனை
கொட்டுது கவிதையாய்
கெட்டது பிற சிந்தனை
பெற்றோர் பெரிதில்லை
பிறந்த குடி பொருட்டில்லை
காதலே மூச்சாய்
கடையாணி அச்சாய்
காலம் கரைந்திட
ஞாலம் மறந்திட
அலுக்காது காத்திருந்து
அணு அணுவாய் செத்திருந்து
செத்துப் பிழைத்தெழுந்து
பித்தாகி வரம் கேட்டு
அடைவான் ஆனந்தம்
முடிவாய் ஒரு நாளிலே
முடிந்திடும் ஒரு சகாப்தம்
தொடங்கிடும் மறு அத்தியாயம்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அக்னி அதனை வலம் வந்து
அடியெடுத்து சதிபதியாய் நடந்தவர்
அடுத்து நடப்பதை எதிர்பாராதவர்
பூமாலை சுமந்த தோளில்
பாரமாய் அமரும் கடமை
அரசனாய் ஆண்டு பழகியவனுக்கு
அடுப்படியில் மெத்த பணியிருக்கு
மங்கைக்கு மாதாந்திர தொல்லை
மற்றும் மசக்கை மகப்பேறு
அலுவலக பணியோடு
அலுப்பாகுது அன்றாடம்
எல்லைகள் எழும்புது
தொல்லைகள் அத்துமீறல்கள்
அவரவர் உரிமைகள்
அங்கில்லை பொதுமைகள்
பார்வைகள் எரிக்குது
வார்த்தைகள் தடிக்குது
நாணலாய் வளையாமல்
கோணலாகுது சிந்தனை
காத்திருந்து பறித்த கனி
கசந்துதான் போகுது
மணமாலை வாசம் மறந்து
மழலைகள் நலன் துறந்து
பொறுமையெனும் சொல்லொழிய
வெறுமையான உறவாக்கி
முக்கால பந்தம் இன்று
முறிந்தே தான் போகுது
பாட்டியை பூட்டியைப் போல்
வீட்டிலடைக்க முடியாதிவளை
குடிப்பவனை அடிப்பவனை
கூத்தியாளை கொண்டவனை
தெய்வமாய் கொண்டாடிய
செய்தி இன்று பழைய கதை
தன்னிரு காலில் நின்றிடுவாள்
தனியாய் வாழ்ந்து காட்டிடுவாள்
நாலும் கற்றறிந்த நங்கைக்கு
நாளைக்கு மீண்டும் வசந்தமுண்டு
புது யுகம் இதோ பிறந்திருக்கு
எதுவெதுவோ இனி நடந்திருக்கும்
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment