Saturday, March 13, 2010

அல்லி-மல்லி அலசல்-3

அல்லி: என்ன மல்லி, தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருக்க?

மல்லி: நேத்து ராத்திரி ஒரு ஹோட்டல்ல நடந்த விருந்துக்கு போய்ட்டு வந்தேன். அங்க இசைக்கருவிகள் சத்தமா ஒலிச்சதுல இன்னும் தலைக்குள்ள இடிக்கிற மாதிரி ஒரு வலிய என்னால தாங்க முடியல.

அல்லி: உனக்கு மட்டுமில்ல, இந்த சத்தமான, ஆரவாரமான இசை நிறையப் பேருக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ஹோட்டல்ல, பொழுதுபோக்கு இடங்கள்ல, கடைத்தெருவில எங்க போனாலும் காதுல அறையத்தான் செய்யுது.

மல்லி: ஆமா, கார்ல போகும் போதும் இசை வேண்டியிருக்கு, வேலை செய்யும் போது கூட காதுல வாக்மேனோடதான் நிறையப் பேர் திரியறாங்க.

அல்லி: வீட்டுல இந்த இளந்தலைமுறையினர் அதிர வைக்கிற இசை மூலமா அவங்க முத்திரைய பதிக்க முயற்சி செய்யிற மாதிரி இருக்கு.

மல்லி: இந்த அளவு டெசிபல் தொடர்ந்து தாக்கினா செவிப்பறை சேதமாயிடும்னு அறிவிப்புகள் வந்தாலும் இந்த ஒலி மாசுப்படுத்தல் தொடருது, கூடிக்கிட்டேயும் போகுது. யாருக்கும் காதை காப்பாத்திக்கிற அக்கறை இருக்கிற மாதிரி தெரியல.

அல்லி: நாடியை நீவி சாந்தப்படுத்துற மாதிரி இதமான, மெல்லிய சங்கீதம் இருக்கு, அதை விட்டுட்டு நரம்பை முறுக்கேத்தி விலுக் விலுக்குனு சுய நினைவில்லாம ஆட வைக்கிற ராட்சஸ இசையை நாடுறவங்கள பாத்தா வேடிக்கையா இருக்கு.

மல்லி: மனிதர்களோட ரசனையிலதான் எண்ணிப் பார்க்க முடியாதபடி அத்தனை வேறுபாடு இருக்கறதத்தான் இது காட்டுது. இசை ரசனை மட்டுமா மாறிக்கிட்டு வருது? பாடல்களின் வரிகளை கேட்டியா? முக்கால்வாசி காது கூசுற மாதிரி பச்சையா, கொச்சையாயில்ல இருக்கு? சிருங்கார ரசம் அவசியமானதுதான். ஆனா இலை மறை காய் மறையா அத வெளிப்படுத்தின விதத்தில இருக்குற அழகு இப்படி அப்பட்டமா, அதிரடியா வெளிப்படுத்துறதுல இருக்குறதா எனக்குத் தோணல.

அல்லி: இப்படி சொல்றவங்கள தலைமுறை இடைவெளின்னு சொல்லி ஒதுக்கித் தள்ளிட்டு சிறுசுங்க போய்கிட்டே இருக்குதுங்க.

மல்லி: பெரியவங்க சொல்றத காதுலயே போட்டுக்கிறதில்லைன்னு சங்கல்பம் செய்துகிட்டவங்க மாதிரியில்ல நடந்துக்கிறாங்க? செவிடன் காதுல சங்கூதுனது மாதிரி இருக்கு.

அல்லி: ஆமா, மல்லி. யோசிச்சிப் பாத்தா, இறைவன் கொடுத்த நம் ஐம்புலன்கள்லயும் செவிதான் மிகச் சிறப்பானதுன்னு தோணுது.

மல்லி: அல்லி, நீ சொல்றது ரொம்ப சரி. நம்மோட வாழ்க்கைல செவியோட பங்கு ரொம்ப பெரிசு, ரொம்ப முக்கியமானது. ஒலிகள் இல்லாத ஒருவர் உலகம் மொழியில்லாத ஊமை உலகமாவும் போயிடுமே!

