கண்ணுக்கு மை தீட்டும்
கரு மீன் கண்ணழகியே
கண்ணாடி முன்னால் ஏன்
கழிக்கின்றாய் பொழுதினை
மை பூச பழகிய நாள் முதலாய்
நடை தளர்ந்த இந்நாள் வரை
என் தோழியானவளை இனியும்
பழிக்காதே பொல்லாத பரமசிவனே
என்னடி எந்நேரமும் தாளிப்பு
சின்னக் குறுக்கும் கடுக்க
அடுப்படியில் அங்கயர்கண்ணி
அல்லாடிட நானும் சகியேனடி
சுடத்துவங்குது அடுப்புக் கணப்பு
பிடறிக்கு பின்னாலேயோ உம்மூச்சு
இடர் செய்யாதே இடையினிலே
ஆடலரசா சுடலைவாசா மகேசா
காய் நறுக்கித் தட்டுக் கழுவி
கணிணிதனிலே தட்டித் தட்டி
வெண்டைப்பிஞ்சு விரல் நோகுமே
சொடக்கெடுக்கட்டுமா சொக்கியே
சவலைப்பிள்ளை போல் அழுவாயோ
காலைச் சுற்றும் குட்டிப் பூனையோ
இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்ள
உடுக்கையடிக்கும் ஓங்கார உலகநாதா
துவைத்த துணி காயப் போடட்டுமா
எக்கி எம்பி ஏனுனக்கு சிரமமோ
காய்ந்த துணிகளை மடிக்கட்டுமா
மடிகலையா மங்கையர்க்கரசியே
புறவுலகை புறக்கணித்தாய்
என் காவல் ஒன்றே கடமை
என்றே உனக்குள் கணித்தாய்
ஏகாம்பரனே ஏகாந்தசித்தனே
துள்ளிக் குதித்தோடிய றெல்லாம்
அமைதியாய் கடலில் கலந்திருக்க
எள்ளி நகையாட இங்கேதுமில்லை
என்னாவியில் கலந்த மதுரவல்லியே
ஒற்றைச் சொந்தம் ஆனவனே
ஓராயிரம் வதம் செய்பவனே
உயிரில் உறவை நெய்தவனே
சுவையே சுகமே சொக்கநாதா
வரிகளும் நரையும் வருடங்கள்
வரைந்து சென்ற நேரத்திலே
வளர்ந்து நிறைந்த வரமானவளே
வடிவுக்கரசியே என் பூரணியே
கோலமும் காலமும் மாறினாலும்
கரைகள் அணைக்கின்ற நதியாக
கணங்கள் இனிக்கும் நற்கதியாக
காக்கின்றாய் கருத்தாய் சுந்தரேசா
ஆணும் பெண்ணுமாய் நாமே அவதரித்து
பிறவிகள்தோறும் இயல்பாய் சங்கமித்து
பெயர்கள் மாறி வாழும் நியமத்திலே
பேறுகள் மாறாத நியதிதானென்னே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment