Friday, March 12, 2010

வையம் காப்பாளா?

ஆமை போல் ஐம்புலனை
அடக்கச் சொன்னான்
அறியாத வள்ளுவன்
இன்பத்தை அள்ளுவதில்
இருபாலருக்கும் தெளிவாய்
இலக்கணம் வகுத்தான்
முப்பாலும் தொகுத்து
முழுவதும் உணர்ந்தவன்

புராண காலம் முதலே
பிறன்மனை நோக்கலும்
பரத்தையர் நாடலும்
புருஷ லட்சணமாம்
சேல் அகற்றிய மாதர்
சிலரே இருந்தனர்
பிறரோ பெரும்பான்மை
போற்றினர் கற்பை

வீட்டுக்குள் இயங்கி
வம்சம் பெருக்கி
ஆணின் அடியொற்றி
அவன் சேவையிலே
வாய் ருசி குறையாது
வயிற்றை நிறைத்து
சுற்றம் அணைத்து
தானும் அடங்கினாள்

வெளி உலகம் அறியாள்
வேறு விவகாரம் வேண்டாள்
சிறப்பான கைநேர்த்தியும்
சீரான சிந்தனைகளும்
நேரான நியமங்களும்
நெறியோடு கடைபிடித்து
நிம்மதியாய் நடந்திட்டாள்
நல்வாழ்வை நடத்திட்டாள்

ஆணைகளை ஏற்றவள்
ஆண்மகனை சார்ந்தவள்
கேள்விகள் கேளாதவள்
நிறைவாக வாழ்ந்தவள்
புது ஒளியில் குளித்தாள்
புலன்கள் சிலிர்த்தாள்
குறைகள் கண்டாள்
குறுகிப்போனாள்

கண் விரித்துப் பார்த்தாள்
ஆண் போக்கை அளந்தாள்
அவன் பாதையில் நடந்தாள்
அடக்கம் துறந்தாள்
அகந்தை வளர்த்தாள்
கட்டுக்கள் உடைத்தாள்
காமத்தை போற்றினாள்
புலன் போதையில் உழன்றாள்

தான் தன்சுகமென
தனிப்பாதை வகுத்தாள்
தாதியாய் பேணவில்லை
முதியோரை மழலையரை
தாரமாய் மணக்கவில்லை
சதியவளிடம் இணக்கமில்லை
இல்லத்தின் ஒளிவிளக்காய்
இருந்திட விருப்பமில்லை

இருட்டியபின்னும் அலுவலாம்
இடம் மாறி பணிகளாம்
இடுப்பொடிய நோகிறாள்
கடுப்படிக்கும் சூழல்களில்
பந்தயக்குதிரையாய்
சாதித்து முறிக்கிறாள்
எதையெதை தொலைத்தாள்
எதைத்தான் ஈட்டினாள்


நாணமில்லா கயல்விழிகள்
மறைக்காத வனப்புகள்
கொச்சையான அழைப்புகள்
கூசாத பெண் தேகம்
காளையாய் மாறிய பெண்கள்
காளைகள் திணறுவது உண்மை
ஆண்பெண் சமத்துவமா
அவரவர் மாண்பின் இறக்கமா

தளிர்மேனியாள் தாரமா
குளிர் தருவான தாயா
கூட வரும் நிழலா
குடை பிடிக்கும் ஆலா
பெண்மையின் நிறமெது
பணமா பதவியா பலமா
தனைத் தேய்த்து மணப்பாளா
தானே வையம் காப்பாளா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community