Friday, March 12, 2010

சக்தியை போற்றுதும்

கானகத்தே கடுந்தவம் செய்தே
மாமுனி பெற்றான் பெரும்பலனே
நடந்தான் நாட்டை நோக்கியே
நாடி வருவோர்க்கு நல்லாசி வழங்கவே
தலை மேலே பறந்த கொக்கொன்றுமே
அந்தோ! அவன் மேல் எச்சமிட்டதுவே
பொங்கி எழுந்த கோபத்திலே கனலாய்
நோக்கினான் பகுத்தறிவில்லா பறவைதனை
பொசுங்கித்தான் போனதது ஒரு நொடியிலே

தவ வலியுணர்ந்து மதர்ப்புடன் சென்றான்
கண்ணில் பட்ட கதவின் முன்னின்று
அழைத்தான் விருந்தோம்பல் வேண்டி
மங்கை நல்லாள் தன் மணாளனுக்கு
மதிய உணவு படைத்திடும் நேரமது
பார்த்துப் பார்த்துப் பரிமாறி பசியாற்றி
பின்னரே பதறாமல் வாசலுக்கு வந்தாள்

தாமதத்தை அவமதிப்பாய் கருதிவிட்ட
தவமுனி தத்தளித்தான் தணலிலே
கொதிகலனாய் கொதித்தான் கோபத்திலே
காக்க வைத்த காரிகையை கண்ட உடன்
எரி தழலை பார்வையாயவன் வீசினான்
கலங்காது வினவினாள் இளைய நங்காள்:
'கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?'
சாம்பலாவாளோ சமர்த்துப் பெண்டாட்டி?
காணாத காட்சியை கொக்கின் கதையை
ஞானத்தால் உணர்ந்த பெருமாட்டி!

பிறழாத நெறிகள்தானே அவள் திறம்
தவமுனியின் பலத்தை விஞ்சும் வரம்
தெய்வம் தொழாது கொழுநனை தொழுது
மழை பெய்ய கட்டளையிடும் கண்ணாட்டி
இல்லாளாய் இருந்து இல்லம் நிறைத்திருந்து
இல்லாத நலனில்லை தலைவன் வாழ்விலென
நடத்தும் இல்லற வாழ்வின் விளக்கானவள்
பத்தினியாம் பத்தரை மாற்று பொன்னவள்
மானிடர் வாழ்வை இயக்கும் அச்சானவள்
மானிலம் போற்றும் சக்தியின் உருவானவள்
மாண்பினை கொண்டாடும் நன்னாளிதுவே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community