அல்லி: உணவுதான் அடிப்படை தேவைன்னு சொல்லுவோம், ஆனா அதை விட அதிக முக்கியத்துவத்த வள்ளுவர் செவிப்பயனுக்கு கொடுக்கிற விதத்தில “செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”னு சொல்லியிருக்காரு.

மல்லி: செவிக்கு உணவா நம் காதுகள்ல அன்றாடம் பல சேதிகள் வந்து சேருது. பலது ஒரு காதுல வாங்கி இன்னொறு காதுல விட்டுறலாங்கிற வகை. சிலது உள்ளே வாங்கி நினைவில இருத்தி பயன்பட வேண்டியது, சிலது இன்னும் பல பேர் காதுகள சென்றடைய வேண்டிய நல்ல விஷயங்கள்.

அல்லி: மல்லி, நீ சொல்றத கேட்டதும் ஒரு மிகப் பழைய திரைப்படத்துல இத ஒரு நகைச்சுவை காட்சியா விளக்கினது ஞாபகம் வருது.

மல்லி: அப்படியா?

அல்லி: ஆமா. பாக்க ஒரே மாதிரி இருக்கிற 3 பொம்மைகளோட வித்தியாசங்கள கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு போட்டி. போட்டியில ஜெயிச்சவர் ஒரு ஈர்க்குச்சியை ஒரு பொம்மையின் ஒரு காதுக்குள்ள விடும் போது அது மற்றொரு காது வழியா வெளியே வந்துரும். அடுத்த பொம்மையின் ஒரு காதுல விட்டப்ப வாய் வழியா வெளியே வந்துரும். மூணாவது பொம்மையின் ஒரு காதுல விட்டப்ப அது இன்னொரு காது வழியாவும் வரல, வாய் வழியாவும் வரல. உள்ளயே நின்னுகிச்சி. ரகசியம் காக்க எத்தனை பேருக்கு முடியும்னு நினைச்சா சிரிப்பா வருது.

மல்லி: பெண்கள் காதுல போட்ட ரகசியம் நிக்காதுன்னு ஒரு பழி வேற இருக்கு. யார்கிட்டயாவது சொல்லாட்டி தலையில்ல வெடிச்சிருமாம்.

அல்லி: அதையும் ஒரு பழைய திரைப்படத்துல நகைச்சுவையா காட்டினாங்க. ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கழுதைக் காதாம். ஆனா யாருக்கும் தெரியாதபடி மூடி மறைச்சிக்கிட்டாராம். ஆனா அவருக்கு முடி திருத்தும் நாவிதனுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரியும். அவன் அதை தன் மனைவிகிட்ட ரகசியமா வச்சிக்கச் சொல்லி வெளியிட்டதும் அவளுக்கு அந்த ரகசியத்த வெளிய சொல்லாம இருக்கிறது ஒரு பெரிய உடல் அவஸ்தையாகவே வந்து துடிக்கவே அந்த நாவிதன் சமயோசிதமா யோசிச்சி ஒரு குழி தோண்டி யாருக்கும் தெரியாம அவள அதுக்குள்ள ரகசியத்த சொல்லச் சொல்லி குழியை மூடிட்டான். வேடிக்கை என்னன்னா குழிக்குள்ள இருந்த ஒரு விதை முளைச்சி நாளடைவில பெரிய மரமாகி, அந்த மரத்த அறுத்து அதில ஒரு மத்தளம் செஞ்சி அத ராஜாவோட சபைல ஒரு கலைஞர் தட்டும் சமயத்துல அது “ராஜா காது கழுதைக் காது ராஜா காது கழுதைக் காது” அப்படின்னு ஒலிச்சிதாம்!

மல்லி: ரொம்ப வேடிக்கையாத்தான் இருக்கு, அல்லி, இந்தக் கதை. காதால கேட்குற சங்கதிகள என்ன செய்யணும்னு சீர்துக்கிப் பாக்குற திறமைய, பக்குவத்த நாம கண்டிப்பா வளத்துக்கணும். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே.

