கருப்பட்டி வட்டுப் போல
கல்கண்டு கட்டி போல
கரும்புச்சாறு போல
கண்ணாட்டி நீயிருக்க
கழுநீர் தேடிப்போவேனோ
கொடிமுல்லை பூப்போல
கொய்யாத பிச்சி போல
கொழுந்து வெத்தலை போல
கனகமணி நீயிருக்க
கத்தாழை மேல் வீழ்வேனோ
கயல்மீனைப் போல
கடல் ஆழம் போல
கருவைரமணி போல
கண்மணி நீயிருக்க
கசடு எனை இழுக்குமோ
குத்துவிளக்குப் போல
குளிர்நிலவு போல
குன்றாத செல்வம் போல
குலமகள் நீயிருக்க
குப்பைமேட்டை பார்ப்பேனோ
காக்கும் தெய்வம் போல
கலங்கரை விளக்கம் போல
கலையாத கனவு போல
காதல்மனை நீயிருக்க
கண்டவளை நினைப்பேனோ
கானக்குயில் போல
கானக மயில் போல
கஸ்தூரி மான் போல
கட்டழகி நீயிருக்க
கால் தவறி நடப்பேனோ
கரைக்குள் ஓடும் ஆறு போல
களிப்பூட்டும் காற்று போல
கவிந்து மூடிய வானம் போல
காரிகையே நீயிருக்க
கயமை எண்ணம் தோன்றுமோ
கற்காத மொழி போல
கேளாத கதை போல
காணாத மாயம் போல
கவிதையே நீயிருக்க
கதி மாறிப்போவேனோ
என் ஒருத்தியே
எனை நிறுத்தியே
ஏற்றம் தந்தவளே
ஏழ்பிறவி இணைந்தவளே
இன்பம் இதுவல்லவோ
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment