Monday, March 15, 2010

சம்சாரம்

கண்ணுக்கு மை தீட்டும்
கரு மீன் கண்ணழகியே
கண்ணாடி முன்னால் ஏன்
கழிக்கின்றாய் பொழுதினை

மை பூச பழகிய நாள் முதலாய்
நடை தளர்ந்த இந்நாள் வரை
என் தோழியானவளை இனியும்
பழிக்காதே பொல்லாத பரமசிவனே

என்னடி எந்நேரமும் தாளிப்பு
சின்னக் குறுக்கும் கடுக்க
அடுப்படியில் அங்கயர்கண்ணி
அல்லாடிட நானும் சகியேனடி

சுடத்துவங்குது அடுப்புக் கணப்பு
பிடறிக்கு பின்னாலேயோ உம்மூச்சு
இடர் செய்யாதே இடையினிலே
ஆடலரசா சுடலைவாசா மகேசா

காய் நறுக்கித் தட்டுக் கழுவி
கணிணிதனிலே தட்டித் தட்டி
வெண்டைப்பிஞ்சு விரல் நோகுமே
சொடக்கெடுக்கட்டுமா சொக்கியே

சவலைப்பிள்ளை போல் அழுவாயோ
காலைச் சுற்றும் குட்டிப் பூனையோ
இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்ள
உடுக்கையடிக்கும் ஓங்கார உலகநாதா

துவைத்த துணி காயப் போடட்டுமா
எக்கி எம்பி ஏனுனக்கு சிரமமோ
காய்ந்த துணிகளை மடிக்கட்டுமா
மடிகலையா மங்கையர்க்கரசியே

புறவுலகை புறக்கணித்தாய்
என் காவல் ஒன்றே கடமை
என்றே உனக்குள் கணித்தாய்
ஏகாம்பரனே ஏகாந்தசித்தனே

துள்ளிக் குதித்தோடிய றெல்லாம்
அமைதியாய் கடலில் கலந்திருக்க
எள்ளி நகையாட இங்கேதுமில்லை
என்னாவியில் கலந்த மதுரவல்லியே

ஒற்றைச் சொந்தம் ஆனவனே
ஓராயிரம் வதம் செய்பவனே
உயிரில் உறவை நெய்தவனே
சுவையே சுகமே சொக்கநாதா

வரிகளும் நரையும் வருடங்கள்
வரைந்து சென்ற நேரத்திலே
வளர்ந்து நிறைந்த வரமானவளே
வடிவுக்கரசியே என் பூரணியே

கோலமும் காலமும் மாறினாலும்
கரைகள் அணைக்கின்ற நதியாக
கணங்கள் இனிக்கும் நற்கதியாக
காக்கின்றாய் கருத்தாய் சுந்தரேசா

ஆணும் பெண்ணுமாய் நாமே அவதரித்து
பிறவிகள்தோறும் இயல்பாய் சங்கமித்து
பெயர்கள் மாறி வாழும் நியமத்திலே
பேறுகள் மாறாத நியதிதானென்னே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community