அல்லி: பின்னே, கேழ்வரகிலே நெய் வடியுதுன்னா கேட்கிறவனுக்கு எங்க போச்சி புத்தின்னு கேட்கமாட்டோமா?

மல்லி: வாய் ஒன்னுதான், காது ரெண்டு, ஏன் தெரியுமா? குறைவா பேசி, நிறைய கேட்டு ஞானத்தை வளக்குறதுக்காக.

அல்லி: ரொம்ப சரி. அளந்து பேசுற கொஞ்சத்தையும் இரவு நேரத்தில முழுசா கைவிடணும்னு “பகல்ல பக்கம் பாத்துப் பேசு, இரவில் அதுவும் கூடாது”ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஏன்னா சுவத்துக்கும் காது இருக்குமாம்!

மல்லி: சரியாப் போச்சு! இப்படித்தான் காதே இல்லாத பாம்பை வம்புக்கிழுக்கிற மாதிரி செவிப்புலன் கூர்மையா இருக்கிறவங்களுக்கு கடுப்போட “பாம்புச்செவி”ன்னு பட்டப்பெயர் வைக்கிற வழக்கமும் இருக்கு.

அல்லி: மல்லி, பெரிய காதுள்ளவங்களுக்கு, னைமுகனை நினைச்சோ என்னவோ, ஞானம் அதிகம்னு தாரமில்லாத கருத்தும் இருக்கு!

மல்லி: அப்ப சரி, இனிமே எல்லோர் காதையும் கவனிச்சி ஒரு கணிப்பு செஞ்சிர வேண்டியதுதான்!

அல்லி: வீணா வம்பில மாட்டிக்காத, மல்லி. இன்னொன்னு தெரியுமா? பகல்ல பொழுது போகாதவங்க வெறும் வாய மெல்லாம அவல் மாதிரி பல ரகசியங்கள பகிர்ந்துக்கிறாங்க. அதாவது “காதை கடிக்கிறாங்க”! னா ராத்திரியில மனைவி கணவன் காதுல ரகசியமா பேசுறத “தலையணை மந்திரம்”ன்னு சொல்லி பல மாமியார்கள் அநாவசியமா பயத்தோடயும், சந்தேகத்தோடயும், எதிர் போர் நடவடிக்கையுமா அலையுறது கூட்டுக் குடும்ப காலங்கள்ல சகஜம்.

மல்லி: ஆமாமா. மனைவி ராத்திரி கணவன் காதுல தலையணை மந்திரம் ஓதுன மாதிரி சுவாமிமலைல குமரன் தகப்பன் காதுல ஓதுனது பிரணவ மந்திரம்.

அல்லி: அந்த “விடையேறிய சிவனை” “தோடுடைய செவியன்”ன்னு சொன்ன மாதிரி அபிராமி பட்டர் வணங்கிய அம்மனும் வசதியா காதுல வைரக்கம்மல் அணிஞ்சிருந்ததால தன் மேல பூரண நம்பிக்கை வச்சிட்ட, இக்கட்டுல மாட்டிக்கிட்ட பக்தனை காப்பாத்துறதுக்கு ஒரு கம்மல கழட்டி வானத்துல வீசி பௌர்ணமிய உண்டாக்கினாங்களாம்.

மல்லி: அம்மன் காதுகள அலங்கரிக்கிற வைரக்கம்மலுக்கு சாமன்யப் பெண்கள் சைப்பட்டா நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்துல, “சீமைக்கமலம் போடாட்டா காது கேட்காதோ”ன்னு கேட்ட மாதிரி கேட்க வேண்டி வரும்.

அல்லி: அடடா! காதைப் பத்தி கதைச்சிக்கிட்டு இருந்ததில பொழுது ஓடிருச்சி. வீட்டுக்காரர் வர்றதுக்குள்ள சமைச்சி முடிக்கலைன்னா செவிட்டுல அறை விழுந்திரும்!

மல்லி: அப்புறம் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி செவிடாயிருவே!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community